Saturday, December 29, 2012

என் காதிலும் இஸ்கு ..... இஸ்கு என்றுதான் கேட்கிறது ஸ்வாமி.....!!

நண்பர்களே சமீபத்தில் ஒரு  காணொளி யைப் பார்த்தேன்  ஒரு கல் ஒரு கண்ணாடியில் வரும் காட்சிகளைப் போலவே இருக்கிறது.  இதில் தெலுங்கில் இருப்பதால்  ஒன்றும் புரியவில்லை.  அதில் வரும் சுவாமி பேசும் ஆங்கிலம் என் பரவச நிலைக்கு அழைத்துச் சென்று விட்டது.  முக்கியமாக பிரின்சி'பிள்', பாசி'பிள்', அவைல'பிள்' என்று அவர் 'பிள் ' ஐ உச்சரிக்கும் விதம் சூப்பர்.  பார்த்து இரசியுங்கள்.  இது போல நிஜத்தில் நடந்திருப்பதாக எ ன் சிற்றறிவுக்கு தெரியவில்லை.







நன்றி: http://www.cinekolly.com/

Thursday, December 27, 2012

உலகிலேயே மிகவும் விந்தையான விஷயம் எது?-யக்ஷனின் கேள்விக்கு யுதிஷ்டிரரின் பதில்கள்.


பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது ஒருமுறை காம்யவனம் என்னும் வனப் பகுதியில் வசித்து வந்தனர்.  அங்கு ஒரு முறை கொடிய வறட்சி ஏற்பட்டது.  அவ்வாறு இருக்கையில் ஒருநாள் மதியம் கடும் வெயில் நேரம், திரௌபதிக்கும் பாண்டவர்களுக்கும் கடும் தாகம் ஏற்ப்பட்டது.   தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த குளங்கள் அத்தனையும் வற்றிப் போன நிலை. யுதிஷ்டிர மஹாராஜா எங்கேயாவது குடிக்க தெளிந்த நீர் கிடைக்குமா எனத் தேடித் பார்த்து கொண்டு வரும்படி தனது தம்பி பீமனை ஒரு பானையுடன் அனுப்பினார்.  பீமசேனன் பானையை தூக்கிக்கொண்டு, நடந்தான்.  ஒரு இடத்தை நோக்கி பறவைகள் செல்வதும் திரும்புவதையும் வானத்தில் பார்த்து அதை  நோக்கி நகர்ந்தான்.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் கம கம என வாசனையடிக்கும் தெளிந்த நீரைக் கொண்ட அழகான ஒரு ஏரியைக் கண்டான்.  ரொம்ப நேரம் நடத்து வந்த களைப்பை போக்கிக் கொள்ள முதலில் தண்ணீரைப் பருகலாம்  என நினைத்து ஏரிக்குள் இறங்கி தண்ணீரில் கை வைக்கப் போனான்.  அப்போது, அங்கே ஒரு யக்ஷன் தோன்றினான்.

"நில், நீரைப் பருகும் முன்னர் என் கேள்விகளுக்குப் பதில் சொல், மீறினால் நீ உயிரிழப்பாய்" என்று இடியைப் போல அவன் குரல் வந்தது.  


யக்ஷனின் எச்சரிக்கையை உதாசீனப் படுத்திய பீமன் தனது இரண்டு கைகளாலும் நீரை அள்ளினான்.  பருகும் முன்னர் அப்படியே நினைவிழந்து வீழ்ந்தான்.  பீமனை அனுப்பி வெகுநேரமாகியும் திரும்பாததால் கவலையுற்ற யுதிஷ்டிரர் என்னவாயிற்று எனப் பார்த்து வர தனது அடுத்த தம்பியான வில்வித்தை வீரன் அர்ஜுனனை அனுப்பினார்.  அவனும் அவ்வாறே அதே ஏரியை அடைந்தான், அங்கே மயங்கிக் கிடந்த தனது அண்ணனைப் பார்த்தான்.  சரி முதலில் தாகத்தை தீர்ப்போம், அப்புறம் பார்ப்போம் என முயன்ற அவனுக்கும் யக்ஷன் தோன்றி தனது கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லச் சொன்னான்.  அதை பீமனைப் போலவே உதாசீனப் படுத்திய அவனுக்கும் அதே கதி ஏற்ப்பட்டது, தொடர்ந்து நகுலன் சகாதேவன் என நால்வரும் அனுப்பப் பட்டு ஒருவரும் திரும்பாத நிலை.  என்னதான் ஆயிற்று எனப் பார்க்க, யுதிஷ்டிர மகாராஜா தானே புறப்பட்டு ஏரிக்கரையை அடைந்தார் .

அங்கே கிடந்த தனது நான்கு சகோதரர்களையும் கண்டார்.  ஆயினும், முதலில் சிறிது நீரைப் பருகி தெம்பை வரவழைத்துக் கொண்டு அவர்களைக் கவனிப்போம் என ஏரியில் இறங்கி நீரில் கை வைக்கப் போனார்.  அப்போது அதே யக்ஷன் தோன்றி, "நீரைப் பருகும் முன்னர் எனது கேள்விகளுக்குச் சரியான பதில் சொல், மீறினால் உன் தம்பிகளுக்கு நேர்ந்த அதே கதி உனக்கும் நேரும்" என்றான்.  யுதிஷ்டிர மகாராஜா, "நீ உன் கேள்விகளைக் கேட்கலாம்" என்று  பொறுமையாகச்  சொன்னார்.



யக்ஷன்:  சூரியனை கிழக்கில் உதிக்கும்படிச் செய்வது யார்?

யுதிஷ்டிரர்:  எல்லா காரணத்துக்கும் காரணமான, தனக்கென்று ஒரு காரணமில்லாத இறைவன்தான்  சூரியனை கிழக்கில் உதிக்கும்படிச் செய்கிறார்.

யக்ஷன்:  பூமியினும் கனமானது எது?  வானினும் உயர்ந்தது எது?  ஒளியை விட வேகமாகச் செல்வது எது?  புற்களின் இதழ்களின் எண்ணிக்கையை விட அதிகமானது எது?

யுதிஷ்டிரர்:  ஒருவனின் தாய் பூமியை விட கனமானவள்,  ஒருவனின் தந்தை  வானினும் உயர்ந்தவர்,  ஒளியை விட வேகமாகப் பயணிக்கக் கூடியது மனம், மனதில் எழும் எண்ணங்கள் புற்களின் இதழ்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதல்.

யக்ஷன்:  உலகிலேயே மிகச் சிறந்த தர்மம் எது?  சகிப்புத் தன்மைகளிலேயே மிகவும் சிறந்தது எது?

யுதிஷ்டிரர்: கருணையே மிகச் சிறந்த தர்மம்.  இன்ப-துன்பம், லாப-நஷ்டம், பிறப்பு-இறப்பு போன்ற இரட்டை நிலைகளைத் தாங்கிக் கொள்வதுதான் சகிப்புத் தன்மைகளிலேயே மிகச் சிறந்ததாகும்.

யக்ஷன்: மனிதனின் வெல்ல முடியாத எதிரி யார்?  அவர்களின் தீராத வியாதி என்ன?  யார் புனிதமானவர், யார் புனிதமற்றவர்?

யுதிஷ்டிரர்: கோபமே மனிதனின் வெல்ல முடியாத எதிரி.  பேராசையே தீராத வியாதி.  எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவரே புனிதர், தனது புலன்களை கட்டுப் படுத்தாத கொடூரனே புனிதமற்றவன்.

யக்ஷன்: யார் மகிழ்ச்சியாக இருப்பார்கள்?  மிகப் பெரும் விந்தை எது?  உண்மையான பின்பற்றத் தக்க வழி எது?  எது செய்தி?

யுதிஷ்டிரர்: எவன் ஒருத்தனுக்கு கடன் இல்லையோ, எவன் ஒருவன் வெளியூரில் வசிக்கவில்லையோ, எவன் ஒருவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உணவு உண்ண முடிகிறதோ  அவனே மகிழ்ச்சியானவன். 

தினமும் சாவு என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.  ஆனாலும், வாழும் ஒவ்வொருவரும் தான் மட்டும் ஒருபோதும் சாகமாட்டோம் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.  இதுதான் உலகிலேயே மிகப் பெரும் விந்தையாகும்.

வாழ்வில் உண்மையான பின்பற்றத் தக்க வழியைக் கண்டுபிடிக்க வாத-விவாதம் உதவாது.  நீதி நூல்களும் எக்கச் சக்கம்.  முனிவர்களின் கருத்துகளும் ஆளாளுக்கு மாறுபடுகிறது.  தர்மத்தின் உண்மை மிக ஆழமானது. சான்றோர்கள் பின்பற்றும் வழியே சாலச் சிறந்தது, நாமும் அத்தகைய மகாஜனங்களின் அடியைப் பின்பற்ற வேண்டும். 

உயிரினங்கள் அனைத்தையும் காலம் தீச்சட்டியில் போட்டு, மாயை, பொய் கவர்ச்சி  ஆகியவற்றால் சிக்கவைத்து வருத்தெடுத்துக் கொண்டிருக்கிறது.  மாதங்கள், பருவங்கள் ஆகிய மாற்றங்கள், கரண்டியால் புரட்டுவதாகும்.  சூரியன் என்ற அடுப்பு, இரவு பகல் ஆகியவற்றை எரிபொருளாக கபளீகாரம் செய்து நம்மை சமைக்கிறது. இது ஒன்று மட்டும்  தான் மொத்தத்தில் செய்தியாகும்.

யக்ஷன்: அரசே!!  உமது பதில்களால் யாம் திருப்தியடைந்தோம்.  தற்போது உமது தம்பிகளில் ஒருவரை மட்டும் நீர் மீட்டு அழைத்துச் செல்லலாம்.  செப்பும், யார் வேண்டும் என்று!!


யுதிஷ்டிரர்: கரிய நிறம் கொண்ட என் தம்பி நகுலன் உயிரோடு வேண்டும்.

 யக்ஷன்:[இதைக் கேட்டு ஒரு  நிமிஷம் திகைத்துப் போகிறார்!!].  உமது தேர்வு என்னை வியக்க வைக்கிறது.  ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனைக் கேட்டிருக்கலாம் அல்லது வில் வித்தையில் யாருக்கும் சளைக்காத அர்ஜுனனைக் கேட்டிருக்கலாம், நகுலனை ஏன் தேர்தெடுத்தீர்?

 யுதிஷ்டிரர்: எங்கள் தந்தைக்கு இரு மனைவியர், குந்தி, மாத்ரி.  என் அன்னை பெயர் சொல்ல நான் இருக்கிறேன், எங்கள் சிற்றன்னை பெயர் சொல்ல அவள் வயிற்றில் பிறந்த ஒருவர் வாழ வேண்டும், அதற்காகத்தான் நகுலனை கேட்டேன்.

  யக்ஷன்: தர்மத்தின் வழி தவறாத உம் நடத்தையை யாம் மெச்சினோம், இதோ உங்கள் தம்பியர் அனைவரையும் திரும்பத் தருகிறோம், அழைத்துச் செல்லும்!!

அந்த யக்ஷன் வேறு யாருமல்ல.  தர்மராஜா எனப்படும் எமதர்மனே தான்!!

சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்கார் விருது வாய்ப்பு



"மேலே இருக்கும் படத்தில் வலது புறம் இருப்பது யாரு?" அப்படின்னு கேட்டா, "இதெல்லாம் ஒரு கேள்வியா, அவருதான் ஹிந்தி சூப்பர் ஸ்டார் என்று சின்னக் குழந்தையும் சொல்லுமே" என்பீர்கள்.   அவர் ஒரு தலை சிறந்த நடிகர் அப்படின்னு மட்டும்தான் நீங்க நினைச்சுகிட்டு இருந்திருப்பீங்க.  ஆனா, அது உண்மையில்லை!!  அவர் நடிக்கவும் செய்கிறார் என்பதென்னவோ உண்மைதான், ஆனால் அவர் நடிகர் இல்லை.  முதன்மையில் அவர் சேற்றில் விழுந்து பாடுபடும் ஒரு ஏழை விவசாயி!!  விவசாயம் தான் அவர் உயிர் மூச்சே. நடிப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். இதை வேற யாரும் சொல்லவில்லை, அவர் வாயாலே சாரி........  எழுத்தால சட்டத்துக்கு முன்னாடி தெரிவித்த தகவல்தான் இது!  "ஐயய்யோ, அப்ப இடதுபக்கம் குடை பிடிச்சுகிட்டு நிக்கிறவர் யாரு? தோட்டக்காரனா?"  அதைப் பத்தி தானே இந்தப் பதிவில் பார்க்கப் போறோம்!!  அதுசரி ரெண்டுபேரும் கையில என்னமோ வச்சிருக்காங்களே அது என்ன?  அது ஊட்டச் சத்து மிக்க பானம், இதைக் குடிச்சா எழும்பெல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா ஆயிடுமாம். அதை கிழவனும் குடிச்சிட்டு தெம்பா இருக்கலாம்னு விவசாயி சொல்றாரு, இன்னொருத்தர், இதில் பத்து பாட்டில் தினமும் உள்ளே தள்ளுவது  தான் "சீக்ரெட் ஆ ஃ ப்  மை எனர்ஜி"  அப்படிங்கிறார்.  [காசை வீசி எரிஞ்சா பொறுக்கிக்கிட்டு நாய் மூத்திரம் நல்லதுன்னு சொல்றதுக்கும் ஆளுங்க ரெடியா இருக்காங்க, அதப் பாத்திட்டு தண்ணீருக்குப் பதிலா  நாய் மூத்திரமே தான் வேணுமின்னு தேடித் தேடி காசு குடுத்து வாங்கி குடிக்க நாம் இருக்கோம்.]

சரி அதெல்லாம் போகட்டும்.  விஷயத்துக்கு வருவோம்.   இப்போ நாம் பார்க்கப் போவது, 2001-02 மற்றும் 2004-05 நிதியாண்டுகளில் நடந்த ஒரு சங்கதி.  டெண்டுல்கர் அந்த வருடங்களில் ESPN Star Sports, PepsiCo மற்றும் Visa ஆகிய நிறுவனங்களில் இருந்து தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்ததற்காக அந்நிய செலாவானியாக [Foreign currency] Rs.5,92,31,211 [ரூபாய் ஐந்து கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்தி சொச்சம்] பெற்றிருக்கிறார்.  இந்த வருமானத்திற்காக அவருக்கு வருமான வரியாக ரூ.2,08,59,707 [ரூபாய் இரண்டு கோடியே  எட்டு லட்சத்தி சொச்சம்] செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறையினர் [(CIT-A)- Commissioner of Income Tax-Appeal] நோட்டிஸ் விட்டனர்.

இதை எதிர்த்து நம்ம பூஸ்ட் மட்டும் குடிக்கும் பாப்பா என்ன பண்ணுச்சு தெரியுமுங்களா?  ஐயா, இந்த  CIT-A எனக்கு கிரிக்கெட் ஆடுவது தான் முதல் தொழில்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காருங்க.  அது நெசமில்லீங்க.  அடிப்படையில நான் ஒரு கலைஞனுங்க, நடிப்புதான் பிரதான தொழிலுங்க.  கிரிக்கெட்டெல்லாம் அப்புறம்தானுங்க.  அதனால என்னோட தொழில் மூலமா சம்பாரிச்ச பணத்துக்கு u/s 80RR of the Act படி வரிச்சலுகை குடுங்க அப்படின்னு கேட்டுச்சு.  இதை விசாரிச்ச ஆணையமும், "ஆமாங்க இவர் ஒரு நடிகர்தான், நடிப்பு எல்லாத்தலும் முடியாது, மூஞ்சியில பவுடரை பூசிகிட்டு, வெப்பத்தை உமிழும் மின் விளக்குகள் முன்னாடி நின்னு சொந்தக் கற்பனை, படைப்பாற்றல் எல்லாம் பயன்படுத்தி நடிச்சு தெறமையைக் காட்டி மக்களை கவர்வது லேசு இல்ல, இவரு நெசமாவே நல்ல நடிகன் தான்" அப்படின்னு சான்றிதழ் குடுத்து கேட்ட இரண்டு கோடி சொச்ச வரிச்சலுகையும் குடுத்துடுச்சு!!  அதனால, இன்னைக்கு TV விளம்பர நடிகரா தொழில் பண்ணும் இவர் நாளைக்கு ஹாலிவுட் படத்தில வாய்ப்பு வந்து நடிச்சு தெறமை காட்டி ஆஸ்கார் கூட வாங்கினாலும் ஆச்சரியப் பட என்ன இருக்கு?  ஒரு நாள் போட்டியில் ஓய்வு பெறுவதை அறிவித்த போது இவர் கண்ணீர் விட்டிருக்காரு.  அது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை நினைத்த வருத்தத்தாலா, சினிமாவில் வருவது மாதிரி நடிப்பா, இல்லை கிரிக்கெட் ஆடும் வாய்ப்பை  இழந்து விட்டோமே, இனிமே இந்த அளவுக்கு விளம்பரங்களில் நடிச்சு பணத்தை மேலும் சேர்ப்பது இயலாதேன்னு துக்கமாங்கிறது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

செய்திகள் சுட்டி 1 சுட்டி2


இன்னொரு நிகழ்வையும் நாம் இங்க சொல்லணும்.  இது 2002-03 வாக்கில் நடந்தது.  அப்போது டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மாபெரும் கிரிகெட் வீரர் மறைந்த டான் பிராட்மன் அவர்களின் டெஸ்ட் சாதனையான 29 சதங்களை சமன் செய்தார்.  இதைப் பாராட்டி ஃபியட் நிறுவனம் அவருக்கு  '360 Modena Ferrari' என்ற 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசளிக்க விரும்பியது. காரை சும்மா குடுக்க அவன் என்ன இனா வானாவா?  டெண்டுல்கர் மைக்கேல் ஷூ மேக்கர் என்னும் கார் ரேஸ் வீரருடன்  இணைந்து அந்தக் காரின் விளம்பரத் தூதுவராகவும் இருப்பார்.  2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தில்,  சில்வர்ஸ்டோன்  என்னுமிடத்தில் இருவரும் சந்தித்த போது  ஷூ மேக்கர், ஃபியட் சார்பில் டெண்டுல்கருக்கு அந்தக் காரை பரிசளித்தார்.


அதை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டுமே?  ஆடு அரைப்பணம், ......க்கு  முக்கால் பணம் என்னும் கிராமத்து பழமொழி இங்கே வேலை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கார் கிரிக்கெட் விளையாடி பரிசாகப் பெற்றது அல்ல.  எனவே அதை இந்தியாவுக்குள் கொண்டு வர அதன் விலையில் 120% வரியாகச் செலுத்த வேண்டும்.  அதாவது ஒரு கோடியே பதிமூணு இலட்சம் ரூபாய்கள்.  ஒன்னும் தெரியாத நம்ம பாப்பா குடுக்குமா?  வரிச்சலுகை கேட்டுச்சு.  நிதியமைச்சகமும் என்னென்னமோ பண்ணி 2003 ஆம் வருடம் சலுகை கொடுத்தது.


நம்ம பாப்பா சில வருடங்கள் அந்தக் காரை வச்சிருந்து விட்டு அப்படியே சூரத்தில் இருக்கும் ஜெயெஷ் தேசாய் என்ற ஒரு வியாபாரிகிட்ட அதைத் தள்ளிட்டு காசாக்கிடுச்சு.  டேய் எவ்வளவுடா குடுத்தேன்னு அவனைக் கேட்டா, "இந்தாபா, காரைப் பத்தி என்ன வேணுமின்னாலும் கேளு, ஆனா எம்புட்டு குடுத்தே, அந்த பாசக்கார பூஸ்டு பேபிய உனக்கு எப்படி தெரியும், அது இதுன்னு கேட்கிறா மாதிரியா இருந்தா எடத்தை காலி பண்ணு" அப்படிங்கிறான்.  அவனுக்கு இதே காரை புதுசாவே வாங்க முடியுமாம்.  ஆனாலும், மைக்கேல் ஷூ மேக்கர்,  டெண்டுல்கர் அப்படின்னு ரெண்டு கர்.... கர்.... சம்பந்தப் பட்ட இதை நான் புர்.... புர்.... என்று ஓட்டினா அதுவே போதும், வாழ்வே வெற்றிங்கிறானாம்!!

இது குறித்த சுட்டி.






Wednesday, December 26, 2012

கற்பழிப்புக்கு கொடிய தண்டனை வழங்குவதில் நம்மை யாராலும் மிஞ்ச முடியாது

கற்பழிப்புக்கு தற்போதுள்ள தண்டனைகள் போதாது, மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட வேண்டும் என்று பதிவுலகில் பற்பல யோசனைகளை நித்தமும் நம்மவர்கள் வழங்கி வருகிறார்கள்.  அவற்றில் சில கற்ப்பழிப்பவனின் மர்ம உறுப்பையே வெட்டி போடுதல், ஆடு மாடுகளுக்கு செய்வது போல கா.......டித்தல் என்று பல விதமாக நம்ம மக்கள் ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள்.  இந்த மாதிரி சூழ்நிலையில் நமது கிராமப் புறங்களில்  பாரம்பரியமாக வழங்கப் பட்டு வரும் ஒரு தண்டனை நினைவிற்கு வந்தது, அதை இங்கே பகிர்கிறோம்.

பொதுவாக நகைகள், பணம் போன்றவற்றை திருடுவதில் ஒருத்தன் ஈடுபட்டால் என்ன செய்கிறோம்?  முதலில் அவனைக் கண்டுபிடிப்போம் பின்னர் அவனிடமிருந்து களவாடப் பட்ட பொருளை மீட்போம், அதற்குப் பின்னர் சில இடங்களில் அவனை மரத்தில் கட்டி வைத்து நையபுடைப்பதும் உண்டு, அல்லது சட்டத்தின் கையில் ஒப்படைப்போம்.

ஆனால், கற்பழிப்புக்கு மிகவும் கொடிய தண்டனையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.  இதை ஏன்டா செய்தோம் என்று அவன் சாகும் வரை வருந்தும் வண்ணம் தண்டனை இருக்க வேண்டும், அதைப் பார்த்து வேறு எவனும் அந்த மாதிரி தப்பை செய்ய கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது.  இதற்க்கு மிகச் சரியான தண்டனையை நமது கிராமப் புறங்களில் கொடுப்பார்கள்.  அது என்ன என்று பார்ப்போம்.

கிராமப் பகுதிகளில் திருமணமாகாத ஒரு வாலிபன் ஒரு பருவ மங்கையை வலுக்கட்டாயப் படுத்தி கெடுத்து விட்டால் என்ன செய்வார்கள்?  அந்தப் பெண்ணை பிடித்து அவனுக்கே திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.  இதன் அர்த்தம் என்ன?  நீ பண்ணிய தப்புக்கு இதுதாண்டா தண்டனை. இதுக்கு மேல நரகத்திலும் உனக்கு கொடிய தண்டனை கிடைக்காது.  காலம் பூராவும் அழுது சாவு.  மேலும் இதைப் பார்ப்பவன் கனவிலும் இந்த தப்பை செய்ய மாட்டான்.  இந்த தண்டனை தான் மிகச் சரியான தண்டனை என்பது நமது கருத்தும்.  எப்பூடி........

அய்யய்யோ யாரோ அருவாளை தூக்குறாங்க...........  ஓடு........... ஓடு...........

 அந்தமான் கண்கவர் ஷாப்பிங் படங்கள், தங்குமிடம் மற்றும் மேலதிகத் தகவல்கள்

ஷாப்பிங்............

அந்தமான் டூர் பகுதி 1 , பகுதி 2, பகுதி 3 பகுதி 4

முதல் நாள் Corbyn's Cove பீச்சில் நாங்கள் பார்த்த கடை.  இங்க தான் முத்து மாலை இரண்டு வாங்கினோம். இங்கே பவள மாலைகளும் உள்ளன.  பீச்சில் பார்க்கும் எல்லா கடைகளிலும் நீங்கள் முத்து, பவள மாலைகளை வாங்கலாம்.  ஹேவ்லாக் பீச்சில் நாங்கள் வாங்கத் தவறி விட்டோம், அங்கும் நன்றாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.

முத்து மாலைகள் இரண்டின் விலை 200 ரூபாய்!!



கடைசி நாளன்று ஒரு பெரிய கடைக்கு அழைத்துச் சென்றார்கள்.   எதுவும் வாங்கவில்லை.  எங்க கூட வந்தவங்க வாங்கினாங்க, நான் கருமமே கண்ணாகி பதிவில் போட படம் மட்டும் எடுத்தேன், ஹி ......ஹி ....ஹி........
இதில ஒன்னை எடுத்துகிட்டா அந்தமான் முழுசும் குடும்பத்தோட சுத்திப் பார்க்கலாம்!!  

ஜார்வா ஆதிவாசிகளின் பொம்மைகள்.  நேரிலும் இப்படியேதான் இருப்பாங்க!!


முத்து, பவள மாலைகள்.



வளையல்கள்.  [நீ சொல்லாமலேயே எங்களுக்கு தெரியாதா.......??]









அந்தமானில் பல இடங்களில் பாக்குத் தோப்புகளைப் பார்க்க முடிகிறது.  பாக்கு காய்களை முற்றிலும் பழுக்க வைத்து செக்கச் செவேல் என ஆன பின்னர் பறிக்கின்றனர்.  தோலுரித்த பின்னர் கொட்டை பாக்கு எலுமிச்சை சைசுக்கு இருக்கு!!

அந்தமானில் செவ்விளநீர், சாதா இளநீர் மற்றும் வெள்ளை நிற இளநீர்க் காய்களும் கிடைக்கின்றன.  தண்ணீர் சுவையோ சுவை, நிரப்பினால் ஒரு லிட்டர் வரும்!!

தங்குமிடம் 

நாங்கள் தங்கியிருந்த விடுதி.  நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.1000/-  [தங்குதல், உணவு, சுற்றிப் பார்த்தல், ஆங்காங்கே நுழைவுக் கட்டணங்கள் எல்லாமும் சேர்த்து.  Havelock செல்ல கட்டணம் ரூ.800/- தனி, Vegetarian மட்டுமே வழங்கப் படும், உங்களுக்கு வேறு உணவுகள் வேண்டுமென்றால் வெளியில் பார்த்துக் கொள்ள வேண்டும்.]


விடுதியில் எங்கள் அறை, A /c அறைகளுக்கு கட்டணம் கொஞ்சம் அதிகம்.

விடுதியின் சாளரம் வழியே எட்டி வெளியே பார்த்தால்.......
Darrshan Tours & Travels: இங்கே சவுகரியமாக இருக்கிறது, உணவு பரவாயில்லை, பெரும்பாலும் வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் அங்கேயே உணவு வழங்கினர், அவை சுத்த மோசம்.  இவர்களின் வண்டியிலும் [பதினைந்து பேர் செல்லும் Mazda மாதிரி வண்டிகள்] ஆயில் நாற்றம்.  Tata சுமோ/கார்  போல தேர்ந்தெடுத்துக் கொள்வது நலம்.  அந்தமானை ஆசை தீரப் பார்க்க குறைந்த பட்சம் ஐந்து நாட்களாவது தங்க வேண்டும்.

Mr.Raghu
Darrshan Tours & Travels
The contact numbers are: 993208  2266    /2966     /3066       /3166

9933281533, Landline: 03192-235484

நாங்கள் பார்க்கத் தவறிய முக்கிய இடங்களில் சில:


1. Jolly buoy பீச்.  Scuba Diving சுட்டி.

2. Parrot Islands [Bara Tang]

3. உள்ளூர் அருங்காட்சியகங்கள் [Museums] & மீன் காட்சியகங்கள் [Aquarium] .

அந்தமான் சுற்றுலாவை அழகாக படம் பிடித்து 6 பகுதிகளாக YouTube-ல் பதிவேற்றியுள்ளார்கள், அவசியம் பாருங்கள்.  

Part 1 Part 2 Part 3 Part 4 Part 5 Part6

Monday, December 24, 2012

யானையைப் போல துதிக்கை வேற விலங்குகளுக்கு உண்டா?

Elephant Shrew


எலிஃபண்ட் ஷ்ரு [Elephant Shrew]


மேல படத்தில் உள்ளது தான் Elephant Shrew என்னும் ஒரு குட்டியான பாலூட்டி இனம்.  இதுக்கு ஏன் அந்த பேரு வந்துச்சுன்னு விளக்கவே தேவையில்லை, மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும்!! இவை ஆப்பிரிக்காவில் மட்டுமே வாழ்கின்றன மொத்தம் 20 இனங்கள் உள்ளன.
இவற்றால் தாவரங்களையும் உண்ண முடியும், ஆனாலும் பூச்சிகளையே முடிந்த அளவுக்கு தேடித் தேடி உண்கின்றன!!

தலைவர் டயர்டு, கொட்டாவி விடுராரு!!
இவற்றை சில பாம்புகளும், பருந்துகளும் கண்டால் விருந்தாக்கி விடுவாம், ஆனால் எளிதில் சிக்காதாம்!! 
எலிஃபண்ட் ஷ்ரு காணொளி.

காண்டாமிருக வண்டு!! [Rhinoceros beetle, Oryctes Nasicorni]

உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்த உயிரினம் இந்த வண்டு தான்.  எப்படி ??  தன்னைப் போலவே 850 பங்கு எடையை இதனால் தூக்க முடியும்.  அதாவது ஒரு ஆள் ஒன்பது பெரிய ஆண் யானகளை தூக்கினா எப்படி இருக்கும்?  அதற்க்குச் சமமாம் இது!!
மேலும் அறிந்து கொள்ள சுட்டி.

Rhinoceros beetle காணொளி.







குவாக்கா, இவை ஆஸ்திரேலியாவில் காணப் படுகின்றன.  கங்காருவைப் போலவே வயிற்றில் குழந்தைகளைச் சுமக்கின்றன.

இந்த படத்துல குவாக்கா தெரியாதே, அக்காவை மட்டும்தானே தெரியும்!! வாயைத் துடச்சுக்குங்க பாஸ்.......!!




இது Leopard. இதனோட தோலை போல ஓட்டை கொண்ட ஆமை இருக்கு.


இதன் பெயர் Leopard Tortoise.  இது ஆப்பிரிக்காவில் காணப் படுகிறது.  70 செ.மீ. நீளம் வளரக்கொடியது, நடுத்தர ஆளோட எடை இருக்கும்!!  இது நல்ல ரசம் சொட்டும் புல் வகைகளை விரும்பி உண்ணும். 
Leopard Tortoise இந்த கானொளியில் இலைகளை ஒரு பிடி பிடிக்கிறார்!!

மேற்கண்ட தகவல்களைத் திரட்டும்போது, விதம் விதமான விலங்குகளைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு அழகிய வலைப்பூ சிக்கியது.   நிச்சயம் உங்களுக்கு விருந்தாக அமையும், பாருங்கள்.

True Wild Life

Sunday, December 23, 2012

மூன்று வண்ணங்களில் நீர்!! அழகிய Havelock கடற்க்கரை- அந்தமான் டூர் -4

அந்தமான் டூர் பகுதி 1 , பகுதி 2, பகுதி 3

அந்தமானில் நான்காம் நாள் நாங்கள் சென்ற இடம் ஹேவ்லாக் [Havelock] கடற்கரை.  இது போர்ட் பிளேரில் இருந்து 67 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு தீவு.  இதற்க்கு படகில் செல்ல இரண்டு மணி நேரம் பிடிக்கும்.  இங்கு செல்ல காலை ஐந்து மணிக்கே புறப்பட வேண்டும். இங்கே சென்று வர டிக்கெட் ஏஜென்டே தயார் செய்துவிடுவார், நம்மால் முடியாது!!  போய்வர 250 ரூபாய், ஆனால் அது இது என்று நம்மிடம் ரூ.600 -800 வாங்குகிறார்கள்.

ஹேவ்லாக் செல்லும் படகுகள் இங்கிருந்துதான் புறப்படுகின்றன.
ஹேவ்லாக் செல்லும் வழியில் தொலைவில் நார்த் பே [North Bay] தீவு.  இதன் படம் தான் 20 ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ளது என டூர் பகுதி 1-ல் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்.


அரசுப் படகு என்பதால் சுதந்திரமாக நீங்கள் மேல் தளத்திற்க்குச் செல்லலாம்.  மையத்தில் உள்ள கதவு வழியாகச் சென்றால் கேப்டனையும் அவரது குழுவையும் சந்திக்கலாம், கப்பல் எப்படி செலுத்துவது என்று முடிந்தால் நீங்கள் அவர்களுக்கு சில டிப்ஸ் கொடுத்துவிட்டும் வரலாம்!!

இவர்தான் நாங்கள் சென்ற படகின் கேப்டன்.  இங்கிருந்து சற்று முன்னாள் சென்று டைட்டானிக் படத்தில் வருவது போல ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம்!!


ஹேவ்லாக் படகுத் துறையை அடைந்த பின்னர் எங்களுக்கு பின்னால் வந்த இன்னொரு படகு. 

ஹேவ்லாக் தீவு தங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஹேவ்லாக் படகுத் துறையில் காலை உணவை முடித்துக் கொண்டு கார்கள் மூலம் ஹேவ்லாக் ராதாநகர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம்.   இது தான் கடற்கரையின் நுழையும் பகுதி.  அடர்ந்த மரங்கள் நிறைந்துள்ளது, வெயில் ஊடுருவ இயலாத அளவுக்கு மர நிழலே முற்றிலும் சூழ்ந்த ரம்மியமான இடம்!!

ராதாநகர் கடற்க்கரை....!!  இதன் அழகைப் பார்த்தவுடன் என்னால் ஒரு படத்தோடு நிறுத்திக் கொள்ள முடியவில்லை. 

கொஞ்சம் கொஞ்சமாக கடைகரையை நெருங்கும் போது ..........

நீரைத் தொட்டபோது......  முதலில் தெளிந்த நீர்...[Transparent], அப்படியே சற்று நிறம் மாறி பச்சை வண்ணம், இன்னமும் தூரத்தில் பார்த்தால் நீல வண்ணம்!!

இந்தக் கடற்கரையில் தூய்மையான நீர் என்பது மட்டுமல்ல, அலைகள் மிகவும் மென்மையாக உள்ளன.  நீச்சலே தெரியாவிட்டாலும் உங்கள் கழுத்துவரை நீர் இருக்கும் ஆழம்வரை கூட நீங்கள் சென்று நின்று கொண்டு விளையாடலாம், ஒன்றும் செய்யாது!!  இந்தப் பகுதிகளில் இரண்டு நாள் முதல் வாரக்கணக்கில் கூட சிலர் தங்கி என்ஜாய் செய்கிறார்கள்.  தோலைக் கருப்பாக்க  [Tanning] Sun Bath செய்யும் வெளிநாட்டவர்களையும் காண முடிந்தது.


இராதாநகர் கடற்கரையில் நான் எடுத்த காணொளி.


அதற்க்கு முதல் நாள் ஜர்வா ஆதிவாசிகளைப் பார்த்த விளைவு!!  இங்கு பீச் மணல் வெண்மை என்பதும் சிறப்பு!!


NDTV ஒரு கில்மாவை அழைத்துப் போய் இந்த பீச்சில் Scuba Diving போக வைத்து எடுத்திருக்கிறார்கள்.  குழந்தைகளோடு பார்க்கும்போது கவனமாக இருக்க வேண்டுமாம்.  பார்க்கும்போது பெரிய துணியை கையில் வைத்துக் கொண்டேன்.  [வேறெதற்கு அவ்வப்போது வாயைத் துடைத்துக் கொள்ளத் தான்!!]

கடற்கரையில் அழகிய கொட்டகை.

இம்மாதிரி கொட்டகைகளின் கூரை இப்படித்தான் உட்புறத்தில் இருக்கும்.

இந்த மாதிரி செடிகள் அந்தமானில் திரும்பிய புறமெல்லாம் உள்ளன.  இவற்றைக் கொண்டே அவர்கள் கொட்டகைகள் வேய்கிறார்கள்.



ஹேவ்லாக் இராதாநகர் கடற்கரையில் இருந்து திரும்பும்போது.........

படகுக்காக ஹேவ்லாக் படகுத் துறையில் காத்திருக்கும்போது.........  இந்தச் செடிதான் சேப்பங்கிழங்கு செடியாம்  அந்தமானில் இதுவும் நிறைய காணப் படுகின்றன.


ஹேவ்லாக்கில் இருந்து போர்ட் பிளேருக்கு படகில் ஏறும் போது சூரியன் அஸ்தமனம்.  அப்போது மணி 5 தான் இருக்கும்!!

போர்ட் பிளேர் படகுத் துறை.

அடுத்த நாள் விமானத்தில் அந்தமானில் இருந்து புறப்பட்ட போது.


சென்னையில் தரையிறங்கும் முன்னர்.

சென்னை விமான நிலையம்.
சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

இத்தோடு அந்தமான் பயணக் கட்டுரை முடிகிறது.  இந்தப் பதிவுடன் ஷாப்பிங் பற்றிய படங்களையும் சேர்க்கலாம் என நினைத்திருந்தேன், பதிவின் நீளம் கருதி அதை அடுத்த பதிவில் வெளியிட நினைத்துள்ளேன்.  சற்றே பொறுத்துக் கொள்ளவும்!!