Tuesday, February 25, 2014

சினிமா கதைகள்- எங்கேயிருந்து உருவப் பட்டன? -லிஸ்ட்.


வணக்கம் மக்கள்ஸ்!!

நாமும் தமிழ் திரைப்படம் ஒன்றுக்காவது ஆஸ்கார் விருது வராதா?  தமிழராய் பிறந்ததற்காக பெருமை பட்டுக் கொள்ள முடியாதா என்று வெகு வருடங்களாய் ஏங்கிக் கிடந்தோம்.  ஆஸ்கார் எப்படியும் வாங்கி சாதிப்பாரு என்று சிலருக்கு ஆஸ்கார் நாயகன் என்றெல்லாம் பட்டம் கொடுத்து பார்த்து மகிழ்ந்தோம்.  சப்தமில்லாமல் அதைச் சாதித்து நம்மை ஏ ஆர் ரஹ்மான் திக்குமுக்காடச் செய்து விட்டார் என்பது ஒருபுறம் இருந்தாலும் ஏன் நேரடித் தமிழ்ப் படத்திற்கு இன்னமும் ஆஸ்கார் கிடைக்கவில்லை என்ற கேள்வி இன்னமும் நம்மை தூங்கவிடாமல் செய்து கொண்டிருப்பதும் உண்மை.  அதற்கான விடை கிடைத்துள்ளது.

ஆஸ்கார் விருதுக்கு முக்கியமாக வேண்டிய தகுதி  அந்தப் படத்தின் வேலைகள் அனைத்திலும் ஆங்கிலத்தில்  Originality எனப்படும் சுயத் தன்மை இருக்க வேண்டும்.   அதாவது ஊரைச் சுத்தி எடுக்கப் படும் படங்களின் கதைகளை எடுத்து தன்  ஊருக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் டிங்கரிங் வேலை பண்ணி அதையே ஆஸ்காருக்கு அனுப்பினால் பருப்பு வேகாது.  மூஞ்சி மேல காறித் துப்பி, திரும்பி நில்லுடா என்று சொல்லி பம்ஸ் மேல எட்டி உதச்சு விரட்டி விட்டு விடுவான் வெள்ளைக் காரன்!!  The God Father படத்தை அந்த மாதிரி எடுத்து கொண்டு போய் காமிச்சவனுக்கு அதுதான் நடந்தது.  வில்லனை அடித்து கீழே தள்ளி, பின்னர் சுத்தியலால் அவனைத் தாக்கும் சமயத்தில் ஒரு தண்ணீர் குழாய் உடைத்து தண்ணீர் வெகு உயரத்துக்கு பீச்சியடிக்கும் காட்சியைப் பார்த்த வெள்ளைக்காரன், இது தான் The God Fatherபடத்திலே பார்த்திட்டோமே இன்னொரு தடைவையா? -என்று கேட்டு காறித் துப்ப அதையும் வாங்கிக் கொண்டு வந்து ஒன்னுமே நடக்காத மாதிரி இன்னமும் ஊரை ஏமாத்திகிட்டு இருக்கான் ஒரு மானங் கெட்டவன்.


அப்படியானால் நம்மாளுங்களுக்கு ஒரிஜினாலிட்டி இல்லை என சொல்ல வருவதாக நீங்கள் நினைத்தால் அது தவறு!!  சொல்லப் போனால், கதையை  யோசித்து மூளையை செலவு செய்து [அங்க யாருப்பா களிமண்ணிலா படத்தை எடுப்பாங்கன்னு பேசுறது?  சும்மா இருக்க மாட்டீங்களா?] படத்தை எடுக்கிறார்கள்.  இதன் கதைகளை அதன் பின்னர் வெள்ளைக்காரனும் உலகில் உள்ள எல்லா பயலுவலும்  சுட்டு இங்கிலீஷில் படத்தை எடுத்து எல்லா அவார்டுகளையும் வாங்கிடறானுங்க.  ஆனா, அதெப்படி நம்மாளுங்க படம் ரிலீஸ் பண்றதுக்கு ரெண்டு வருஷம், அஞ்சு வருஷம், பத்து வருஷம், இருவது வருஷம்ன்னு முன்னாடியே அவனுங்க வெளியில உட்டுடுறானுங்கன்னு தான் புரியல.

சில வருடங்களுக்கு முன்னாடி வந்த ஜக்குபாய் என்ற அமர காவியத்தைக் கூட ஒரு பாவி பய சுட்டிருக்கான்.  எப்பேர்பட்ட படம் அது?  அந்த படம் ரிலீஸ் ஆவறதுக்கு முன்னாடியே முப்பதாயிரம் திருட்டு சி.டி க்களை ஒருத்தன் போட்டு விற்கப் பார்த்திருக்கான்.  படத்தின் கதி இப்படி ஆயிடுச்சேன்னு பத்திரிகையாளர்களை கூப்பிட்டு வச்சு படத் தயாரிப்பாளர் அம்மா ஒப்பாரி வைக்க, இன்னொரு பக்கம் திருட்டு சி.டி யை ஒரு பயலும் வாங்காமல் விட அதை எடுக்க போட்ட பணம் கூட எடுக்க முடியலையேன்னு அவன் தலை மேல துண்டு போட்டுக் கொண்டு அழுத ஒப்பற்ற படம்.  அந்தப் படத்தின் கதையைக் கூட ஒருத்தன் ஆட்டைய பொட்டிருக்கன்னா பார்த்துக்கோங்க, நம்மாளுங்க எவ்வளவு ஏமாளிங்களா இருந்திருக்காங்கன்னு!!

முதலில் இந்த மாதிரி கதைத் திருட்டு நடக்காமல் நம்மாளுங்க தடுக்க வேண்டும்.  நம்மாளுங்க உழைப்பை வேற எவனோ லவட்டிகிட்டு போய் வருஷா வருஷம் ஆஸ்கார் வாங்கிகிட்டு இருக்கான்.  அதைத் தடுக்க வேண்டும்.  இப்போ இங்கே 1949 ஆம் ஆண்டு வந்த நல்ல தம்பி படத்தில் இருந்து, சமீபத்தில் வெளியான தெய்வத் திருட்டுமகள் ............  சாரி.......  தெய்வத் திருமகள் படம் வரைக்கும் வெள்ளைக்காரனுங்க ஆட்டையப் போட்ட படங்களின் லிஸ்டு இருக்கு.  இது முழுசுன்னு சொல்லறதுக்கில்ல, தெரிஞ்சு இம்புட்டுன்னா தெரியாம இன்னும் எம்புட்டோ, யாரு கண்டது?



கதை மட்டுமல்ல, திரையிசை என்று பார்த்தாலும் இந்த கூத்து தொடர்கிறது.  மெல்லிசை மன்னர் MSV யில் துவங்கி, இளையராஜா, தேவா, ரஹ்மான் வரைக்கும் ...........  எல்லாம் ஒன்னேதான்!!

இந்த யோக்யதையில் இருந்தா ஆஸ்கார் எங்கேயிருந்து வரும்?  எவனாச்சும் உள்ளூர்க்காரன் "பத்மா புருஷன்", வீரன், சூரன் என்று விருது குடுத்து, மவனே அதை பேருக்கு முன்னாடி, பின்னாடி, மேலே, கீழேன்னு எங்கேயாச்சும் தெரிஞ்சோ தெரியாமலோ போட்டா நீ தொலைஞ்சே, திரும்ப பிடுங்கிக்குவோம்னு சொன்னாலும், ஒரு ரயில்வே டிக்கட்டு புக் பண்ணக்  கூட உதாவாத அந்த வெங்காய விருதையே வாங்கி வச்சுகிட்டு சந்தோஷப் பட்டுக்க வேண்டியது தான்.  இதை உணர்ந்த ஆஸ்காருக்குன்னே பிறந்த நாயகன் சொன்னார், "நாம் ஆஸ்கார் எதற்கு வாங்கணும்?  நாம் விருது வழங்க ஆரம்பிப்போம் வெள்ளைக்காரன் இங்கே வந்து அந்த விருதை வாங்கி பெருமையடையும்படி செய்வோம்" -என்று போகாத ஊருக்கு வழி சொல்லிவிட்டு அமுங்கி விட்டார்.




நல்ல தம்பி-Mr.Dead goes to Town

சாந்தி நிலையம்- The Sound of Music

சிவகாமியின் செல்வன்- To Each of His own

ஆஸ்கார் நாயகன்:

 ராஜபார்வை -Butterflies are Free (1972) [கதை]
                             -‘The Graduate’ (1967) [கிளைமேக்ஸ்]

எனக்குள் ஒருவன்  -’The Reincarnation of Peter Proud (1975)


இந்திரன் சந்திரன்’Moon Over Parador (1988)’ &  The Magnificent Fraud

வெற்றிவிழா – ‘Bourne Identity’ என்ற நாவல்

குணா- Tie me up tie me down ! [Spanish] & Rain Man [1988]

நம்மவர்- Class of 1984 & To Sir with Love (1967)

மகளிர் மட்டும் -Nine to Five (1980)

சதி லீலாவதி –  She – Devil (1989)’

அவ்வை சண்முகி – Mrs. doubtfire  & ‘Tootsie (1982)’

பஞ்ச தந்திரம் –’Very bad things (1988)

தெனாலி –‘What about Bob

ஹே ராம்- ‘Barabbas (1961)’

விருமாண்டி -Life of David gale

நாயகன், தேவர் மகன்- The God Father

சூரசம்ஹாரம்- Witness

மகாநதி-Hardcore

மன்மதன் அம்பு- Romance on the High Seas

நளதமயந்தி- Green Card

வசூல் ராஜா MBBS -Patch Adams

அன்பே சிவம்- Planes, Trains & Automobiles

பம்மல் K சம்பந்தம் - The Bachelor

கெளதம் வாசுதேவ் மேனன் 


காக்க காக்க - The Untouchables

வேட்டையாடு விளையாடு- (1) 15 Minutes, (2) The Bone Collector and (3) Mystic River

வானரம் ஆயிரம்- Forest Gump

விண்ணைத் தாண்டி வருவாயா- 500 days of Summer

பச்சைக் கிளி முத்துச் சரம்- Derailed

மணி ரத்னம் 


ரோஜா- Sun Flower

நாயகன் - The God Father

திருடா ...திருடா.......- Butch Cassidy & the Sundance KID

அலைபாயுதே- Bare Foot in the Park

ஆய்த எழுத்து - Amores Perros

 ஷங்கர் 


எந்திரன் - Bicentennial Man & iRobot

அந்நியன் -Se7en

வெங்கட் பிரபு 

சரோஜா- Judgement Night

கோவா- Road Train

K V ஆனந்த் 

கோ-State of Play

அயன்- Maria Full of Grace


 மற்றவை:


வாமணன்- Enemy of the State

யோகி- Tsotsi

அருணாச்சலம்- Brewsters Millioners

மைனா- Dog bite Dog

கஜினி- Memnto

12B-Sliding Doors

கண்டுகொண்டேன்...........கண்டுகொண்டேன்...........- Sense and Sensibility

 பொல்லாதவன் -Bicycle Thieves

மே மாதம் -Roman Holiday

விருத்தகிரி -Taken

காதல் கொண்டேன்- Fear

வானம் -Crash

3 ரோசாஸ்-Charles Angles

கண்களால் கைது செய்- The Thomas Crown Affair

அவள் வருவாளா- Sleeping with enemy

நியூ- Big

பந்தயம்- Good bye Lover

ஜே.........ஜே.......- Serendipity

பேராண்மை- The dawns here are quiet

ரிஷி-The Killer

வேகம்- Cellular

இந்திரவிழா- Disclosure

வல்லவன்-Swim Fan

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது-Addicted to Love

காதல் கிறுக்கன்- Primal Fear

ஆணை- Man on Fire

செங்கோட்டை- Commando

எவனோ ஒருவன்- Falling Down

காதல் கோட்டை-The Shop around the corner

நாம் இருவர் நமக்கு இருவர்- Too Much

எனக்கு 20 உனக்கு 18- On the Line

தாம் தூம்- Red Corner

லண்டன்- A Fish Called Wanda

ஏகன்-Back to School

சர்வம்- 21 Grams

மொழி- Children of a Lesser God

விசில்- Urban Legend

ஜக்குபாய்-Wasabi

சிக்கு புக்கு- The Classic

ஜன்ம நட்சத்திரம்- The Omen

மை டியர் மார்த்தாண்டன் -Coming to America

வா அருகில் வா-Child's Play

ரெட்டை வால் குருவி-Mickiie Maude

ஜூலி கணபதி-Misery

நாளைய மனிதன்-Silent Rage

அதிசய மனிதன்- Friday 13th

பன்னீர் புஷ்பங்கள்- Little Romance

நந்தலாலா- Kikijuro

தெய்வத் திருட்டுமகள் - I am Sam






Wednesday, February 12, 2014

அரசியலில் ஏன் வாரிசுகளை உருவாக்கக்கூடாது?

வணக்கம் மக்கள்ஸ்!!

நடைமுறையில் வீட்டில் தாய் தந்தையரிடமுள்ள பழக்க வழக்கங்கள், செய்யும் தொழில், எடுத்துக் கொண்ட கொள்கைகள் போன்றவை அவர்களது குழந்தைகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை சாதாரணமாகக் காண முடியும்.  அப்பா அம்மா சகோதரி என எல்லோரும் மருத்துவத் துறையில் உள்ள குடும்பத்தில் உள்ள பையன் மருத்துவத் துறையிலேயே நுழைந்தால் வியப்பேதும் இருக்கப் போவதில்லை.  சிவாஜியின் மகன் பிரபு திரைத்துறையில் நுழைந்து பிரகாசித்தது தற்போது பிரபுவின் மகனும் நடிக்க வந்திருப்பது எல்லாம் அவர்களது குடும்பப் பின்னனியினால்தான் என்பது கண்கூடு.  சமுதாயத்தில் தாய் தந்தையர் செய்த தொழிலையே குழந்தைகளும் தேர்ந்தெடுப்பது அதிசயமான ஒன்றே இல்லை, அதற்க்கு மாறாக நடந்தால் தான் அதிசயம்!!  இப்படி இருக்கும் போது,  "ஒரு அரசியல் வாதியின் மகன் அரசியலுக்கு வரக்கூடாதா?  அப்பனைப் போல கட்சி தலைவராகவும், பின்னர் ஆட்சி பீடத்திலும் ஏறியமரக் கூடாதா?  இதிலென்ன தப்பு?" என்றெல்லாம் எழுப்பப் படும் கேள்விகள்  நியாயமானவை தானே!!


ஆம் நியாயமாகத்தான் தோன்றும், கொஞ்சம் புத்தியை உபயோகப் படுத்தி உற்று நோக்கினால் அதிலுள்ள ஓட்டைகள் தெரியும்.  முதலில் அரசியல் என்பதற்கும்,  மேலே சொன்ன தொழில்களுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது.  தொழில் என்பது பிழைப்புக்காக, பணம் சம்பாதிக்க செய்வது, அரசியல் என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காக.  பணம் சேர்க்க அல்ல.  என் அப்பன் மக்கள் சேவைக்காக தன்னை அற்பணித்துக் கொண்டவர், அவரைப் போல நானும் மக்களுக்கு உழைப்பதில் என்னை அற்பணித்துக் கொள்ளப் போகிறேன் என்றால் அது சரி, ஆனால் அப்பன் அரசியல் மூலம் கொள்ளையடிப்பதையே   தொழிலாகக் கொண்டவர், அவர் அடித்த கொள்ளையை நானும் தொடரப் போகிறேன் அதற்காக என்னை தலைவனாக விடுங்கள் என்றால் அது தவறு.

அப்பனுக்கப்புறம் கட்சியில் தலைமைப் பொறுப்பேற்க கட்சியின் மற்ற அனைத்து உறுப்பினர்களையும் விட நான் அதிகத் தகுதியைப் பெற்றுள்ளேன் ஆகையால் அடுத்த தலைவர் நானே என்றால் அது சரி,  அதைவிடுத்து தற்போதைய தலைவர் என் அப்பன் ஆகையால் இதை மட்டுமே தகுதியாக கொண்டு, மற்ற தகுதியுடைய தலைவர்களை எல்லாம் அமுக்கிவிட்டு அல்லது கட்சியிலிருந்து விரட்டிவிட்டு என்னை அடுத்த தலைவராக்குங்கள்  என்றால் அது தவறு. 

நடிகன் மகன் நடிகனானாலும் அவன் படங்கள் ஓடி வசூலித்தால் மட்டுமே மார்கெட்டில் நிற்க முடியும்,  தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இங்கே இருக்கிறது, இது எல்லா தொழில்களுக்கும் பொருந்தும்.  ஆனால், வாரிசு அரசியலில் சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் வித்தியாசம் தெரியாவிட்டாலும் கூட ஒருவர் கட்சித் தலைவராக இருக்க முடியும், ஜே ....... போட அதற்கு முன்னர் சேர்க்கப் பட்ட கூட்டம் தயாராக இருக்கும். 

அப்பனுக்கப்புறம் வாரிசு அரியாசனம் ஏறுவதற்கு மக்களாட்சி எதற்கு, மன்னராட்சியே இருந்திருக்கலாமே?  அரசியலை சேவையாக நினைக்காமல் தொழிலாக நினைப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்  கொண்டிருக்கலாம், அது அவர்கள்  சுதந்திரம், அவர்களை புறந்தள்ளி மக்கள் சேவை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட தகுதியான நபரைத் தேர்ந்தெடுப்பது வாக்களிப்பவரின் கைகளிலேயே இருக்கிறது. அது தான் மக்களாட்சி.