Monday, March 20, 2017

இளையராஜா-எஸ்.பி.பி: அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன?

இளையராஜா எஸ்.பி.பி மேடைக் கச்சேரிகளுக்கு தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்றதும் சிலர் இதுதான் சாக்கு என்று இளையராஜாவின் ஆணவத்தைப் பார்த்தீர்களா என்று தங்கள் வன்மத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டனர். சிலர் புத்திசாலித்தனமாக இளையராஜா சம்பளம் வாங்கிக் கொண்டுதானே இசையமைத்தார், அதற்கு மேல் அவருக்கு என்ன உரிமை என்கின்றனர். இவற்றைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன என்ற புரிதல் வேண்டும்.


பொதுவாக அறிவுசார் சொத்துரிமை மூன்று வகைப்படும். முதல் வகை பேடண்ட்(காப்புரிமை). இது அறிவியல், பொறியியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கான பயன்படுத்தும் உரிமை. இரண்டாவது காப்பிரைட் (பதிவுரிமை ). இது கலைப்படைப்புகளுக்கான பயன்படுத்தும் உரிமை. மூன்றாவது டிரேட்மார்க் (வணிக முத்திரை ).இது வணிகரீதியாக வெற்றிபெற்ற பொருட்களின் முத்திரை, பெயரைப் பாதுகாப்பதற்கற்காக.
இளையராஜா சம்பளம் வாங்கியது படைப்பை உருவாக்க அவர் செலவிட்ட நேரத்திற்கான கூலி.ஆனால் அவரின் படைப்புத்திறனுக்கான பொருளாதார அங்கீகாரம்தான் காப்பிரைட் உரிமையின் கீழ் அவர் கேட்கும் ராயல்டி.பொதுவாக அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களின்படி இசைக்கான காப்பிரைட்டில் முதல் போட்ட தயாரிப்பாளர், படைப்புத் திறனைக் காட்டிய இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆகியோருக்கே உரிமையுண்டு. பாடகர்கள் தங்கள் குரல்வளத்தைப் பயன்படுத்துகிறார்களே தவிர கற்பனையிலிருந்து புதிதாக ஒன்றை உருவாக்குவதில்லை. ஆகவே அவர்களுக்குச் சம்பளம் மட்டும்தான்.

சில இசையமைப்பாளர்கள் தங்கள் காப்பிரைட்
உரிமையைத் தயாரிப்பாளரிடமே விற்று விடுவார்கள். இளையராஜா சில வருடங்களுக்கு முன்பு தன் பெரும்பாலான பாடல்களின் காப்பிரைட்டில் தனக்கும் பங்கு உள்ளது என்று அறிவித்தார். ஆகவே வணிகரீதியாக தன் பாடல்களை யார் பயன்படுத்தினாலும் அதற்குத் தனக்கான ராயல்டியை கொடுக்க வேண்டும் என்று அறிவித்தார். மேலும் வரும் ராயல்டியில் தயாரிப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் உரிய பங்கை அளிப்பேன் என்றார். ரஹ்மான் ஒருமுறை இளையராஜா தன் காப்பிரைட் உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் சில தீவுகளை வாங்கியிருப்பார் என்றார்.

உடனே சிலர் ராஜா கூட மற்ற இசையமைப்பாளர்கள் சிலரின் மெட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கு ராயல்டி கொடுத்தாரா என்கிறார்கள். அது வேறு வழக்கு. அது போன்ற பாடல்களின் இசையமைப்பாளர்கள் தங்கள் பாடலுக்கும், பிரதி எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பாடலுக்கும் குறைந்தபட்சம் 50% ஒற்றுமை இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.

சிலர் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு இளையராஜா பாரதியார் பாடல்கள், தியாகராஜ கீர்த்தனைகள், திருவாசகம் பயன்படுத்தியதற்கு ராயல்டி கொடுத்தாரா என்று உளறுகிறார்கள். பாரதியார் படைப்புகள்தான் உலகத்திலேயே நாட்டுடமை ஆக்கப்பட்ட முதல் படைப்பாக இருக்கவேண்டும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர் வேங்கடாசலபதி கூறுகிறார். 1949 ஆம் ஆண்டு பாரதியாரின் உறவினர்களுக்கு மதராஸ் மாகாண அரசு சன்மானம் வழங்கி இதைச் செய்தது. பதிவுரிமை வைத்திருந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அதை அப்போதைய மாகாண பிரதமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கேட்டுக் கொண்டதால் பல போராட்டங்களுக்குப் பிறகு உரிமைத்தொகை ஏதும் கோராமல் விட்டுக் கொடுத்தார். சில உரிமைகள் பாரதியாரின் சகோதர விஸ்வநாத ஐயரிடம் இருந்தது. நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகளை யார் வேண்டுமானாலும் உரிமைத்தொகை கொடுக்காமல் பயன்படுத்தலாம்.

அடுத்தது நூல்கள், இசை, பாடல்கள் போன்றவற்றுக்கான பதிவுரிமை அதன் ஆசிரியர், இசையமைப்பாளர் போன்றோரின் காலத்திற்குப்பின் அறுபது ஆண்டுகள் வரை மட்டுமே. அதன் பின் அது தானாகவே நாட்டுடைமையாகி விடும். வாரிசுகள் யாராவது உரிமை கோரினால் அரசாங்கம் அதற்கான சன்மானம் அளிக்க வேண்டும். இதன்படிப் பார்த்தால் தியாகராஜர், மாணிக்கவாசகர் போன்றவர்களின் படைப்புகள் அறிவிக்கப்படாமலே நாட்டுடைமையாகி விட்டது. அவர்கள் வாரிசு என்று யாராவது உரிமை கோரினால் அரசாங்கத்திடம்தான் உரிமை கோர வேண்டும்.
 
நன்றி: