Friday, July 3, 2015

பாபநாசம்-பெரிய லாஜிக் ஓட்டை..........

த்ரிஷ்யம் மோகன்லால், மீனா நடித்து சக்கை போடு போட்ட மலையாளப் படம்.   தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ன்னு  ரீமேக் ஆகியிருக்கு, இப்போ தமிழில் பாபநாசம்.

ஒரிஜினல் படத்தில் மோகன்லால், படத்தோட கேரக்டருக்கு மிகவும் பொருந்தியிருந்தார், கூடவே ஜோடி மீனா பிரமாதமான நடிப்பு.   தற்போதைய தமிழ் படத்தின் டீசர் பார்க்க நேர்ந்தது.  அதைப் பார்த்தால், மலையாளப் படத்தின் ஜெராக்சை எடுத்து கேரக்டர்களின் தலையை வெட்டிப் போட்டு விட்டு தமிழ் காரர்களின் தலையை ஒட்டிய மாதிரி இருக்கிறது.  இதுக்கு பேசாமல் படத்தை டப்பிங் செய்தே போட்டிருக்கலாம். இதெல்லாம் பார்க்கும் போது படத்தை மலையாளத்தில் முன்னரே பார்த்திருந்தால் தமிழில் பார்க்கவே தேவையில்லை, ஒரு சுவராஸ்யமும் இருக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது.




போன மூன்று படங்களாக எதுக்குன்னே தெரியாம பூஜா குமாரையும், ஆன்ட்ரியாவையும் கூடவே இழுத்துக்கொண்டு திரிஞ்ச மனுஷன் இந்த படத்தில் இன்னொரு குளறுபடியும் பண்ணியிருக்காரு.  மீனாவுக்குப் பதில் தன்னுடன் வசித்து வரும் கௌதமியைப் போட்டிருக்காரு.  படம் மற்ற அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றுவிட்டதால், எந்த கழுதையைப் போட்டாலும் ஓடிடும் என்ற எண்ணம் ஒரு மனுஷனுக்கு வருவது நியாயம் தான் என்றாலும் மீனா அளவுக்கு இவர் ஜொலிப்பாரா  என்பது  சந்தேகமே.

படத்தின் கதையில் பெரிய லாஜிக் விரிசல் என்று ஒரு விஷயம் எனக்குப் பட்டது.  ஒரு குற்றம் நடந்து விட்டால், காவல் துறை மயிலே மயிலே இறகு போடு என்ற முறையில் அணுகாது,  சந்தேகப் படும்படி எவனும் கிடைக்கவில்லையென்றாலும் அப்பாவி, இளிச்சவாயன் எவனையாவது ஜீப்பில் அள்ளிப் போட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து நோண்டி நொங்கெடுடுத்துவிடுவார்கள்.  ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகன் தான் தன்னுடைய மகனுடைய சாவுக்குக் காரணம் என்று வழுவாக சந்தேகிக்கும் உயர்நிலை அதிகாரி  வெறும் கேள்வி பதில் லெவலிலேயே வீட்டிற்கு திருப்பி அனுப்புவதாக காட்டுவது நடைமுறைக்கு ஒவ்வாத லாஜிக் மீறல் என்பது நமது கருத்து.   கொடுமைப் படுத்துவது பின்னால் வருகிறது என்பது வேறு விஷயம்!!

படம் பார்க்கலாமா?  மலையாளத்தில் பார்க்கவில்லை என்றால் பார்க்கலாம், அப்புறம் உங்க இஷ்டம்!!


Wednesday, July 1, 2015

ஹெல்மெட்: வாழ்க்கை ஒரு வட்டம்............!!


ஹெல்மெட் பிசினஸ் டல்லடிக்குது, விற்பனை அவ்வளவா இல்லை.  என்ன செய்யலாம்னு ஹெல்மெட் கம்பனிக்காரன் யோசிக்கிறான்.  அவனுக்கு ஒரு ஐடியா வருது.  நேரா போய் கவனிக்க வேண்டியவங்களை கவனிக்கிறான், ஹெல்மெட் சேல்ஸ் ஆவதற்கு கொஞ்சம் உதவும் படி கேட்டுக் கொள்கிறான்.

கள்ளச் சாராயம் குடிச்சா செத்துப் போறாங்களே, அதனால சாகா வரம் தரக்கூடிய டாஸ்மாக் சாராயத்தை குடிக்க வச்ச மக்கள் நலனுக்காகவே செயல்படும் அரசு, வண்டி ஒட்டிகிட்டு போய் சாவட்டும்னு விட்டுடுவாங்களா என்ன?  


டூ வீலர் ஓட்டுறவனும், பின்னாடி உட்கார்ந்துகிட்டு போறவனும், பெண்களோ  7 கிளாஸ் மேல் படிப்பவனாகவோ இருந்தாலும் ஆளுக்கொரு ஹெல்மெட் போடணும்னு சட்டம் போடுது.

சென்னையில 30 லட்சம் ரெண்டு சக்கர வாகனம் ஓடுதாம்.  [சத்தியமா சைக்கிளைஎல்லாம் சேர்க்கலீங்க!!].  60 லட்சம் ஹெல்மெட் வித்து தீர்க்கும்.  500 ரூபாய் வித்த ஹெல்மெட் 1500 ரூபாய் ஆக்கினாலும், நைட்டு பன்னிரண்டு மணி வரைக்கும் ஹெல்மெட் கடையில கூட்டம் அலை மோதுது, கடைக்காரன் பணத்தை அள்ளுறான்.  ஏன்னா போடாட்டி அடுத்த நாள் பைக் வண்டியில ஆபீஸ் கூட போக முடியாதே!!

இப்போதைக்கு அஞ்சு லட்சம் ஹெல்மெட் வித்திருக்காம், இன்னும் இருக்கிற பயலுக எப்ப வாங்குவானுங்களோ தெரியல.  இப்போதைக்கு போடாதவங்களை முட்டு சந்துக்கு முட்டு சந்து நின்னுகிட்டு விரட்டி விரட்டி பிடிப்பாங்க.  ஒருவழியா இன்னும் ரெண்டு மாசத்துல எல்லா பயலுங்களும் ஒன்னுக்கு ரெண்டா ஹெல்மெட் வாங்கிருவானுங்க.  அப்புறம் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆனா கணக்கா கதை ஆகும், கேள்வி கேட்க நாதியிருக்காது.  


ஹெல்மெட் கம்பனிக்காரன், கடைக்காரன் ஓரளவுக்கு பணத்தை தேத்தியிருப்பான்.  சரி போதும்னு சிக்னல் குடுப்பான்.  சனங்க ஹெல்மெட்டால ரொம்ப சிரமப் படுறாங்கன்னு மக்கள் நலனுக்கே போராடும் அரசாங்கத்துக்கு திரும்பவும் தோணும்.  சரி, சரி, இனிமே போடத் தெவையில்லைம்பாங்க.

அப்போ ஒன்னுக்கு ரெண்டா வாங்கின ஹெல்மெட்டு?  அதை வீட்டுக்கு வெளியே கட்டி தொங்க விடுங்க, காக்க முட்டை போடும்!!    அப்படியே மழையில நனைஞ்சு, வெயிலில காய்ஞ்சு அது மக்கி துருப்பிடிச்சு ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாம போகும்.  அப்படியே ரெண்டு வருஷம் போனதுக்கு பின்னாடி................

ஹெல்மெட் சேல்ஸ் படுத்திருக்கும், ஹெல்மெட் கம்பனி காரன் கவனிக்க வேண்டியவங்களை கவனிப்பான்............. அப்புறம் .............??  அப்படியே பதிவோட முதல் வரிக்கு போங்க...........!!