Sunday, January 25, 2015

தயாநிதி சாப்பிட்ட ஒரே ஒரு பழம்

ஒரு ஊரில் தயாநிதி என்று ஒரு புத்தி கூர்மையுள்ள ஆள் இருந்தான்.  அவன் உண்மையைத்தான் எப்போதும் பேசுவான், ஆனால் அதற்குள் இருக்கும் சூட்சுமம் வெளியில் தெரியவே தெரியாது!!  அப்பேற்பட்ட சாமர்த்தியசாலி.

அவன் ஒரு  நாள் தன் நண்பர்களிடமிருந்து எப்படியாவது பணம் வசூல் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தான்.  பணம் சும்மா கொடுப்பார்களா, காரணம் வேண்டுமே.  அதற்காக ஒரு பிட்டை போட்டான். 

"என்னிடம் சாப்பிடக் கூட பணமே இல்லை.  அதனால் இன்றைக்கு நான் ஒரே ஒரு பழம் தான் சாப்பிட்டேன்.  எனக்கு இன்றைக்கு வயிறு சரியில்லை, டாக்டரிடம் போக வேண்டும்.  பணம் கொடுத்து உதவி செய்யுங்கள்" என்றான்.

அவனுடைய நண்பர்கள் ஏமாளிகள்.  ஏதேதோ பண்ணி 440 ரூபாய் தேத்தி கொடுத்து போய் உடனடியாக மருத்துவரிடம் செல்லச் சொன்னார்கள்.

அவன் சென்ற பின்னர் அவனுடைய பக்கத்து வீட்டுக் காரர் அங்கே வந்தார்.  அவரிடம் நண்பர்கள் நடந்த விஷயத்தை சொல்ல அவர் ஷாக்காகி போனார்.

"அவன் உங்களையெல்லாம் முட்டாளாக்கிட்டான்பா......"  என்றார்.

"என்ன சொல்றீங்க, அவன் இன்றைக்கு சாப்பிடக்கூட பணம் இல்லையாமே, ஒரே ஒரு பழம் தான் சாப்பிட்டானாமே?" என்று நண்பர்கள் வினவினார்கள்.

ஆமாப்பா, ஆமாம்.  அவன் ஒரே ஒரு பழம் தான் சாப்பிட்டான்.  ஆனா, அது வாழைப் பழமோ மாம்பழமோ அல்ல, பலா பழம்.  முழு  பழம்.  மொத்த பழத்தையும் வெட்டி அவனே சாப்பிட்டான்.  டேய்........டேய்.......  எனக்கு ஒன்னாச்சும் குடுடான்னு கேட்டேன், முடியாதுன்னு எல்லாத்தையும் அவனே சாப்பிட்டுட்டு கடைசியா மொத்தம் 343 சுளைகள் அதில் இருந்துச்சுன்னு எண்ணி கணக்கு மட்டும் சொல்லிட்டு கெக்கே...........பிக்கேன்னு சிரிச்சி கிட்டே ஓடிட்டான்.



இப்போ இங்கே வந்து உங்ககிட்ட 440 ரூபாய் ஆட்டயப் போட்டிருக்கான்.   அவன் விட்ட பீலாவை உண்மைன்னு நம்பி ஏமாந்துட்டீங்களேப்பா...................??!!