Thursday, December 27, 2012

உலகிலேயே மிகவும் விந்தையான விஷயம் எது?-யக்ஷனின் கேள்விக்கு யுதிஷ்டிரரின் பதில்கள்.


பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது ஒருமுறை காம்யவனம் என்னும் வனப் பகுதியில் வசித்து வந்தனர்.  அங்கு ஒரு முறை கொடிய வறட்சி ஏற்பட்டது.  அவ்வாறு இருக்கையில் ஒருநாள் மதியம் கடும் வெயில் நேரம், திரௌபதிக்கும் பாண்டவர்களுக்கும் கடும் தாகம் ஏற்ப்பட்டது.   தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த குளங்கள் அத்தனையும் வற்றிப் போன நிலை. யுதிஷ்டிர மஹாராஜா எங்கேயாவது குடிக்க தெளிந்த நீர் கிடைக்குமா எனத் தேடித் பார்த்து கொண்டு வரும்படி தனது தம்பி பீமனை ஒரு பானையுடன் அனுப்பினார்.  பீமசேனன் பானையை தூக்கிக்கொண்டு, நடந்தான்.  ஒரு இடத்தை நோக்கி பறவைகள் செல்வதும் திரும்புவதையும் வானத்தில் பார்த்து அதை  நோக்கி நகர்ந்தான்.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் கம கம என வாசனையடிக்கும் தெளிந்த நீரைக் கொண்ட அழகான ஒரு ஏரியைக் கண்டான்.  ரொம்ப நேரம் நடத்து வந்த களைப்பை போக்கிக் கொள்ள முதலில் தண்ணீரைப் பருகலாம்  என நினைத்து ஏரிக்குள் இறங்கி தண்ணீரில் கை வைக்கப் போனான்.  அப்போது, அங்கே ஒரு யக்ஷன் தோன்றினான்.

"நில், நீரைப் பருகும் முன்னர் என் கேள்விகளுக்குப் பதில் சொல், மீறினால் நீ உயிரிழப்பாய்" என்று இடியைப் போல அவன் குரல் வந்தது.  


யக்ஷனின் எச்சரிக்கையை உதாசீனப் படுத்திய பீமன் தனது இரண்டு கைகளாலும் நீரை அள்ளினான்.  பருகும் முன்னர் அப்படியே நினைவிழந்து வீழ்ந்தான்.  பீமனை அனுப்பி வெகுநேரமாகியும் திரும்பாததால் கவலையுற்ற யுதிஷ்டிரர் என்னவாயிற்று எனப் பார்த்து வர தனது அடுத்த தம்பியான வில்வித்தை வீரன் அர்ஜுனனை அனுப்பினார்.  அவனும் அவ்வாறே அதே ஏரியை அடைந்தான், அங்கே மயங்கிக் கிடந்த தனது அண்ணனைப் பார்த்தான்.  சரி முதலில் தாகத்தை தீர்ப்போம், அப்புறம் பார்ப்போம் என முயன்ற அவனுக்கும் யக்ஷன் தோன்றி தனது கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லச் சொன்னான்.  அதை பீமனைப் போலவே உதாசீனப் படுத்திய அவனுக்கும் அதே கதி ஏற்ப்பட்டது, தொடர்ந்து நகுலன் சகாதேவன் என நால்வரும் அனுப்பப் பட்டு ஒருவரும் திரும்பாத நிலை.  என்னதான் ஆயிற்று எனப் பார்க்க, யுதிஷ்டிர மகாராஜா தானே புறப்பட்டு ஏரிக்கரையை அடைந்தார் .

அங்கே கிடந்த தனது நான்கு சகோதரர்களையும் கண்டார்.  ஆயினும், முதலில் சிறிது நீரைப் பருகி தெம்பை வரவழைத்துக் கொண்டு அவர்களைக் கவனிப்போம் என ஏரியில் இறங்கி நீரில் கை வைக்கப் போனார்.  அப்போது அதே யக்ஷன் தோன்றி, "நீரைப் பருகும் முன்னர் எனது கேள்விகளுக்குச் சரியான பதில் சொல், மீறினால் உன் தம்பிகளுக்கு நேர்ந்த அதே கதி உனக்கும் நேரும்" என்றான்.  யுதிஷ்டிர மகாராஜா, "நீ உன் கேள்விகளைக் கேட்கலாம்" என்று  பொறுமையாகச்  சொன்னார்.



யக்ஷன்:  சூரியனை கிழக்கில் உதிக்கும்படிச் செய்வது யார்?

யுதிஷ்டிரர்:  எல்லா காரணத்துக்கும் காரணமான, தனக்கென்று ஒரு காரணமில்லாத இறைவன்தான்  சூரியனை கிழக்கில் உதிக்கும்படிச் செய்கிறார்.

யக்ஷன்:  பூமியினும் கனமானது எது?  வானினும் உயர்ந்தது எது?  ஒளியை விட வேகமாகச் செல்வது எது?  புற்களின் இதழ்களின் எண்ணிக்கையை விட அதிகமானது எது?

யுதிஷ்டிரர்:  ஒருவனின் தாய் பூமியை விட கனமானவள்,  ஒருவனின் தந்தை  வானினும் உயர்ந்தவர்,  ஒளியை விட வேகமாகப் பயணிக்கக் கூடியது மனம், மனதில் எழும் எண்ணங்கள் புற்களின் இதழ்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதல்.

யக்ஷன்:  உலகிலேயே மிகச் சிறந்த தர்மம் எது?  சகிப்புத் தன்மைகளிலேயே மிகவும் சிறந்தது எது?

யுதிஷ்டிரர்: கருணையே மிகச் சிறந்த தர்மம்.  இன்ப-துன்பம், லாப-நஷ்டம், பிறப்பு-இறப்பு போன்ற இரட்டை நிலைகளைத் தாங்கிக் கொள்வதுதான் சகிப்புத் தன்மைகளிலேயே மிகச் சிறந்ததாகும்.

யக்ஷன்: மனிதனின் வெல்ல முடியாத எதிரி யார்?  அவர்களின் தீராத வியாதி என்ன?  யார் புனிதமானவர், யார் புனிதமற்றவர்?

யுதிஷ்டிரர்: கோபமே மனிதனின் வெல்ல முடியாத எதிரி.  பேராசையே தீராத வியாதி.  எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவரே புனிதர், தனது புலன்களை கட்டுப் படுத்தாத கொடூரனே புனிதமற்றவன்.

யக்ஷன்: யார் மகிழ்ச்சியாக இருப்பார்கள்?  மிகப் பெரும் விந்தை எது?  உண்மையான பின்பற்றத் தக்க வழி எது?  எது செய்தி?

யுதிஷ்டிரர்: எவன் ஒருத்தனுக்கு கடன் இல்லையோ, எவன் ஒருவன் வெளியூரில் வசிக்கவில்லையோ, எவன் ஒருவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உணவு உண்ண முடிகிறதோ  அவனே மகிழ்ச்சியானவன். 

தினமும் சாவு என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.  ஆனாலும், வாழும் ஒவ்வொருவரும் தான் மட்டும் ஒருபோதும் சாகமாட்டோம் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.  இதுதான் உலகிலேயே மிகப் பெரும் விந்தையாகும்.

வாழ்வில் உண்மையான பின்பற்றத் தக்க வழியைக் கண்டுபிடிக்க வாத-விவாதம் உதவாது.  நீதி நூல்களும் எக்கச் சக்கம்.  முனிவர்களின் கருத்துகளும் ஆளாளுக்கு மாறுபடுகிறது.  தர்மத்தின் உண்மை மிக ஆழமானது. சான்றோர்கள் பின்பற்றும் வழியே சாலச் சிறந்தது, நாமும் அத்தகைய மகாஜனங்களின் அடியைப் பின்பற்ற வேண்டும். 

உயிரினங்கள் அனைத்தையும் காலம் தீச்சட்டியில் போட்டு, மாயை, பொய் கவர்ச்சி  ஆகியவற்றால் சிக்கவைத்து வருத்தெடுத்துக் கொண்டிருக்கிறது.  மாதங்கள், பருவங்கள் ஆகிய மாற்றங்கள், கரண்டியால் புரட்டுவதாகும்.  சூரியன் என்ற அடுப்பு, இரவு பகல் ஆகியவற்றை எரிபொருளாக கபளீகாரம் செய்து நம்மை சமைக்கிறது. இது ஒன்று மட்டும்  தான் மொத்தத்தில் செய்தியாகும்.

யக்ஷன்: அரசே!!  உமது பதில்களால் யாம் திருப்தியடைந்தோம்.  தற்போது உமது தம்பிகளில் ஒருவரை மட்டும் நீர் மீட்டு அழைத்துச் செல்லலாம்.  செப்பும், யார் வேண்டும் என்று!!


யுதிஷ்டிரர்: கரிய நிறம் கொண்ட என் தம்பி நகுலன் உயிரோடு வேண்டும்.

 யக்ஷன்:[இதைக் கேட்டு ஒரு  நிமிஷம் திகைத்துப் போகிறார்!!].  உமது தேர்வு என்னை வியக்க வைக்கிறது.  ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனைக் கேட்டிருக்கலாம் அல்லது வில் வித்தையில் யாருக்கும் சளைக்காத அர்ஜுனனைக் கேட்டிருக்கலாம், நகுலனை ஏன் தேர்தெடுத்தீர்?

 யுதிஷ்டிரர்: எங்கள் தந்தைக்கு இரு மனைவியர், குந்தி, மாத்ரி.  என் அன்னை பெயர் சொல்ல நான் இருக்கிறேன், எங்கள் சிற்றன்னை பெயர் சொல்ல அவள் வயிற்றில் பிறந்த ஒருவர் வாழ வேண்டும், அதற்காகத்தான் நகுலனை கேட்டேன்.

  யக்ஷன்: தர்மத்தின் வழி தவறாத உம் நடத்தையை யாம் மெச்சினோம், இதோ உங்கள் தம்பியர் அனைவரையும் திரும்பத் தருகிறோம், அழைத்துச் செல்லும்!!

அந்த யக்ஷன் வேறு யாருமல்ல.  தர்மராஜா எனப்படும் எமதர்மனே தான்!!

19 comments:

  1. தருமன் நகுலனை தேர்ந்தெடுத்த காரணம் அருமை.
    நல்ல துணைக் கதை.இன்னும் பல சொல்லுங்கள் ஜெய தேவ்.

    ReplyDelete
  2. மாப்ளே தாசு,
    நல்ல பதிவு. மகாபாரதத்தில் இப்பகுதியும் நமக்கு பிடித்த விடயம்.பாரதத்தை விட்டு விடுவோம்!!.
    **
    நாம் உமது முடிவுரையின் மீதே விமர்சனம் வைக்கிறேன்.
    1./வாழ்வில் உண்மையான பின்பற்றத் தக்க வழியைக் கண்டுபிடிக்க வாத-விவாதம் உதவாது.//
    கேள்வி பதில் என்பதற்கும் விவாதம் என்பதற்கும் அதிக வித்தியாச‌ம் இல்லையே!!. ஆகவே கேள்வி பதில் பதிவு போட்டு விவாதம் கூடாது என்பது சரியா??

    2.//நீதி நூல்களும் எக்கச் சக்கம். முனிவர்களின் கருத்துகளும் ஆளாளுக்கு மாறுபடுகிறது.//

    சார்பியல் தத்துவம்.ஒரு விடயம் குறித்த ஒருவரின் நிலைப்பாடு,அவரின் அனுபவம் சார்ந்தது.மிகச்சரி!!

    3.//தர்மத்தின் உண்மை மிக ஆழமானது//
    இது தர்மம்,உண்மை என்பதன் வரையறை சார்ந்தது. ஒவ்வொருவனும் தனக்கு ஒத்துவரும் ஆழத்தில் உள்ள‌ உண்மையை தர்மமாக ஏற்கிறான். ஹி ஹி!

    4.//சான்றோர்கள் பின்பற்றும் வழியே சாலச் சிறந்தது, நாமும் அத்தகைய மகாஜனங்களின் அடியைப் பின்பற்ற வேண்டும். //
    அதாவது மேலே சொன்ன 2& 3 ஐ சேர்த்து நம்க்கு ஒத்துவருவது போல் கருத்து சொல்லும் குருவை பின்பற்ற வேண்டும்.

    5.//உயிரினங்கள் அனைத்தையும் காலம் தீச்சட்டியில் போட்டு, மாயை, பொய் கவர்ச்சி ஆகியவற்றால் சிக்கவைத்து வருத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. மாதங்கள், பருவங்கள் ஆகிய மாற்றங்கள், கரண்டியால் புரட்டுவதாகும். சூரியன் என்ற அடுப்பு, இரவு பகல் ஆகியவற்றை எரிபொருளாக கபளீகாரம் செய்து நம்மை சமைக்கிறது. இது ஒன்று மட்டும் தான் மொத்தத்தில் செய்தியாகும்.//

    இதுவே இயற்கைத் தேர்வாகும்!!


    6.// யக்ஷன்: தர்மத்தின் வழி தவறாத உம் நடத்தையை யாம் மெச்சினோம், இதோ உங்கள் தம்பியர் அனைவரையும் திரும்பத் தருகிறோம், அழைத்துச் செல்லும்!! //

    இது விறகு வெட்டி,கோடரி,தேவதை கதையில் சொல்லப்படும் நீதி!!

    இரும்புக் கோடரியை மட்டுமே தனது என்றதால் தங்கம்+வெள்ளி கோடரியும் சேர்த்து கிடைத்தது!!

    இப்போது விவாதம் செய்வீரா மாட்டீரா??

    சரி வழக்கமா சொல்வதையும் சொல்வோம்!!

    [விவாதம் குறித்து] சிந்திக்க மாட்டீர்களா!!

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சார்கோல் மாமு, அடிப்படையே இல்லாமல், நான் அதை நினைக்கிறேன், நீ என்ன நினைக்கிறாய் என்பது உதவாது. ஆழ்வார்கள், இராமானுஜர் போன்ற மகான்களின் போதனைகல்படி வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அவங்க பெருமாள் தான் கடவுள் என்று சொன்னார்களா அத்தோட தீர்ந்து போச்சு. வீணா போயி சார்கோல் மாமு, மக்குபால் கள்வன், தலைகீழாய் தொங்குறவன் கிட்ட விவாதம் பண்ணக் கூடாது. இது தான் அர்த்தம்.

      அது சரி மாமு, முதல் உயிருள்ள செல் எப்படி/எங்கேயிருந்து வந்துச்சாம்?

      Delete
    2. மாப்ளே தாசு,
      நான் சொல்வதை நிரூபிக்கிறீர்கள் பாருங்கள்!!!
      //அதாவது மேலே சொன்ன 2& 3 ஐ சேர்த்து நம்க்கு ஒத்துவருவது போல் கருத்து சொல்லும் குருவை பின்பற்ற வேண்டும்.//

      உங்களின் கருத்து.
      / ஆழ்வார்கள், இராமானுஜர் போன்ற மகான்களின் போதனைகல்படி வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அவங்க பெருமாள் தான்./

      உங்களுக்கு ஒத்து வரும் ஆழ்வார்கள்,இராமனுஜர் பேரை சொல்கிறீர்கள் பாருங்கள். எல்ல மாற்றுக் கருத்துக்களையும் படித்து அவைகளில் இவர்களின் கருத்து சிறந்தது என்று ஏற்பதாக பொருள் கொள்ளலாமா!!!.வைணவ குல திலக்மே வாழ்க!!.ஒவ்வொருவரும் தங்கள் மதம்,குரு சிறந்தவர் என் நினைக்கிறார்கள்!!

      //வீணா போயி சார்கோல் மாமு, மக்குபால் கள்வன், தலைகீழாய் தொங்குறவன் கிட்ட விவாதம் பண்ணக் கூடாது. இது தான் அர்த்தம்.//

      திட்டுவதை நேரடியாகவே திட்டலாம். திட்டு நமக்கு புதிதல்ல,என்னை மட்டும் திட்டாமல் நம்ம தோழர்களையும் சேர்த்து திட்டுகிறீரே!!வாழ்க வள்முடன்!
      ***
      /அது சரி மாமு, முதல் உயிருள்ள செல் எப்படி/எங்கேயிருந்து வந்துச்சாம்?/

      முதல் செல்லுக்கு முன் ஜீரோ செல்,அதுக்கு முன்னால் மைனஸ் 1 செல்,.-2 செல்...... இது எப்புடீ!!!

      நன்றி!!

      Delete
    3. \\உங்களுக்கு ஒத்து வரும் ஆழ்வார்கள்,இராமனுஜர் பேரை சொல்கிறீர்கள் பாருங்கள்.\\ மாமு, அதென்னது நாதாரித் தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும்டா என்பது போல சொல்றீங்க. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இவர்கள் சொல்வது அத்தனையுமே வாழ்வில் செய்வது கஷ்டம். என் மனது அதுக்கு நேர் எதிராத்தான் செய்யச் சொல்லி தினமும் தூண்டுது. உதாரணத்துக்கு மீன் சாப்பிடுவதைப் பார்க்கும் போதெல்லாம் மனம் நாய் மாதிரி தவ்வுது. பெண்கள் பக்கம் போகும் கண்களை தடுக்க முடியலை இன்னும் எத்தனையோ. அடுத்து இறைவனை 24 மணி நேரமும் மனதில் எண்ணி மகிழ வண்டும். அது சுத்தமா முடியல. 5 வினாடி நினைச்ச 5 நிமிஷம் எங்கெங்கோ போகுது. நாங்க பிறந்தது சிவனை வழிபடும் குடும்பத்தில், பெருமாள் அவ்வளவா நெருக்கமில்லை. ஆனாலும், இத்தனை odds ஐயும் மீறி அதை நடைமுறைப் படுத்த முடியாவிட்டாலும், சிரமப் பட்டாலும், அவங்க சொன்னதை உண்மைன்னு ஏத்துகிட்டேன், சீக்கிரம் அவங்க வழியில் நடக்கனும்னு நினைக்கிறேன், என் மனது இதுக்கு டோட்டல் எதிரி.

      \\திட்டுவதை நேரடியாகவே திட்டலாம். திட்டு நமக்கு புதிதல்ல,என்னை மட்டும் திட்டாமல் நம்ம தோழர்களையும் சேர்த்து திட்டுகிறீரே!\\ இதெல்லாம் திட்டா? மாமு உங்க செட்டு எல்லாம் கூடா நட்பா இருக்கு. டேஞ்சர். சீக்கிரம் மாத்துங்க.


      \\முதல் செல்லுக்கு முன் ஜீரோ செல்,அதுக்கு முன்னால் மைனஸ் 1 செல்,.-2 செல்...... இது எப்புடீ!!!\\ அதுக்குத்தான் பதில் கிடையாதுன்னு தெரியுமே!!

      Delete
  3. மிக நல்ல கதை. தம்பிகள் மாண்டுபோன நேரத்திலும் நிதானம் தவறாத தர்மன்... யாராவது ஒருவரை பிழைக்க வைக்கும் வாய்ப்பு இருந்த போதும் தர்மத்தை நினைத்தது.. வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு கணத்திலும் செய்ய வேண்டியவை அனைத்திற்கும் இதிகாசங்களில் விடை உள்ளது என தோன்றுகிறது!

    ReplyDelete
  4. @ bandhu

    தங்கள் கருத்துக்கள் எப்போதும் சுருக்கமானவை ஆழமானவை தெளிவானவை, சிறப்பானவை. தொடர்ந்து வாருங்கள் பந்து. மிக்க நன்றி.

    ReplyDelete
  5. //எவன் ஒருத்தனுக்கு கடன் இல்லையோ, எவன் ஒருவன் வெளியூரில் வசிக்கவில்லையோ, எவன் ஒருவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உணவு உண்ண முடிகிறதோ அவனே மகிழ்ச்சியானவன்.//

    எங்க முடியுது கிரெடிட் கார்டை வேண்டாம் வேண்டாமுனு சொன்னாலும் துரத்தி துரத்தி கொடுக்கிறார்கள். என்ன செய்வது உள்ளூர்ல வேலை கிடைக்க மாட்டேங்குது. எதைப்பத்தியும் கவலைப்படாம சாப்பிட்டா என்னடா உணக்கு கொஞ்சம்கூட வித்தி வெஜனம் இல்லையானு சொல்றாங்க.

    ReplyDelete
    Replies
    1. @ புரட்சி தமிழன்

      இந்த வரிகள் ஒரு பொக்கிஷம், இதற்க்கு உள்ளர்த்தம் வேறு, நிச்சயம் இன்னொரு பதிவில் பார்க்கலாம்!!

      Delete
  6. தருமத்தை நிர்ணயித்தது கடவுளா, மனிதனா, அல்லது அதன் போக்கில் உருவான வாழ்வியலா ?!!!

    கடவுள் தான் நிர்ணயித்தால் எனில் கடவுள், கடவுளின் அவதாரங்கள், கடவுளின் மாமன், மச்சான், பிள்ளைகள், மனைவிகள், பணியாட்கள், தூதர்கள் எனப் பற்பலரும் தருமத்தின் படி வாழவே இல்லையே... ! ஐயகோ. அத்தோடு காலத்துக்கு காலம் தருமத்தின் அளவுகோல் வேறு அங்கும் இங்கும் மாற்றி வைக்கப்படுகின்றனவே... !

    ஒட்டு மொத்த மகாபாரத்தையும் ( ஒரிஜினல் பீஸ் ) படிக்க நேர்ந்தால் அப்புறம் பலரும் காறித் துப்பத் தொடங்குவார்கள் அந்த புனைவின் கதைமாந்தர்கள் மீது,,, அவ்வளவு ஆபாஸம், அபத்தம், கோணல்கள், வன்முறைகள், காமவெறித்தனங்கள், படுகொலைகள் எனப் பற்பல உள்ளன.... !!! அவற்றை எல்லாம் உஷாராக மறைத்து பல தேவாதி தேவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கி எடுத்து பூச்சுற்றி பிரசங்கம் செய்வார்கள் .. அந்த கதாகாலச்சேபங்களை கேட்டு தலையை அங்குமிங்கும் ஆட்டுவதற்கு லட்சக் கணக்கான கூட்டங்கள் வேறு, ஐயகோ ஐயகோ.. என்னத்தை சொல்ல....

    பொறிவாயில் ஐந்தடக்காதோன் எல்லாம் இன்று கடவுளாம், கடவுளின் தூதனாம் .... !!! போங்கய்யா போய் புள்ளைக் குட்டிங்களோடு கொஞ்ச நேரம் பூங்காவில் விளையாடுங்க, உடலுக்கும் மனதுக்கும் வாழ்க்கைக்கும் அதை விட சிறந்ததொரு வழிமுறைகள் இல்லை ... !!!

    ReplyDelete
    Replies
    1. @ இக்பால் செல்வன்

      நீங்க பிரபு சொன்ன மாதிரி தேன் பாட்டிலை மூடியைத் திறக்காமலேயே நக்கிப் பார்த்து விட்டு தேனில் சுவையே இல்லை என்று திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். மகாபாரதத்தை முறைப் படி படித்தால் அதிலுள்ள உண்மைகள் விளங்கும். நாங்க படிச்சோம், எங்கலுக்கு அதிலிருந்து விளங்கியது என்னவென்றால்:

      1. மது 2. சூதாட்டம், 3. புலாலுண்ணுதல் இவை மூன்றும் தவிர்க்கப் படவேண்டும் 4. மனைவியுடன் பிள்ளைகள் பெற மட்டுமே உடலுறவு. பிற உயிர்களுக்கு மனதாலும் துன்பம் விளைவிக்கக் கூடாது.

      உங்களை விட எங்கள் வாழ்க்கையில் பிற உயிர்களுக்கு விளைவிக்கும் துன்பம் குறைவே. மற்றவர்களுக்கு துன்பம் விளைவித்தால் நீயும் அதே துன்பத்தை அனுபவிப்பாய் என்று எங்களுக்கு சொல்லித் தரப்பட்டுள்ளதால் நாங்க நடக்கும் போது தெரிஞ்சு எறும்பு மேல கூட கால் வைப்பதில்லை. மற்ற மிருங்கங்களையோ மனிதர்களையோ பற்றி சொல்லவே தேவையில்லை.

      அப்படியே திரும்பி நீங்க என்ன செய்யுரீங்கன்னு கொஞ்சம் பாருங்க. மனுஷனைத் தவிர மற்ற உயிர்கள் படும் துன்பம் உங்க லிஸ்டுலே இல்லை. நடக்கிறது, நீந்துறது, பறக்கிறதுன்னு போட்டுத் தள்ளுறீங்க. மேலே சொன்ன மற்ற மூன்றும் கூட வேணுமின்னா செய்து கொள்ளலாம் ஆனால் உங்க இமேஜ் கேட்டுப் போயிடும்னு அது குறித்து நீங்க வாயைத் திறப்பது இல்லை.

      இந்த மாதிரி ஒரு வாழ்வியல் முறையை உபன்யாசம் பண்றீங்க,எதை வைத்து அதுதான் பெஸ்டுன்னு நீங்க சொல்ல முடியுமா? இப்படித்தான் வாழ வேண்டுமென்று உங்கள் அறிவியலைக் கொண்டு சூத்திரங்கள் மூலம் உங்களால் காண்பிக்க முடியுமா? வேறெந்த அடிப்படையில் இது ஒழுக்கம், நல்லது, கடைபிடிக்கலாம், இது கெட்டது தவிர்க்கணும் என்று கூறுகிறீர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன். எங்களுக்கு அடிப்படை வியசதேவரும் வால்மீகும் அவர்கள வழி வந்தவர்களும். உங்களுக்கு அப்படி யாராச்சும் இருக்காங்களா? நீங்க சொல்வது உங்க கற்பனை. இதை தப்புன்னு இன்னொருத்தர் ஈசியா சொல்லிட்டுப் போய்விடலாம், என்ன பண்ணுவீங்க, இல்லைன்னு எப்படி நிரூபிப்பீங்க?

      உங்களுக்கு தெரிஞ்ச அறிவியல் முறைப்படி மேற்கண்ட நான்கு ஒழுக்க முறைகள் எதையுமே தப்புன்னு உங்களால் நிறுவ முடியாது. எப்படி வேண்டுமானாலும் அவிழ்த்து விட்ட கழுதை மாதிரி வாழலாம்.

      ஆமாம், நாங்கள் படிக்கும் இலக்கியங்கள் ஆபாசமாக உங்களுக்குத் தோன்றலாம் அது எங்கள் வாழ்க்கையில் ஏற்ப்படுத்தியுள்ள மாற்றத்தால் நாங்கள் வாழும் வாழ்க்கை, நாயின் லெக் பீசை வாயில் கவ்விக் கொண்டே பதிவு போடும் உங்கள் வாழ்க்கையை விட எவ்வளவோ மேல். அதை மட்டும் தான் என்னால் இப்போதைக்குச் சொல்ல முடியும்.

      Delete
  7. ஒரு வேண்டுகோள் மகாபாரதப் கதைகளை எடுத்தாளும் போடு அவை எந்த புத்தகத்தில், எந்த இடத்தில், எந்தப் பாடலில், எந்த அதிகாரத்தில் வந்தது என தயவுடன் கூறினால் .. சரிப் பார்க்க உதவியாக இருக்கும்... !!! அப்படி கூறவில்லை என்றால் இவை உங்கள் சொந்தப் புனைவாக கருதிக் கொள்கின்றோம். அவ்வ்வ்வ்வ் !

    ReplyDelete
    Replies
    1. இது எல்லோருக்கும் தெரிந்த கதை. தவறிருந்தால் சார்கோல் மாமுவே சுட்டிக் காட்டியிருப்பார் இப்போதும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை, பின்னூட்டப் பெட்டி திறந்தே தான் இருக்கிறது. கதையில் தவறு இருப்பதாக நினைக்கும் யார் வேண்டுமானாலும் சுட்டிக் காட்டலாம். அது சரி மொத்தமே கற்பனை, பொய் என்று நினைக்கும் நீர் எதற்காக மூலத்திற்கு போக வேண்டும்? உமது கணக்குப் படி இங்கேயும் பொய் அங்கேயும் பொய், அதை அங்கே வேறு போய் சரி பார்க்க வேண்டுமா என்ன?!!

      Delete
  8. மகாபாரதத்தின் இந்த கிளைக் கதையில் தருமபுத்திரரின் நிதானமும் அவர் தரும் பதில்களும் மிகமிக ரசிக்க வைப்பவை. இதை சுஜாதா அப்படியே எழுதி கடைசியில் யக்ஷன் வரம் கேட்கச் சொல்லும் போது, ‘‘எந்த வரமும் வேண்டாம். என் தம்பிகள் கார்பன் மோனாக்ஸைடு கலந்த தண்ணீரைக் குடித்ததால் மயக்கத்தில் இருக்கிறார்கள். இன்னும் கால் மணியில் எழுந்து விடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். வெவ்வேறு திசைகளில் ஒளிந்து கொண்டு குரல் கொடுக்கப் பழகிய அசரீரியே... உன் கேள்விகள் சுவாரஸ்யமாக இருந்தன. நன்றி’’ என்று சொல்வதாக குறும்புடன் முடித்திருப்பார். அதுவம் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. வலைச் சரத்தில் இருந்து வரும் தங்களை அன்போடு வரவேற்கிறேன்!! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள் நண்பரே !!

      Delete
  9. @ ஜெயதேவ்

    நல்ல பதிவு. முன்பே படித்திருந்த போதும் மறுமுறையும் ரசிக்க முடிந்தது . வாழ்த்துக்கள்

    @இக்பால் செல்வன்

    //ஒட்டு மொத்த மகாபாரத்தையும் ( ஒரிஜினல் பீஸ் ) படிக்க நேர்ந்தால் அப்புறம் பலரும் காறித் துப்பத் தொடங்குவார்கள் அந்த புனைவின் கதைமாந்தர்கள் மீது,,, அவ்வளவு ஆபாஸம், அபத்தம், கோணல்கள், வன்முறைகள், காமவெறித்தனங்கள், படுகொலைகள் எனப் பற்பல உள்ளன....//

    ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை எழுத்துக்களாய், கற்பனை கதா பாத்திரங்களாய் படித்தால் காரி துப்பதான் தோன்றும். புரிதல் இல்லாவிடில். கொஞ்சம் தெளிவு கொஞ்சம் தேடுதல் இருந்தால், கொஞ்சம் அறிவு இருந்தால் கூட போதும் அதை புரிந்துகொள்ள.

    சின்ன உதாரணம் இராமாயணத்தில் தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள் என்று பேசுவார்கள் (பகுத்தறிவு என்று பேசும் பன்.......) கொஞ்சம் சிந்திக்கும் அறிவு இருந்தால் கூட போதும்.

    ஒருவன் 100 வருடம் உயிருடன் வாழ்ந்தால் கூட அவன் வாழும் நாட்கள் வெறும் 36,500 நாட்கள் மட்டுமே இதில் குழந்தை பருவம் கழித்துவிட்டு கணக்கிட்டு தினம் ஒரு திருமணம் என்று செய்தால் கூட 60000 மனைவிகள் எப்படி? எழுதியவருக்கு இல்லை இதை கேட்பவருக்கு அறிவு இருக்காதா?. அது சொல்லும் கருத்து வேறு ஏதோவோ என்ற தேடல் இருந்தால் புரிந்து கொள்ள முடியும். கண்டிப்பாக முன்முடிவுடன் உங்கள் தேடல் இருந்தால் - நிரம்பிய கோப்பை மேலும் எதுவும் அது உள்வாங்காது.

    நன்றி

    ReplyDelete
  10. மிக்க நன்றி நண்பர் ஜெயதேவ் அவர்களே!

    நீங்கள் கூறிய கருத்துக்களை தாண்டி இன்னும் ஒருஅடி முன்சென்றால் இன்னும் அதன் ஆழமான தெளிவான பொருள் விளங்கும் .

    அதை தெளிவாக விளக்கும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை உணர்வு மட்டும் புரிதல் மட்டுமே.

    மற்றவர்களும் அதை பற்றி அறிந்து கொள்ள இந்த சுட்டியை காணவும்

    http://vediceye.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D


    நன்றி

    ReplyDelete
  11. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் குறைவில்லாமல் தரட்டும் !

    ReplyDelete