Friday, August 21, 2015

காபி செய்ய அனுமதிக்காத இணைய பக்கங்கள்- உடைப்பது எப்படி?

சில இணைய பக்கங்களில் ஒரு சங்கதி வெகுநாட்களாகவே எரிச்சலூட்டவதாக இருந்து வந்தது.  உதாரணத்துக்கு தினமலர் இணைய பக்கங்களைப் படிக்கும் போது சுவராஷ்யமான விஷயங்கள் இருந்தால் அதில் ஓரிரு வரிகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து காபி செய்ய முயன்றால் அது அனுமதிக்காது.  ரைட் கிளிக்,  லெஃப்ட் கிளிக் என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கோ வேலைக்கே ஆகாது என்று சொல்லும்.

நேற்று எதுயெதுக்கோ தீர்வு தரும் கூகுளாண்டவர் இதுக்கு ஒரு வழி சொல்ல மாட்டாரா என்று முயன்றேன், தேடலுக்குப் பின்னர் தெரிந்தது......  ஆம்....... "தீர்வு இருக்கிறது"!!

பொதுவாக தற்போதுள்ள இணைய உலவிகள் [Web Browsers] அனைத்தும் ஜாவா ஸ்க்ரிப்ட் என்னும் செயலிகளை அவற்றினுள்ளேயே இருந்து செயல்பட அனுமதிக்கின்றன.  அதிலுள்ள கோட்கள் மூலம் இணைய உளவிகள் பல்வேறு செயல்களை மேற்கொள்கின்றன.  இந்த ரைட் கிளிக்,  லெஃப்ட் கிளிக் செய்தால் செலக்சன்/காபி செய்யாதே என்ற கட்டளையை மேற்கொள்வதும் இதே ஜாவா ஸ்கிரிப்டுகள் தான்.

எனவே காபி செய்வது தடுக்கப் பட்டுள்ள ஒரு இணைய பக்கத்தில் உள்ள வாக்கியங்களையோ, படங்களையோ காபி செய்ய வேண்டுமானால் முதலில் இந்த ஜாவா ஸ்கிரிப்டு பயலை "செத்த சும்மா இருடா......" என்று ஓரங்கட்ட வேண்டும்.  காபி செய்து முடிந்த பின்னர் மீண்டும் அவனை செயல் பட அனுமதிக்க வேண்டும், இல்லா விட்டால் இணைய பக்கத்தில் நடக்க வேண்டிய மற்ற மாமூல் செயல்பாடுகள் பாதிக்கப் பட்டுவிடும்.  இதற்கான வழி முறைகள் ஒவ்வொரு பிரவுசருக்கும் மாறுபடும். இதை எளிய முறையில் விளக்கமாக கீழுள்ள இணைய பக்கத்தில் கொடுத்துள்ளார்கள்.  படித்து உங்கள் உலவிக்கு எது தேவையோ அந்த முறையை செயல் படுத்திக் கொள்ளலாம்.

How to Bypass Right Click Block on Any Website

இதில் ஒவ்வொரு முறையும் ஜாவா செயலிகளை நிறுத்துவதும், பின்னர் செயல்படுத்துவதும் அசவுகரியமாக இருக்கலாம்.  இதைவிட எளிதான வழி உள்ளதா என்றால், இருக்கிறது ஆனால் அது Firefox Browser க்கு மட்டும் உள்ளது.
  
"RightToClick" என்ற ADD-ON ஐ Firefox Browse-ல் நிறுவ வேண்டும்.  எப்படி? அதற்கு Firefox பிரவுசரைத் திறந்து இந்த இணைய பக்கதிற்குச் சென்று Add to Firefox ஐச் சொடுக்கவும்.


சில நொடிகளில் உங்கள் பிரவுசர் தரவிறக்கம் செய்து, "RightToClick" -ஐ நிறுவலாமா என்று அனுமதி கேட்கும், ஆமாம் என்று சொல்லுங்கள்.


நிறுவியதும் உங்கள் உலவியை மூடி பின்னர் மீண்டும் திறக்க வேண்டும். உலவியில் மேலே வலது மூலையில் ஒரு அம்புக் குறி தென்படும்.  காபி செய்ய அனுமதியில்லாத இணைய பக்கத்தை திறந்து, இந்த அம்புக் குறியின் மேல் சொடுக்கினால் போதும், வழக்கம் போல செலக்ட், காபி, வேண்டிய இடத்தில் பேஸ்ட் அனைத்தும் செய்யலாம்.  இம்முறையில் படங்கள், வார்த்தைகள் [Text] அனைத்தும் காபி செய்ய முடியும்.


இதை தங்களது சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் உபயோக்கிக்கவும், வேறோரோவர் படைப்பை மொத்தத்தையும் அனுமதியின்றி காபி செய்து தங்களது இணைய பக்கத்தில் போடுபவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும்.  நன்றி.............!! 

Friday, July 3, 2015

பாபநாசம்-பெரிய லாஜிக் ஓட்டை..........

த்ரிஷ்யம் மோகன்லால், மீனா நடித்து சக்கை போடு போட்ட மலையாளப் படம்.   தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ன்னு  ரீமேக் ஆகியிருக்கு, இப்போ தமிழில் பாபநாசம்.

ஒரிஜினல் படத்தில் மோகன்லால், படத்தோட கேரக்டருக்கு மிகவும் பொருந்தியிருந்தார், கூடவே ஜோடி மீனா பிரமாதமான நடிப்பு.   தற்போதைய தமிழ் படத்தின் டீசர் பார்க்க நேர்ந்தது.  அதைப் பார்த்தால், மலையாளப் படத்தின் ஜெராக்சை எடுத்து கேரக்டர்களின் தலையை வெட்டிப் போட்டு விட்டு தமிழ் காரர்களின் தலையை ஒட்டிய மாதிரி இருக்கிறது.  இதுக்கு பேசாமல் படத்தை டப்பிங் செய்தே போட்டிருக்கலாம். இதெல்லாம் பார்க்கும் போது படத்தை மலையாளத்தில் முன்னரே பார்த்திருந்தால் தமிழில் பார்க்கவே தேவையில்லை, ஒரு சுவராஸ்யமும் இருக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது.




போன மூன்று படங்களாக எதுக்குன்னே தெரியாம பூஜா குமாரையும், ஆன்ட்ரியாவையும் கூடவே இழுத்துக்கொண்டு திரிஞ்ச மனுஷன் இந்த படத்தில் இன்னொரு குளறுபடியும் பண்ணியிருக்காரு.  மீனாவுக்குப் பதில் தன்னுடன் வசித்து வரும் கௌதமியைப் போட்டிருக்காரு.  படம் மற்ற அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றுவிட்டதால், எந்த கழுதையைப் போட்டாலும் ஓடிடும் என்ற எண்ணம் ஒரு மனுஷனுக்கு வருவது நியாயம் தான் என்றாலும் மீனா அளவுக்கு இவர் ஜொலிப்பாரா  என்பது  சந்தேகமே.

படத்தின் கதையில் பெரிய லாஜிக் விரிசல் என்று ஒரு விஷயம் எனக்குப் பட்டது.  ஒரு குற்றம் நடந்து விட்டால், காவல் துறை மயிலே மயிலே இறகு போடு என்ற முறையில் அணுகாது,  சந்தேகப் படும்படி எவனும் கிடைக்கவில்லையென்றாலும் அப்பாவி, இளிச்சவாயன் எவனையாவது ஜீப்பில் அள்ளிப் போட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து நோண்டி நொங்கெடுடுத்துவிடுவார்கள்.  ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகன் தான் தன்னுடைய மகனுடைய சாவுக்குக் காரணம் என்று வழுவாக சந்தேகிக்கும் உயர்நிலை அதிகாரி  வெறும் கேள்வி பதில் லெவலிலேயே வீட்டிற்கு திருப்பி அனுப்புவதாக காட்டுவது நடைமுறைக்கு ஒவ்வாத லாஜிக் மீறல் என்பது நமது கருத்து.   கொடுமைப் படுத்துவது பின்னால் வருகிறது என்பது வேறு விஷயம்!!

படம் பார்க்கலாமா?  மலையாளத்தில் பார்க்கவில்லை என்றால் பார்க்கலாம், அப்புறம் உங்க இஷ்டம்!!


Wednesday, July 1, 2015

ஹெல்மெட்: வாழ்க்கை ஒரு வட்டம்............!!


ஹெல்மெட் பிசினஸ் டல்லடிக்குது, விற்பனை அவ்வளவா இல்லை.  என்ன செய்யலாம்னு ஹெல்மெட் கம்பனிக்காரன் யோசிக்கிறான்.  அவனுக்கு ஒரு ஐடியா வருது.  நேரா போய் கவனிக்க வேண்டியவங்களை கவனிக்கிறான், ஹெல்மெட் சேல்ஸ் ஆவதற்கு கொஞ்சம் உதவும் படி கேட்டுக் கொள்கிறான்.

கள்ளச் சாராயம் குடிச்சா செத்துப் போறாங்களே, அதனால சாகா வரம் தரக்கூடிய டாஸ்மாக் சாராயத்தை குடிக்க வச்ச மக்கள் நலனுக்காகவே செயல்படும் அரசு, வண்டி ஒட்டிகிட்டு போய் சாவட்டும்னு விட்டுடுவாங்களா என்ன?  


டூ வீலர் ஓட்டுறவனும், பின்னாடி உட்கார்ந்துகிட்டு போறவனும், பெண்களோ  7 கிளாஸ் மேல் படிப்பவனாகவோ இருந்தாலும் ஆளுக்கொரு ஹெல்மெட் போடணும்னு சட்டம் போடுது.

சென்னையில 30 லட்சம் ரெண்டு சக்கர வாகனம் ஓடுதாம்.  [சத்தியமா சைக்கிளைஎல்லாம் சேர்க்கலீங்க!!].  60 லட்சம் ஹெல்மெட் வித்து தீர்க்கும்.  500 ரூபாய் வித்த ஹெல்மெட் 1500 ரூபாய் ஆக்கினாலும், நைட்டு பன்னிரண்டு மணி வரைக்கும் ஹெல்மெட் கடையில கூட்டம் அலை மோதுது, கடைக்காரன் பணத்தை அள்ளுறான்.  ஏன்னா போடாட்டி அடுத்த நாள் பைக் வண்டியில ஆபீஸ் கூட போக முடியாதே!!

இப்போதைக்கு அஞ்சு லட்சம் ஹெல்மெட் வித்திருக்காம், இன்னும் இருக்கிற பயலுக எப்ப வாங்குவானுங்களோ தெரியல.  இப்போதைக்கு போடாதவங்களை முட்டு சந்துக்கு முட்டு சந்து நின்னுகிட்டு விரட்டி விரட்டி பிடிப்பாங்க.  ஒருவழியா இன்னும் ரெண்டு மாசத்துல எல்லா பயலுங்களும் ஒன்னுக்கு ரெண்டா ஹெல்மெட் வாங்கிருவானுங்க.  அப்புறம் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆனா கணக்கா கதை ஆகும், கேள்வி கேட்க நாதியிருக்காது.  


ஹெல்மெட் கம்பனிக்காரன், கடைக்காரன் ஓரளவுக்கு பணத்தை தேத்தியிருப்பான்.  சரி போதும்னு சிக்னல் குடுப்பான்.  சனங்க ஹெல்மெட்டால ரொம்ப சிரமப் படுறாங்கன்னு மக்கள் நலனுக்கே போராடும் அரசாங்கத்துக்கு திரும்பவும் தோணும்.  சரி, சரி, இனிமே போடத் தெவையில்லைம்பாங்க.

அப்போ ஒன்னுக்கு ரெண்டா வாங்கின ஹெல்மெட்டு?  அதை வீட்டுக்கு வெளியே கட்டி தொங்க விடுங்க, காக்க முட்டை போடும்!!    அப்படியே மழையில நனைஞ்சு, வெயிலில காய்ஞ்சு அது மக்கி துருப்பிடிச்சு ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாம போகும்.  அப்படியே ரெண்டு வருஷம் போனதுக்கு பின்னாடி................

ஹெல்மெட் சேல்ஸ் படுத்திருக்கும், ஹெல்மெட் கம்பனி காரன் கவனிக்க வேண்டியவங்களை கவனிப்பான்............. அப்புறம் .............??  அப்படியே பதிவோட முதல் வரிக்கு போங்க...........!!

Saturday, June 6, 2015

இரண்டு கொள்ளையர்கள், ஒரு அப்பாவி கதை.

ஒரு சலவைத் தொழிலாளி விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். 






அதை கண்கானித்துக் கொண்டிருந்த தக்ஷிணாமூர்த்தி என்ற ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று


“இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.

 உடனே சலவைத் தொழிலாளி   “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.

அதற்க்கு  தக்ஷிணாமூர்த்தி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் “ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம்” என்றான்.

சலவைத் தொழிலாளி “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.

தக்ஷிணாமூர்த்தி  எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.

அதற்குள் அங்கு வந்த இன்னொரு பெண் வைர வியாபாரி கோமளவல்லி அந்த சலவைத் தொழிலாளியிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டாள் .

இதை சற்றும் எதிர்பாராத தக்ஷிணாமூர்த்தி  அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய்” என்றான்.

அதைகேட்ட சலவைத் தொழிலாளி பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்” என்றவாறே தனது கழுதையை அழைத்துக் கொண்டு நடக்கலானான்.

பின்குறிப்பு:  இது அரசியல் பதிவு அல்ல.  

Friday, May 22, 2015

கழகங்களின் பரிணாமம்..............

பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரில் தனது  இயக்கத்தை உருவாக்கினார், அவருக்கு பதவி ஆசை இல்லை, ஆனாலும் மக்களிடத்தில் ஊடுருவி இருந்த மூடநம்பிக்கைகளை அகற்ற வேண்டும், குறிப்பிட்ட சாதியினரின் பித்தலாட்டத்தை வேரறுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அவரின் கீழ் இருந்த அண்ணாதுரைக்கு கொஞ்ச நாள் சென்ற பின்னர் பதவி ஆசை வந்தது.  பெரியாரை  கொள்கை அளவில் எதிர்க்காமல் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை காரணம் காட்டி தி.மு.கவை ஆரம்பித்தார்.

அண்ணாதுரை காலத்தில் கட்சியில் உள்ள உப தலைவர்கள் ஊக்குவிக்கப் பட்டனர், பூரண சுதந்திரம் இருந்தது.  எனவேதான், கருணாநிதி, எம்ஜிஆர் போன்றோர் உருவாயினர்.
அதன் பின்னர் கருணாநிதி, தனக்கு நிகராக [ஏன் மேலாக என்று கூடச் சொல்லலாம்] இருந்த தலைவர்களை , குழியில் தள்ளிவிட்டு திமுக வை தனதாக்கிக் கொண்டார்.  பின்னர் அதை தன்னுடைய குடும்பச் சொத்தாக்கியும் விட்டார்.

இருந்த போதிலும் அவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள் திறமைசாலிகளாகவே இருந்தனர்.  துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் போன்றோர் கட்சித் தலைமையை எதிர்த்து கேள்வியெழுப்பும் அளவுக்கு சுதந்திரம் இருந்தது.

பல முறை ஆட்சியை இழந்த போதிலும் பழையவர்களே அமைச்சர்கள் ஆனார்கள்.  குண்டக்க மண்டக்க என்று தூக்கியடிப்பது குறைவாகவே இருந்தது.

அதே போலவே, எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம் பெற்றோரும் பண்ரூட்டி, நெடுஞ்செழியன், ஆர் எம் வீரப்பன் என ஜாம்பவான்களாகவே இருந்தனர். 
கருணாநிதி, எம்ஜிஆர் இருவருக்கும் இருந்த ஒற்றுமை இவர்கள் கட்சிக்கு விழுந்த ஓட்டுக்கள் அத்தனையும் இவர்கள் இருவருக்காக மட்டுமே விழுந்தவை.

இவர்களிடத்தில் இருந்த இன்னொரு ஒற்றுமை, இவர்களுக்குப் பின்னர் யார் கட்சியை நடத்துவதற்காக ஒரு வழுவான தலைமையை உருவாக்காமல் போனதுதான்.


உதாரணத்துக்கு அண்ணாதுரை காலத்தில் இருந்து கருணாநிதி, எம்ஜிஆர் என அனைவரது மந்திரி சபைகளிலும் நம்பர் இரண்டு இடத்தில் இருந்த நெடுஞ்செழியன், எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் சென்னையில் வேளச்சேரியில் தனித்து நின்று அவருடன் போட்டியிட்ட எஸ்.வி. சேகரை விட குறைந்த வாக்குகள் பெற்று டெபாசிட்டையும் இழந்திருந்தார். 


என்னதான் இருந்தாலும், கருணாநிதி, எம்ஜிஆர் இருவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களும் சாமர்த்தியசாலிகள், திறம்பட செயல்படுபவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

இருவருமே தங்களது அமைச்சர்களை யாரையும் நாயைப் போலவோ, தலையில் உள்ள கேசத்திற்கு இணையாகவோ நினைக்காமல் மனிதர்களாகவே மதித்தார்கள்,அமைச்சர்கள் வெறும் தஞ்சாவூர் பொம்மைகளாக இருக்கவில்லை, கருத்து சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தார்கள், காலில் விழுந்தால் தான் வாழமுடியும் என்ற நிலை அப்போது இல்லை, இப்போதும் திமுகாவில் இல்லை.

மொத்தத்தில் தாங்கள் தனித்து பெரிய தலைவர்கள் ஆக முடியாவிட்டாலும் தன்மானத்துடன் அவர்களால் அமைச்சர்களாக இருக்க முடிந்தது.  ம்ம்............  அது ஒரு கனாக்காலம்.

Saturday, April 11, 2015

உண்ட கட்டி வாங்கி தின்ன- வேணும் ஆதார்கார்ட்!!

நல்லாக் கேட்டுக்குங்க,

முதல்ல ஆதார் கார்டையும் வோட்டர் ஐடி கார்டையும் தாசில்தார் ஆஃபிஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

அப்புறம்?

ஒட்டர் ஐடி கார்டையும் ரேஷன் கார்டையும் சிவில் சப்ளை ஆஃபீசுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

சரி, அப்புறம்?

ரேஷன் கார்டையும் பான் கார்டையும் இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

ஓ அப்புறம்?

ஆதார் கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!
அதுவும் சரிதான், அப்புறம்?

பாங்க் பாஸ்புக்கையும் கேஸ் புக்கையும் கேஸ் ஆஃபீஸுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!
ம்ம்ம்ம்ம்ம், அப்ப்ப்புறம்?

மேப் இன் கார்டையும் பான் கார்டையும் ஆதார் கார்டையும் ஸ்டாக் புரோக்கர்ட்ட குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

ஓஓஓஓஓ அப்புறம்?

மேப் இன் கார்டு, பான் கார்டு, கிரிடிட் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி கார்டு, பேங்க் பாஸ் புக்கு, கேஸ் புக்கு எல்லாத்தையும் பாஸ்ப்போர்ட் ஆஃபீஸுக்கு எடுத்துட்டு போயி லிங்க் பண்ணிக்குங்க!

ஐயையோ அப்புறம்?

இதெல்லாம் லிங்க் பண்ணியாச்சுண்ணு கலெக்டர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வந்து மாநகராட்சி ஆஃபீஸுல குடுத்தா அவங்க ஒரு கார்டு இஷ்யு பண்ணுவாங்க!

ஐயையோ இன்னொரு கார்டா, அப்புறம்?

அந்த கார்டை எடுத்துகிட்டு பத்துக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற பாடிகார்ட் முனீஸ்வரன் கோவில்ல டெய்லி காமிச்சியினாக்க ஒரு உண்ட கட்டி தருவானுங்க, அதை வாங்கி உங்க குடும்பம் முழுவதும் பங்கு போட்டு சாப்பிட்டுட்டு சந்தோஷமா வாழ்க்கையை அனுபவி!,


ஹோ........... ஆஹாஹாஹாஹாஹா!