Tuesday, April 8, 2014

கிரிக்கெட் இரசிகர்களின் கோபம் சரியா?

வணக்கம் மக்கள்ஸ்,

ரெண்டு நாளா கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீடு ரசிகர்களால் தாக்கப் பட்டது குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  மேலும் T20 இறுதியாட்டத்தில் அவர் ஆட்டம் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.  அவர் தான் தோல்விக்கே காரணம் என்பது போலவும் பேசப் படுகிறது, ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஏன்னா நாம்தான் ஒரு மேட்ச் கூட பார்க்கவே இல்லையே!!  இத்தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியாத ரசிகர்கள் யுவராஜ் சிங் வீட்டை தாக்கும் அளவிற்குச் சென்றிருக்கிறார்கள்.  மேலும், கிரிக்கெட் வீரர் ஒருவரது வீடு தாக்கப் பட்டது இது முதன் முறையல்ல. முன்னர் தோனிக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்கிறது.  அது மட்டுமல்ல, வெவ்வேறு கால கட்டங்களில் இரசிகர்கள் தங்களது கோபங்களை வெவ்வேறு விதங்களில் வெளிக்காட்டியே வந்திருக்கிறார்கள்.  இதில் கொல்கத்தா இரசிகர்கள் நம்பர் ஒன் எனலாம்.  ஈடன் கார்டனில் நான் இனி ஒருபோதும் விளையாடவே மாட்டேன் என்று கவாஸ்கர் சொல்லுமளவுக்கெல்லாம் இரசிகர்கள் நடத்தை இருந்திருக்கிறது.

கிரிக்கெட் இரசிகர்களின் இந்தக் கோபம் நியாயம் தானா?  இதை நாம் சற்றே யோசிக்க வேண்டியிருக்கிறது.  

"எத்தனையோ மேட்ச் ஜெயிச்சிருக்கோமே, இப்போ தோத்திட்டோம்,  after all இது ஒரு விளையாட்டு தானே, அதைப் போய் பெரிசா எடுத்துக்கலாமா?  இதே இலங்கை கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை இறுதிப் போட்டி வரை வந்த பின்னர் தோற்றுப் போய் நாடு திரும்பியிருக்கிறது, அங்கே இரசிகர்கள் இப்படியெல்லாம் ஆர்பாட்டம் செய்யவில்லை, இந்திய இரசிகர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்க வேண்டும்?"  என்றெல்லாம் ஊடகங்களில் ஒப்பாரி வைக்கப் படுகிறது.  அதுசரி, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வாழ்வில் அதிக பட்சம் எவ்வளவு சம்பாதிப்பார்கள்,  அதே இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களின் வருவாய் என்ன என்பது குறித்து மட்டும் யாரும் பேசமாட்டார்கள்!!

இவர்களுக்கெல்லாம் நாம் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது.  இந்தியாவைப் பொருத்தவரை உண்மையான கிரிக்கெட் ஆட்டம் கபில்தேவோடு போய்விட்டது.  அவர் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஜெயித்ததன் பலனை அதில் ஆடிய வீரர்கள் அனுபவிக்க வில்லை,  அவர்கள் பலருக்கு சொந்த வீடு கூட இல்லை. ஆனால் இப்போது நிலைமையே வேறு,  நேற்றைக்கு வந்த "விரட்டிய கோழி", "ரொட்டி குருமா" எல்லாம் கோடியில் புரள்கிறது.  அதுமட்டுமல்ல போகிற இடமெல்லாம் இவர்களுடன் பைக்கில் சுற்றுவதற்கு ஒரு சினிமாக்காரி கிடைக்கிறாள்.  சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருத்தர் நூற்றுக் கணக்கான கோடி சொத்து சேர்க்க முடிகிறது, இந்தியாவில் வேறு எந்த விளையாட்டிற்கும் இது சாத்தியமே இல்லை.  ஹாக்கி வீரர்கள் ஆசிய கோப்பை வென்றால் கிடைப்பது தலா மூன்று இலட்சம் மட்டுமே.


அப்படியானால் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே எப்படி பணம் கூரையைப் பிச்சுகிட்டு கொட்டுது?  ஏன்னா இவர்கள் எஞ்சின் ஆயில், கார் டயர், மைசூர் சாண்டல் சோப்பு என சொரி, படைக்கு விற்கும் லோஷனைத் தவிர மற்ற அனைத்து நுகர்பொருள் நிறுவனங்களுக்கும் விளம்பர தூதுவராக ஆகிறார்கள், அவர்களது விளம்பரங்களில் தோன்ற கோடிக்கணக்கில் பெறுகிறார்கள்.  இவர்களுக்கு காசு கொட்டுகிறது.

அதுசரி, விளம்பரதாரர் இவர்களுக்கு சும்மா குடுத்திடுவானா?  இவனுங்க கோலாக்கள் எதையும் குடிப்பதில்லை, குடித்தால் கிரிக்கெட் ஆடமுடியாது,  ஆனால் இவர்கள் விளம்பரங்களில் சொல்கிறார்களே என்று கிரிக்கெட் ரசிகன் கோலாவை உள்ளே தள்ளுகிறான், அது அவனுடைய உடல்நலனுக்கு விளைவிக்கும் தீங்கை உணராமலேயே.  இவர்களை விளம்பரத்தில் போட்டால் கழுதை மூத்திரமும் பாட்டிலில் அடைத்து விற்று ஊருபட்ட காசு அல்ல முடியும் என்பதால் தானே அவன் காசு குடுக்கிறான்?

எனவே கிரிக்கெட் ஆட்டக் காரனுக்கு கிடைக்கும் பணமும் புகழும் அந்தஸ்தும் கடைக்கோடி இரசிகன் "தொல்லை"காட்சி முன்னர் உட்கார்ந்து வெறித்தனமாக எல்லா உருப்படாத கிரிக்கெட் மேட்சுகளையும் பார்ப்பதால் தான்.  அவன் அந்த ஆட்டத்தை சீரியசாக எடுத்துக் கொண்டதால் தான் கிரிக்கெட் ஆட்டக் காரனுக்கு பணம் கொட்டுகிறது.

இவர்கள் சொல்வது போல அவன் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் விட்டிருந்தானேயானால் நம்மைப் போல அவனும் வெறும் 8 மணிச் செய்தியில் பார்த்து விட்டு அப்போதே மறந்திருப்பான்.  கிரிக்கெட் ஆட்டம் பார்க்கப் படுவதில்லை என்ற தகவல் விளம்பரதாரருக்குப் போகும், அவன் எல்லா ஸ்பான்சர்ஷிப்பையும் பிடுங்கி விடுவான், இன்றைக்கு கோடியில் புரளும் கிரிக்கெட் ஆட்டக் காரன் மற்ற எல்லா விளையாட்டு வீரர்களையும் போலவே ஆண்டியாகவே இருக்க வேண்டியிருந்திருக்கும்.

கிரிக்கெட் வாரியத்துக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் பண வருவாயை பெற்றுத் தந்தவன் இந்த இரசிகன்.

பல வருடங்களாக மேட்ச் பிக்சிங் செய்து நம்மை முட்டாளாக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்தும் தொடர்ந்து கிரிக்கெட் மேல் நம்பிக்கையை இழக்காது உங்கள் வருவாயை காத்து வந்தவன் இந்த இரசிகன்.

வருடக் கணக்கில் ஓரிலக்க எண்ணிலேயே ரன் குவித்தவனையும் பொறுத்துக் கொண்டு அவனை நூறாவது சதம் அடிக்க வைத்து அழகு பார்த்தவன் இந்த இரசிகன்.

வீட்டில் புலி, வெளியில் எங்கே போனாலும் எலி என்று வெளிநாட்டு ஆட்டங்கள் பலவற்றில் பல்லு பகுடு உடைந்து வந்தாலும் அடுத்த ஆட்டத்திலேயே அதையெல்லாம் மறந்து இந்தியா........இந்தியா........ என்று கோஷம் போட்டு ஆதரித்தவன் இந்த இரசிகன்.

தொலைக்காட்சியில் ஆட்டத்தின் நடுவே எப்போதாவது விளம்பரம் என்பது போய் ஒவ்வொரு ஓவருக்கும் முடிவில் என்றாகி, தற்போது ஒவ்வொரு பந்துக்கும் நடுவே விளம்பரம் என்றாலும், பொறுத்துக் கொண்டவன் இந்த இரசிகன்.

கண்ணில் ரெண்டு ஓட்டையை விட்டு விட்டு உடம்பு பூராவும் விளம்பரங்களை ஒட்டிக் கொண்டு ஒரு விளம்பர வாகனம் போல ஆட வந்தாலும் ஏற்றுக் கொண்டவன் இந்த இரசிகன்.  கிரிக்கெட் மைதானத்தின் ஒவ்வொரு  அங்கமும் விளம்பரம், வர்ணனையாளர் வார்த்தைகளில் விளம்பரம்.  4,6 அடித்தாலும், கேட்ச் பிடித்தாலும் அவற்றுக்கெல்லாம் விளம்பரக் கம்பனி பேரு வச்சதையும் பொறுத்துக் கொண்டவன் இந்த இரசிகன்.

கிரிக்கெட் ஆட்டக் காரனையும், கிரிக்கெட் வாரியத்தையும் கோடியில் புரள வைத்திருப்பது ரசிகனின் கிரிக்கெட் மீதான அளவிலடங்கா பற்றுதலேயாகும்.  அதுவே  நீங்கள் சொதப்பும்  போதும், உப்பு சப்பில்லாத ஏனோ தானோ ஆட்டம் ஆடி தோற்கும் போதும் கோபமாக மாறி வெளிப்படுகிறது.  இந்த கோபத்துக்கும், உங்கள் பணம் புகழ் இரண்டுக்கும்  மூல காரணம் ஒன்றே.  எனவே கிரிக்கெட் இரசிகனின் மூலம் கிடைத்த கோடி கணக்கான பணம் வேண்டும், ஆனால் அவன் கோபப் படக்கூடாது என்பதில் துளியும் நியாயம் இல்லை, காரணம் இரண்டும் தோன்றுவது ஒரே மூலத்தில், எனவே ஒன்றில்லாமல் மற்றொன்று சாத்தியமேயில்லை.  அவனது கோபத்தை வெளிப் படுத்திய விதம் தவறாக இருக்கலாம், ஆனால் அது தான் உங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, ஆனால் பதிலுக்கு அவனை கோலா குடிக்கச் சொல்லி அவனது உடல் நலத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் செய்துவரும்  இச்செயல் மாபெரும் நம்பிக்கைத் துரோகம்  என்பதை கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், கிரிக்கெட் வாரியமும் மறக்க வேண்டாம்.



14 comments:

  1. Very good one. I like most of your points
    //
    வருடக் கணக்கில் ஓரிலக்க எண்ணிலேயே ரன் குவித்தவனையும் பொறுத்துக் கொண்டு அவனை நூறாவது சதம் அடிக்க வைத்து அழகு பார்த்தவன் இந்த இரசிகன்.
    //

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..........!!

      Delete
  2. சிறப்பான ஒரு இடுகை! கோடிகள் அவர்கள் குவிக்க தெருக்கோடியில் டீவியில் கிரிக்கெட் பார்த்து ஏமாந்த ரசிகர்கள் தங்கள் கோபத்தை எப்படித்தான் காட்டுவார்கள்? நல்ல பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @ ‘தளிர்’ சுரேஷ்

      வருகைக்கு நன்றி நண்பரே!!

      Delete
  3. Replies
    1. அப்பாடா.......!! கடைசியில உம்ம வாயில் இருந்து ஒரு நல்ல வார்த்தை.........!! ரொம்ப கஷ்டம்யா!!

      Delete
  4. விளம்பரம், மேட்ச்ஃபிக்சிங் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியா ஆடுகிறது என்றாலேயே ஜெயிக்கத்தான் வேண்டுமா? ஆட்டத்தில் தோல்வி என்பதே வராதா? உலகின் எத்தனையோ பந்தயங்களை வென்ற செரினா வில்லியம்ஸ் எல்லாம் சில ஆட்டங்களில் தோற்றுவிட்டு தோல்வியை ஏற்றபடி கைகுலுக்கிவிட்டுப் போவதையெல்லாம் இவர்கள் பார்த்ததே இல்லையா?
    முதலில் இலங்கையுடன் ஆடுவதே ஒரு போங்காட்டம்தான். அதில் என்ன உணர்ச்சியும் வேகமும்..........?

    ReplyDelete
  5. 5 மேட்சுகளில் தோனி தலைமையில் வெற்றி பெற்ற இந்தியர்கள் 1 மேட்சில் ஶ்ரீலங்காவுடன் தோல்வியடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியவில்லை இந்த கூமுட்டை கிரிக்கெட் ரசிகனுக்கு.

    ReplyDelete
    Replies
    1. @ Amudhavan
      @ Syed I H

      போராடித் தோற்றிருந்தால் அத்தோல்வியை ஒப்புக் கொள்கிறார்கள், ஆனால் ஏனோ தானோ என்று ஒரு ஆட்டம் ஆடுவது, சொதப்பல் ஆட்டம் இதெல்லாம் இரசிகனுக்கு எற்புடையதாக இல்லை.

      Delete
  6. இதுவும் மேட்ச் பிக்ஸ்சிங்கா?
    புல்லையாவும் பஞ்சாப் சிங்கமும் சேர்ந்து செய்த சதி என்று பட்சி சொல்லுது!
    நூற்றி நாற்பது கோடி பெட்டிங்கில் ஜெயித்ததாக கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. \\இதுவும் மேட்ச் பிக்ஸ்சிங்கா? \\இவை வெறும் யூகத்தினடிப்படையில் எழுதப் படுபவை, உண்மையாகவும் இருக்கலாம், புரளியாகவும் இருக்கலாம்.

      Delete
  7. கிரிக்கெட் வியாபாரிகளை நன்றாக வசை பாடியுள்ளீர்கள். எனக்கும் இவர்களை சகட்டு மேனிக்கு திட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பம் இருக்கிறது.

    ReplyDelete
  8. கிரிக்கெட் அதன் நம்பகத்தன்மையை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டன.

    ReplyDelete
  9. அருமையான பதிவு நண்பரே! எல்லோர் மனதிலும் இதே கேள்விதான்.......

    ReplyDelete