Thursday, May 9, 2013

எதையாச்சும் மூணு வரி எழுதிட்டா அது ஹைக்கூ ஆயிடுமா?


வணக்கம் மக்கள்ஸ்!!

இப்போ யாரைப் பார்த்தாலும் கவிதை எழுத ஆரம்பிச்சிடாங்க.  நமக்கு கழுதையைப் பத்தி தெரிஞ்ச அளவுக்கு கூட கவிதையைப் பத்தி தெரியாது. கவிதை எழுதுவதற்கு சில கட்டுப் பாடுகளை கடைபிடிக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் எழுதுவது நெட்டே இல்லாமல் டென்னிஸ் ஆடுவது போல அப்படின்னு யாரோ விஷயம் தெரிஞ்சவங்க உவமை சொல்லியிருக்காங்க, ஏனோ தெரியலை நமக்கு இந்த உவமை ரொம்ப புடிச்சுப் போச்சு.

ஆனால் இன்னைக்கு கவிதைன்னு நம்மாளுங்க எழுதுவதை படிச்சா வேடிக்கையா இருக்கு.  ஒரு வரியில் எழுதுவதை மடக்கி மடக்கி நாலு வரியாக எழுதினால் அது கவிதை என்ற ரேஞ்சில் தான் அவை இருக்கின்றன, உரைநடைக்கும் அதற்கும் வேறுபாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  இன்னைக்கு நம்முடைய மெயின் டாபிக் கவிதை அல்ல, ஹைக்கூ கவிதை!!

ஹைக்கூ ஜப்பானில் ஆரம்பித்திருக்கிறது.  கவிதை எழுத விதிகள் இருப்பது போலவே இந்த குறுங் கவிதை எழுதுவதற்கும் சில விதிமுறைகள், மரபுகள் இருக்கு.  இதைப் பத்தி பல இணைய தளங்களில் நண்பர்கள் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.


ஹைக்கூ எழுத கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், மரபுகளில் பலவற்றையும் பின்பற்றாத நம்மாளுங்க, ஒன்றே ஒன்றை மட்டும் தப்பாம செய்கிறார்கள்.   அது மூன்று வரிகளில் எழுதுவது!!  கொடுமை என்னவென்றால் உரைநடையை மடக்கி மடக்கி எழுதி அதை கவிதை எனும் அன்பர்கள், இங்கேயும் மூன்று வரி உரைநடையை எழுதிவிட்டு அதை ஹைக்கூ என்று சொல்லிக் கொள்வதுதான்.  அதிலும் சிலர் நான்கைந்து வரிகளை எழுதவும் செய்கிறார்கள் என்பது இன்னமும் வேடிக்கை.

ஹைக்கூ விதிமுறைகளைப் பற்றி மேல் சொன்ன தளங்களிலோ, வேறு தளங்களிலோ பார்த்துக் கொள்ளுங்கள், ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.    அது, ஹைக்கூ மூன்று வரிகளில், முதல் இரண்டு வரிகளைப் படித்தாலும்  நீங்கள் சொல்ல வருவது விளங்கக் கூடாது, மூன்றாவது வரியைப் படித்த பின்னர்தான் முதல் இரண்டு வரிகளும் சேர்த்து அர்த்தம் விளங்க வேண்டும்.  அதுதான் ஹைக்கூவின் ஸ்பெஷாலிட்டியே!!

இதை மேற்கண்ட இணைய பக்கத்தில் இவ்வாறு விளக்கியுள்ளார்கள்: 

ஹைக்கூ வாசிப்பு முறை
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும்.

உதாரணம்:

எனக்கும் அவளுக்கும்
ஒரு ஒற்றுமை
என் நண்பனைப் பிடித்துப்போனதுதான்!

பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்
- நா.முத்துக்குமார்


உன் முகத்தை காண
கணக்கில்லா ரசிகர் கூட்டங்கள்.
நிலவினை சுற்றி நட்சத்திரங்கள்...

வண்ணப்
புடவைகளின் அணிவரிசை.
"பட்டாம் பூச்சிகள்"... 

கடும் வெயிலில்
இன்னும் ஆடும்
காலி ஊஞ்சல்!.  [சுஜாதா]

வெள்ளையடித்த சுவர்
மேலும் அழகாய்
குழந்தையின் கிறுக்கல்கள்
- சீனு. தமிழ்மணி

ஆனால், இவையெல்லாம் ஹைக்கூவா?

அகத் தூய்மையும்
ஆன்ம பலமும்...
பொய்மை பேசாதிருத்தல்!

பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்...
இலக்கைநோக்கி!

மலர்கள் அடர்ந்த சோலை
ரம்மியமான மாலை
புத்தகத்துடன் நான் 

இதெல்லாம் ஹைக்கூவாம்.......செத்தாண்டா சேகரு...

எனவே மக்களே ஹைக்கூவை ஹைக்கூவா எழுதுங்க ஒருவரி உரைநடையை மூணு வரியாக்கி அதுதான் ஹைக்கூன்னு  சொல்லி சாவடிக்காதீங்க....

வணக்கம் மக்கள்ஸ்!! 

6 comments:

  1. குழந்தையின் கிறுக்கல்களை மிகவும் (சீனு.தமிழ்மணி) ரசித்தேன்...

    இணைப்புகள் பலருக்கும் உதவலாம்...



    ReplyDelete
  2. பத்து இந்த மாதிரி எழுதினா அதுல நமக்கே தெரியாம ஒண்ணு கவிதையாயிடும் பாஸ். .ஹிஹிஹி
    ஒருவர் கவிதை என்று சொல்வதை அனைவரும் கவிதை என்று ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
    =================================
    "இரவிலே வாங்கினோம்
    சுதந்திரம்
    இன்னும் விடியவே இல்லை".
    ஒரு மாணவன் எழுதிய இதை நல்ல கவிதை என்று சிலாகித்தார் அப்துல் ரகுமான்
    ஆனால் சுஜாதா அதை கவிதை ஏற்று கொள்ளாமல் சாமார்த்தியமான வரிகள் என்கிறார்.
    ஹைக்கூ என்பதை சிறு கவிதை என்றுதான் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.அதனால்தான் சிலர் மூன்று வரிகள் எழுதிவிட்டு ஹைக்கூ என்கிறார்கள்.
    ஜப்பானிய ஹைக்கூவின் விதி முறைகள் நமக்கு முற்றிலும் பொருந்துவதற்கு வாய்ப்பு குறைவு.
    இப்படித்தான் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதித்தால் அதில் கவிதைத் தன்மை குறைந்துவிட வாய்ப்பு உண்டு.

    யானைக்கு மதம் பிடித்தது
    எல்லோரும் ஓடினார்கள்
    எந்த மதம் என்று பாராமல்

    ReplyDelete
  3. ஹைகூவிற்கு தலைப்பு இருக்காது.

    இதோ ஒரு ஹைகூ...

    இந்த அழகிய பூக்களிடையே
    ஒரு மரங்கொத்தி தேடுகிறது...
    செத்த மரத்தை !

    ஹைகூ கவிதை பற்றி கவிகோ அப்துல் ரகுமான் எழுதிய கவியோடை
    இங்கேயும் வந்து வாசிச்சு பாருங்க

    http://eniyavaikooral.blogspot.com/2012/03/blog-post_6763.html

    ReplyDelete
  4. //இப்போ யாரைப் பார்த்தாலும் கவிதை எழுத ஆரம்பிச்சிடாங்க. // -(என்னை ஒண்ணும் சொல்லலே இல்லே..?) ஹா..ஹா..!

    // இன்னைக்கு கவிதைன்னு நம்மாளுங்க எழுதுவதை படிச்சா வேடிக்கையா இருக்கு. ஒரு வரியில் எழுதுவதை மடக்கி மடக்கி நாலு வரியாக எழுதினால் அது கவிதை என்ற ரேஞ்சில் தான் அவை இருக்கின்றன, உரைநடைக்கும் அதற்கும் வேறுபாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.//- இதுக்கு பேர்தான் புதுக்கவிதைன்னு ஆரம்பிச்சி வச்சாங்க. ஆனாலும் மரபுக்கவிதைகளை விட பாமரனும் புரிஞ்சிக்கிற மாதிரி இருக்கிற புதுக்கவிதைகளைத்தான் எனக்கு பிடிக்கும். வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போரை படித்து பாருங்கள். விவசாயம், சுற்று சூழல் விழிப்புணர்வை கவிதை நடையில் கதையாக இருப்பதால்தான் ஆழப்பதிந்து விடுகிறது விஷயம். அதையே பாடமாக சீரியஸா சொல்லியிருந்தா எப்படி இருந்திருக்கும்...? ( அச்சச்சோ உங்களுக்குத்தான் கவிதையே பிடிக்காதுன்னு சொல்லிட்டிங்களே...)

    கவிதை எப்படி வேணும்னாலும் இருக்கலாம். அதை சுவாரஸ்யமா சொல்ற விதத்துலதான் இருக்கு..! ரசனை ஆளுக்கு ஆள் மாறுபடும். எனக்கு இயல்பான நடை பிடிக்கும். ஓவர் வர்ணனை கலந்து எழுதும் கவிதைகளை பார்த்தாலே ஓட்டம்தான். அதை எழுதறவங்களுக்கே புரியுமான்னு தெரியலை...

    உங்க உதாரண ஹைக்கு சூப்பர்!


    ReplyDelete
  5. //எனவே மக்களே ஹைக்கூவை ஹைக்கூவா எழுதுங்க ஒருவரி உரைநடையை மூணு வரியாக்கி அதுதான் ஹைக்கூன்னு சொல்லி சாவடிக்காதீங்க....//

    ஹஹஹா .. எத்தனை தடவை எத்தனைப் பேரிடம் சொல்லிவிட்டேன், பலர் இன்னம் கேட்டபாடில்லை.. ஹைக்கூ என்பதை புதுக்கவி முறை எனக் கருதி பல கடுப்பளிக்கின்றனர், அது ஜப்பானிய மரபுக் கவி வகை. அதற்கென்று தனித்துவமான வரையறைகள் இருக்கின்றன, குறிப்பாக ஒரு காலநிலையை அது உணர்த்த வேண்டும். சொன்னா கேட்கவா போறாங்க.

    நல்ல காலம் இரண்டு வரியில் எதையாவது எழுதிவிட்டு, அது தான் குறள் எனக் கூறவில்லை... அவ்வ்வ் !

    தம. 5

    ReplyDelete