Thursday, September 27, 2012

ஒளியின் [Light] வேகத்துக்கும் எல்லை உண்டு என கண்டுபிடிக்கப் பட்ட கதை!

திருவிழாக்களில் வானவேடிக்கைகள் பார்த்திருப்பீர்கள்.  ஒரு வானவெடி மேலே சென்று வெடித்தவுடன் அதிலிருந்து வெளிச்சம் முதலில் தெரியும், அடுத்து ஒரு கணம் கழித்து அது வெடித்த சத்தம் கேட்கும்.  வெளிச்சம், சப்தம் இரண்டுமே வானவெடி வெடித்தபோதே நடந்தது எனினும் ஒளி [Light] விரைவாக நம்மை வந்தடைந்தது, ஆனால் ஒலி [Sound] சற்று தாமதாக வந்தது.  ஏனெனில் காற்றில் அதன் வேகம் வினாடிக்கு 330 மீட்டர்கள் மட்டுமே.  நீங்க 700  மீட்டர் தொலைவில் இருக்கிறீர்கள் என்றால் வெடித்த பின்னர் இரண்டு வினாடி கழித்தே அதன் சப்தம் உங்களுக்குக் கேட்கும்.  இதைப் போலவே ஒளியின் வேகத்துக்கும் [Light] ஏதாவது  எல்லையுண்டா  என்று நெடுங்காலமாக சிந்திக்கப் பட்டு வந்தது. பதினேழாம் நூற்றாண்டு வரை ஒளியின் வேகத்துக்கு எல்லையே இல்லை என்ற நம்பிக்கையே  நிலவி வந்தது.  இதன் பொருள் ஒரு நிகழ்வு, அது எவ்வளவு தூரத்தில் நிகழ்ந்தாலும் உங்களால் உடனடியாகப் பார்க்க முடியும் என்பதே.  அது உண்மையா? 

கலிலியோ கலிலி [Galileo Galilei 1564-1642], நவீன அறிவியலின் தந்தை, இயற்பியல், கணிதம், வானவியலில் சிறந்து விளங்கிய இத்தாலிய தத்துவஞானி!!

ஒளியின் வேகத்தை அளக்கலாம் என்ற முதல் முயற்சியை இயற்பியலின் தந்தை   என்றழைக்கப்படும் கலிலியோ 1638 ஆம் ஆண்டு மேற்கொண்டார். அவர் செய்தது இதுதான்.  ஒரு மைல் இடைவெளியில் உள்ள இரண்டு மலை உச்சிகளில், மூடித் திறக்கும் லாந்தர்ன் விளக்குகளோடு, ஒன்றில் கலிலியோ நின்று கொண்டு, இன்னொன்றின் மீது அவருடைய உதவியாளரை நிற்க வைத்தார்.  இவருடைய விளக்கின்  கதவை இவர்  திறந்து மூடுவதைப் பார்த்தவுடன் அவரது உதவியாளர் தனது விளக்கின் கதவைத் திறந்து மூட வேண்டும். அதை பார்த்து கலிலியோ தனது கடிகாரத்தில் எவ்வளவு நேரம் ஆனது என்பதை வைத்து ஒளியின் வேகத்தைக் கணக்கிடலாம். 




இது நல்ல முயற்சி என்றாலும் பலன் தராதது.  ஏனெனில் 1 மைல் தூரத்தைக் கடக்க ஒளி ஒரு வினாடியில் 1,86,000 யில் ஒரு பங்கு நேரமே எடுத்துக் கொள்ளும், மனிதன் கதவைத் திறந்து மூடுவதற்கே ஒரு வினாடியில் ஐந்தில் ஒரு பங்கு நேரம் ஆகிவிடும், மேலும் அவர்கள் பயன்படுத்திய கடிகாரம் ஒன்றும் ஒரு கோடி நிகழ்ச்சியில் வருவது போல ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தையும் கூட துல்லியமாகக் காட்டக் கூடியது அல்ல.  இந்தச் சோதனைகளை பல்வேறு தூரங்களை வைத்து பலமுறை திரும்பச் திரும்ப செய்தாலும் கிடைத்த முடிவில் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கவில்லை. இறுதியாக, ஒளியின் வேகம் முடிவிலி [Infinity] இல்லை, ஆனாலும் ஒலியின் [Sound ] வேகத்தைக் காட்டிலும் பத்து மடங்காவது பெரியது என்ற முடிவுக்கு கலிலியோ வந்தார்.

கலிலியோவின் சோதனைகள் மூலம் ஒளியின் வேகம் முடிவிலி [Infinity] இல்லை என்று நிரூபிக்க இயலாவிட்டாலும், வானவியலில் அவரது மற்றொரு பங்களிப்பு அதற்க்கு உதவி செய்தது.  முதன் முதலில் டெலஸ்கோப்பைச் செய்த அவர், அதைக் கொண்டு 1610 ஆம் ஆண்டு ஜூபிடரின்  நான்கு பெரிய துணைக் கோள்களை  உலகிற்க்குச் சொல்லியிருந்தார். அவை ஒளியின் வேகத்துக்கும் எல்லையுண்டு என்று உறுதி செய்ய உதவியது.  எப்படி?


http://www.nbi.ku.dk/english/www/roemer/roemer/uddannelse/roemer/roemer.jpg/
ரோமர் [Ole Christensen Rømer 1644-1710], டென்மார்க்கைச் சேர்ந்த வானவியலாளர், ஒளியின் வேகத்திற்கும் எல்லையுண்டு என்பதை முதலில் நிரூபித்தவர்.

பாரிஸ் நகர அரச சபையைச் சார்ந்த வானவியல் ஆய்வுக் கூடத்தில், டென்மார்க்கைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய ரோமர் என்ற இளைஞன் அதன் இயக்குனர் காசினிக்கு உதவியாளராகச் சேருகிறான். உதவிக்கு வந்தவன், பின்னால் அந்த ஆய்வகம் சந்தித்துக் கொண்டிருந்த மிகப் பெரும் புதிரையும் விடுவித்தவனாகவும் ஆனான்!!  அவனுக்கு கொடுக்கப் பட்ட வேலை, ஜூபிடரின் துணைக்கோள் ஐஒ Io ஜூபிடரைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரத்தை கணக்கிட்டுச் சொல்வதாகும்.  இது, கப்பல் மாலுமிகளுக்கும்,  வரைபடம் [map] தயாரிப்பவர்களுக்கும் இடத்தைப் பொறுத்து மாறாத கடிகாரமாய் [Standard Clock] இருக்கும். [ஆனால் அந்த முயற்சி பலனளிக்க வில்லை].


ஜூபிடரின் 67 சந்திரன்களில் ஒன்றான ஐஒ Io, 400 எரிமலைகளைக் கொண்டுள்ளது [சூரிய குடும்பத்திலேயே ரொம்ப ஆக்டிவ் ஆன இடம் இது!!] , இது ஜூபிடரை  ஒரு முறை  சுற்றி வர ஆகும் காலம் 42 மணி, 27 நிமிடம், 34 வினாடிகள். வாரத்துக்கு நான்கு முறை சுற்றி வருகிறது,  ஜூபிடரின் துணைக் கோள்களில் இதன் பாதையே ஜூபிடருக்கு அருகாமையில் உள்ளது.

பூமியிலிருந்து பார்க்கும்போது, தனது சுற்றுப் பாதையில் செல்லும் Io சில சமயம் ஜூபிடரின் நிழலில் ஒளிந்து கொள்ளும், சில மணி நேரங்களுக்குப் பின்னர் வெளியே வரும்.  இரண்டு அடுத்தடுத்த முறை அது ஒளிந்துகொள்ளும் நேரத்தையோ, அல்லது ஜூபிடரின் நிழலில் இருந்து வெளியே வரும் நேரத்தையோ வைத்து வேறுபாட்டை கணக்கிட்டால்  ஜூபிடரைச் சுற்றி வர ஆகும் காலம் எவ்வளவு என்று தெரியவரும். [இது இன்றைய கணக்கீட்டின் படி 42 மணி நேரம், 27 நிமிடம், 34 வினாடிகளாகும்.] Io ஜூபிடரைச் சுற்றி வர ஆகும் காலத்தை ரோமர் 1668 முதல் - 1677 வரை 70 முறை கணக்கிட்டார்.     இந்த விபரங்களை தொகுக்கும்போது ரோமருக்கு ஒரு விஷயம் விந்தையாகப் பட்டது.

Io ஒரு முறை ஜூபிடரைச் சுற்றி வர ஆகும் காலம் எவ்வளவு என்பது தெரியுமாகையால் அது எப்போதெல்லாம் ஜூபிடரின் நிழலில் இருந்து வெளியே வரும் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியும்.  ஆனால் நிஜத்தில் இது நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் Io கணக்கிடப் பட்ட நேரத்திலிருந்து சில வினாடிகள் காலம் கடந்து தோன்றியது. ஒரு மாதத்திற்கு அது நான்கு முறை ஜூபிடரைச் சுற்றுவதால் மொத்தமாக 3 1/2 நிமிடங்கள் காலதாமதம் ஏற்ப்பட்டது. இந்த கால தாமதம் ஆறு மாதங்களுக்கு [பூமி நேர் எதிரே செல்லும் வரை]  தொடர்ந்தது.  ஒவ்வொரு முறையும் ஏற்ப்பட்ட கால தாமதத்தையும் மொத்தமாக சேர்த்து ஆறு மாதங்களுக்கு 22 நிமிடங்கள் கால தாமதம் என ரோமர் கணக்கிட்டிருந்தார்.   அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு முறையும் கணக்கிடப் பட்ட நேரத்துக்கு சில வினாடிகள் முன்னதாகவே தோன்ற ஆரம்பித்தது. ஒவ்வொரு மாத இறுதியில் மொத்தமாகச் சேர்த்தால் வர வேண்டிய நேரத்துக்கு 3 1/2 நிமிடங்கள் முன்னதாக தோன்றியது, ஆறு மாத இறுதியில் வருட ஆரம்பத்தில் என்ன நேரத்துக் தோன்ற வேண்டுமோ அதே நேரத்துக்கு தோன்றியது. 

Io on Jupiters Edge
ஜூபிடரின் பின்னால் இருந்து வெளியே வரும் துணைக்கோள் Io
Io ஜூபிடரைச் சுற்றி வர ஆகும் காலம் பூமி எங்கே இருக்க வேண்டுமென்பதைப் பொறுத்து மாறுபட வேண்டியதில்லை என்பதில் ரோமர் உறுதியாக இருந்தார்.  அவ்வாறு காலதாமதம் ஏற்படக் காரணம், பூமிக்கும் ஜூபிடருக்கும் இடையே உள்ள தூரம் அதிகரிப்பதால், அந்த தூரத்தை கடப்பதற்கு ஒளி மேலும் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்வதால் தான் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.  இது எப்படி?  மேலும் விரிவாகப் பார்ப்போம்.

பூமி E1 நிலையில் இருந்து E2 நிலைக்கு இடஞ்சுழியாக [Anti -clockwise] சுற்றுகிறது.  E 1 ஆம் நிலையில் ஜூபிடருக்கு உள்ள தொலைவு E 2 ஆம் நிலைக்குச் செல்லும்போது படிப்படியாக குறைகிறது. மீண்டும் E 1 ஆம் நிலைக்குச்செல்லும்  அதிகரிக்கிறது. 
பூமி, ஜூபிடர் இரண்டுமே சூரியனைச் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும், இரண்டுமே நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டே இருப்பதால் இரண்டுக்குமிடையே உள்ள தொலைவு நிலையாக இருப்பதில்லை.  அது 63 கோடி கிலோ மீட்டர்களில் இருந்து 93 கோடி கிலோமீட்டர்கள் வரை மாறிக் கொண்டே இருக்கிறது.   முதலாவதாக இரண்டு கோள்களும் 63 கோடி கிலோ மீட்டர் இடைவெளியில் இருப்பதாக வைத்துக் கொள்வோம், ஒளியின் வேகம் வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ. என்பதால், இந்த தூரத்தைக் கடக்க அதற்கு முப்பத்தைந்து நிமிடங்கள் தேவைப்படும். ஆகையால், ஜூபிடரில் எது நடந்தாலும், உடனடியாக நமக்குத் தெரியாது, [தொலைநோக்கி மூலமே நீங்கள் நோக்கினாலும்], 35 நிமிடம் கழித்தே நமக்குத் தெரியும். 

ஜுபிடரின் முன்னால் Io, ஜூபிடரில் அதன் நிழலும் தெரிகிறது!!

ஜூபிடரின் சந்திரன்களில் ஒன்றான Io [ஐஒ] அதைச் சுற்றி வரும்போது அதன் பின்னால் செல்லும், மறைந்து சிலமணி நேரம் ஆன பின்னர் வெளிப்படும்.  அது ஜூபிடரைச் சுற்றி வர ஆகும் காலம் எவ்வளவு என்பதும் நமக்குத் தெரியுமாகையால் [42 மணி நேரம், 27 நிமிடம், 34 வினாடி] இன்றைக்கு எத்தனை மணிக்கு அது அவ்வாறு வெளியே வந்தது என்பது தெரிந்தால், அடுத்ததாக ஒரு சுற்று சுற்றி முடிந்து எப்போது அவ்வாறு வெளியே வரும் என்பதை நம்மால் கணக்கிட முடியும்.  தற்போது,  63 கோடி கி.மீ. தொலைவில் பூமி இருப்பதாகக் கொள்வோம்.  Io [ஐஒ] தோன்றி அடுத்த முப்பத்தைந்து நிமிடங்கள் கழித்து நம் தொலைநோக்கியில் அது தெரியும். பூமிக்கும் ஜூபிடருக்கும் இடையே உள்ள தூரம் மாறாமல் இருந்தால், 35 நிமிடங்கள் தாமதமாகப் பார்த்தாலும், ஒவ்வொரு 42 மணி நேரம், 27 நிமிடம், 34 வினாடிகள்  இடைவெளியில்   நாம்  Io ஜூபிடரின் பின்னால் இருந்து வெளியே வருவதைப் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் பூமி/ஜூபிடர் நிலையாக இல்லை. பூமி அதன் சுற்றுவட்டப் பாதையில் வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது, மணிக்கு ஒரு லட்சம் கிலோ மீட்டர்கள்.  ஆகையால் அடுத்த இரண்டுநாள் கழித்து Io ஜூபிடரின் நிழலில் இருந்து வெளியே வந்தாலும், நாம் கணக்கிட்ட நேரத்தில் நமக்கு அது தெரியாது.   அந்த 42 மணி நேரம், 27 நிமிடம், 34 வினாடிகள்  இடைவெளியில் பூமி   எவ்வளவு தூரம் ஜூபிடரை விட்டு விலகிப் போயுள்ளதோ அதற்குத் தகுந்தார்ப் போல மேற்கண்ட நேரத்துடன் மேலும் சில வினாடிகள் கழித்தே அது நமது தொலைநோக்கியில் தெரிய வரும். உதாரணத்துக்கு பூமி  ஜூபிடரில் இருந்து 42 லட்சம் கிலோ மீட்டர்கள் அந்த கால இடைவெளியில் விலகியிருந்தால், ஜூபிடரில் இருந்து புறப்பட்ட ஒளி நம்மை வந்தடைய 35 நிமிடங்களோடு மேலும் 14 வினாடிகள் தாமதமாகும்.  இன்று நாம் எதிர் பார்த்த நேரத்தை விட 14 வினாடிகள் தாமதமாக Io வெளியே வருவது தெரியவரும் [42 மணி நேரம், 27 நிமிடம், 48 வினாடிகள்]. பூமிக்கும்  ஜூபிடருக்கும் உள்ள தொலைவு தினமும் அதிகரித்துக் கொண்டே போய் 93 கோடி கிலோமீட்டர் ஆகும் சமயத்தில், ஜூபிடரில் இருந்து புறப்படும் ஒளி பூமியை வந்தடைய 51.7 நிமிடங்கள் பிடிக்கும்.   [அப்போது சூரியன் பூமிக்கும், ஜூபிடருக்கும் நடுவில் இருக்கும்]  எனவே நாம் எதிர்பார்த்ததை விட 16.7  நிமிடங்கள் கழித்தே Io ஜூபிடரின் நிழலில் இருந்து வெளியே வருவதைப் பார்க்க முடியும்.  [16.7 நிமிடங்கள் என்பது புவி வட்டப் பாதையின் விட்டத்தை ஒளி கடக்க எடுத்துக் கொள்ளும் நேரமாகும்.]  அதே மாதிரி,  மீண்டும் பூமிக்கும் ஜூபிடருக்குமுள்ள தொலைவு குறையும்போது, நீங்கள் கணக்கிட்டதை விட முன்பாகவே Io வெளியே  வருவதைப் பார்க்க முடியும். ரோமாரின் சோதனைகளில் இதுதான் நடந்தது. 

ஒருவேளை, ஒளியின் வேகம் முடிவிலி [Infinity] ஆக  இருந்திருந்தால், பூமிக்கும் ஜூபிடருக்குமிடையே உள்ள தூரம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு 42 மணி நேரம், 27 நிமிடம், 34 வினாடிகளுக்கும் ஒருமுறை Io ஜுபிடரின் பின்னால் இருந்து வெளியே வருவதைப் பார்த்திருக்க முடியும்.  இந்த மாறுபாடு இருந்தே இருக்காது.  ஆனால், அடுத்தடுத்து Io ஜூபிடரின் நிழலில் இருந்து வெளியே வருவதற்கான இடைவெளி ஆறு மாதத்திற்கு அதிகரித்துக் கொண்டே போகிறது, அடுத்த ஆறு மாதத்திற்கு இது குறைந்து கொண்டே வருகிறது,  ஆகையால், ஒளியின் வேகத்துக்கு எல்லை இருக்கிறது.  எங்கு எது நடந்தாலும் உடனடியாகப் பார்க்க முடியாது.  சூரியன் எட்டு நிமிடம் முன்பாக இருந்ததைத்தான் இப்போது நாம் பார்க்கிறோம், ஒன்றரை வினாடிகளுக்கு முன்பு இருந்த சந்திரனைத்தான் இப்போது நாம் பார்க்கிறோம்.  சில விண்மீன் கூட்டங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைத்தான் இப்போது நாம் பார்க்கிறோம்!!    அவ்வளவு ஏங்க, நம் முன்னால் 3 மீட்டர் தூரத்தில் உள்ள நம் நண்பரைக் கூட ஒரு வினாடியில் பத்துகோடியில் ஒரு பங்கு நேரத்துக்கு முன்னாடி அவர் இருந்ததைத்தான் நாம் பார்க்கிறோம்!!  அப்படின்னா நிகழ் காலத்துல நாம் இல்லவே இல்லியா, எப்பவும் பழசைத்தான் பாத்துகிட்டு இருக்கோமா.......அடங்கொப்புரானே!!


 இத்தகவல்களை தனது பாஸ் காசினியிடம் தெரிவித்தபோது அவர் அதை ஒப்புக் கொள்ளவில்லை, ஒளியின் வேகம் எல்லையற்றது என்ற கருத்தில் அவருக்கு அசையா நம்பிக்கை!!  


ஜீன் டொமினிக் காசினி Jean-Dominique Cassini (1625-1712) இத்தாலியில் பிறந்து பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வானவியளாலர்,  சனி கிரகத்தின் நான்கு சந்திரன்களையும், அக்கிரகத்தின் வளையங்களில் இடைவெளி இருப்பதையும் கண்டுபிடித்துச் சொன்னவர். இவர் தான் பாரிஸ் வானவியல் ஆய்வகத்தில் ரோமரின் பாஸ்!!


எந்த புதிய கண்டுபிடிப்பாக இருந்தாலும் ஆய்வுக்கூடத்தின் இயக்குனர்தான் அதை வெளியிட முடியும், அவர் மறுக்கிறார் என்ன செய்வது? இங்க இத்தனை வருஷம் குப்பை கொட்டிட்டோம், இனியும் நாம் கண்டுபிடிச்சத வெளியே சொல்லாட்டி அது சரியாக இருக்காதுன்னு நினைச்ச ரோமர், தனியாவே ஒரு கை பார்த்திடுவோம்னு முடிவு செய்தார்.  1676 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி பாரிஸ் அறிவியல் கழகத்தின் கருத்தரங்கில், அன்றைய தினம் ஜூபிடரின் பின்னால் இருந்து சரியாக 5:25:45 மணிக்கு Io வெளியில் வரும் என்று காசினி சொல்லியிருந்தார்.  ஆனால், ரோமர் பத்து நிமிடம் காலதாமதமாக 5:35:45 க்குத்தான் வரும் என்றார், அதைக் கேட்டார்கள், நம்பவில்லை, பார்த்தார்கள், ரோமர் சொன்னபடியே சரியாக நடந்தது!!  அவரது கட்டுரையை ஏற்று அறிவியல் கழகம் பிரசுரித்தது.  ஆனாலும் கடைசி வரை காசினி தனது தவறை ஒப்புக் கொள்ளவேயில்லை.



 ஒளியின் வேகத்தை கணக்குப் போடும் வேலையை கிறிஸ்டியன் ஹைஜன்ஸ் [Christian Huygens] ஏற்றுக் கொண்டார், பூமியின் சுற்று வட்டப் பாதையின் விட்டத்தை [Diameter] ஏற்ப்பட்ட மொத்த காலதாமதத்தால் வகுக்கும் போது ஒளியின் வேகம் கிடைக்கும்.  அவ்வாறு கணக்கிட்ட போது அவருக்குக் கிடைத்தது, 2,27, 000 கி.மீ/மணிக்கு.  ஆனால் உண்மையான வேகத்தை விட [~300,000 கி.மீ/மணிக்கு] இது 24% குறைவு.  இதற்க்குக் காரணம் அவர் உபயோகப் படுத்திய கடிகாரங்களின்  ஊசல் நீளம் வெயில் அடித்தலேயே மாறிவிடுமாம், அதனால் நேரமும் துல்லியமாக இருக்காதாம்!! மேலும் பூமியின் சுற்றுப் பாதையின் விட்டமும் அந்த காலகட்டத்தில் துல்லியமாகத் தெரிந்திருக்கவில்லை.  எனினும் இது ரோமரின் கண்டுபிடிப்புக்கு உண்டான பெருமையை எந்த விதத்திலும்  குறைத்துவிடவில்லை.

ரோமர் இதை அறிவித்த அடுத்த முப்பது வருடங்களில் துல்லியமான தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி, ஏற்ப்பட்ட மொத்த காலதாமதம் 22 நிமிடங்கள் அல்ல, 16.7 நிமிடங்கள் மட்டுமே, சூரியனுக்கும் பூமிக்குமிடையே உள்ள தொலைவு 14.4 கோடி கி.மீ. இவை இரண்டையும் போட்டுப் பார்த்தால் ஒளியின் வேகம் வினாடிக்கு 2.8742  லட்சம் கி.மீ. என கிடைக்க்கிறது, இன்றைய கணக்கீடான 3 லட்சம் கி.மீ. -க்கு மிக நெருக்கமாக இது உள்ளது, எனவே ரோமர் சிந்தனை சரியான பாதையில் தான் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது!!

இதன் பின்னர் டென்மார்க் திரும்பிய ரோமர் கோபன்ஹேகனில் திருமணம் முடித்து அந்நாட்டின் தலைமை வானவியலாளர் ஆனார்.  ஃபாரன்ஹீட்  வெப்பமானி செய்ய அவர் உதவியாக இருந்தார், செப்டம்பர் 19, 1710,தனது  65 வது வயதில் அவர் காலமானார்.  அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து இரண்டாயிரம் வருடங்களாக அறிந்திராத உண்மையை வெளிக்கொணர்ந்த ரோமரின் கண்டுபிடிப்பு அறிவியலுக்கு சிறப்பு வாய்ந்த பங்களிப்பு ஆகும் !!








இந்தப்  பதிவிற்கு  தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு சொடுக்கவும். 

18 comments:

  1. வணக்கம் சகோ தாஸ்,
    அருமையான பதிவு. எளிய தமிழில் இருப்பதும் கூடுதல் சிறப்பு. அறிவியலின் வரலாறு என்பதே தமிழில் சரியாக ஆவணப் படுட்த்ஹப்படவில்லை என்ற பிரச்சினையை இது போன்ற அறிவியல் பதிவுகளே நிவர்த்தி செய்கின்றன.

    நேரம் இருப்பின் இந்த சுட்டியில் உள்ள demo& சூத்திரத்தையும் சேர்த்து விளக்கி பதிவை நீட்டிக்கலாம் அல்லது இன்னொரு பதிவு இட வேண்டுகிறேன்.

    http://demonstrations.wolfram.com/RomersMeasurementOfTheSpeedOfLight/

    தொடர்ந்து கலக்குங்கள்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவுக்கு தகவல் சேகரிக்கும்போதே இந்தத் தளத்தையும் பார்த்திருந்தேன் சகோ, ஆனால் அதைப் இயக்குவது எப்படி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த பொத்தானை சொடுக்கினாலும் அது நகர மறுக்கிறது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டுமா என்று தெரியவில்லை, தங்களுக்கு விபரம் தெரிந்தால் சொல்லுங்கள் சகோ!!

      Delete
    2. Dear Das
      Kindly try these steps.You have to install.

      1.Download the CDF palyer(109 MB) and install in your system.

      2. copy the demo's embed code and paste in your post in HTML edit mode.
      []
      [same like including video files]

      3. come to compose mode,save and open the post.

      Thank you

      Delete
  2. எனக்கு அல்ல ஆனால் மற்றவர்களுக்கு பயன்படும் தகவல் என்பது நிச்சயம். தொடர்ந்து இது போல பல விஷயங்கள் தமிழில் எழுதப்பட வேண்டும். காரணம் அந்த துறையில் விரும்பி படிப்பவர்களுக்கு தாய் தமிழில் படிக்க இது போன்ற புயனுள்ள தகவல்கள் வேண்டும் என்பதுதான் என் கருத்து. வாழ்துக்கள்

    ReplyDelete
  3. அரிய கட்டுரை. ஏனென்றால் எனக்குப் புரியவில்லை.

    ReplyDelete
  4. சிறப்பான கட்டுரை நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. வாவ்............!! கோவி.கண்ணன் நம்ம கடையில!! ஆச்சரியமா இருக்கே!! முதல் வருகைக்கு நன்றி கோவி.கண்ணன், தொடர்ந்து வாங்க!!

      Delete
  5. பலருக்கும் உதவும் விளக்கமான கட்டுரை... நன்றி...

    (அந்த வாக்களிக்கும் முறையை அடுத்த tab-ல் திறக்குமாறு செய்யவும்... நன்றி...)

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொன்னபடியே மாற்றிவிட்டேன், Suggestion கொடுத்ததற்கு நன்றி.

      Delete
  6. தமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதே

    ReplyDelete
  7. பதிவு எழுத வந்ததற்கு வாழ்த்துக்கள்...நிறைய எழுதுங்கள்..

    ReplyDelete
  8. விரிவான விளக்கங்கள் நன்றி.

    ReplyDelete
  9. superb..!மிக அருமை...ஒளியின் வேகம் எவ்வாறு கணக்கிடப்பட்டது என்று குழம்பியிருந்த எனக்கு விளக்கம் கிடைத்தது!

    ReplyDelete
    Replies
    1. தற்போது ஒளியின் வேகத்தை அளக்க இம்முறை பயன்படுத்தப் படுவதில்லை, இதை விட மிகத் துல்லியமான முறைகள் வந்துவிட்டன. இருந்த போதும் ஒளியின் வேகத்திற்கு எல்லையே இல்லை என்ற காலகட்டத்தில், அது தவறு என உடைத்தெறிந்தது பெரிய சாதனைதான். வருகைக்கு நன்றி விஜயன்!!

      Delete