Wednesday, February 12, 2014

அரசியலில் ஏன் வாரிசுகளை உருவாக்கக்கூடாது?

வணக்கம் மக்கள்ஸ்!!

நடைமுறையில் வீட்டில் தாய் தந்தையரிடமுள்ள பழக்க வழக்கங்கள், செய்யும் தொழில், எடுத்துக் கொண்ட கொள்கைகள் போன்றவை அவர்களது குழந்தைகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை சாதாரணமாகக் காண முடியும்.  அப்பா அம்மா சகோதரி என எல்லோரும் மருத்துவத் துறையில் உள்ள குடும்பத்தில் உள்ள பையன் மருத்துவத் துறையிலேயே நுழைந்தால் வியப்பேதும் இருக்கப் போவதில்லை.  சிவாஜியின் மகன் பிரபு திரைத்துறையில் நுழைந்து பிரகாசித்தது தற்போது பிரபுவின் மகனும் நடிக்க வந்திருப்பது எல்லாம் அவர்களது குடும்பப் பின்னனியினால்தான் என்பது கண்கூடு.  சமுதாயத்தில் தாய் தந்தையர் செய்த தொழிலையே குழந்தைகளும் தேர்ந்தெடுப்பது அதிசயமான ஒன்றே இல்லை, அதற்க்கு மாறாக நடந்தால் தான் அதிசயம்!!  இப்படி இருக்கும் போது,  "ஒரு அரசியல் வாதியின் மகன் அரசியலுக்கு வரக்கூடாதா?  அப்பனைப் போல கட்சி தலைவராகவும், பின்னர் ஆட்சி பீடத்திலும் ஏறியமரக் கூடாதா?  இதிலென்ன தப்பு?" என்றெல்லாம் எழுப்பப் படும் கேள்விகள்  நியாயமானவை தானே!!


ஆம் நியாயமாகத்தான் தோன்றும், கொஞ்சம் புத்தியை உபயோகப் படுத்தி உற்று நோக்கினால் அதிலுள்ள ஓட்டைகள் தெரியும்.  முதலில் அரசியல் என்பதற்கும்,  மேலே சொன்ன தொழில்களுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது.  தொழில் என்பது பிழைப்புக்காக, பணம் சம்பாதிக்க செய்வது, அரசியல் என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காக.  பணம் சேர்க்க அல்ல.  என் அப்பன் மக்கள் சேவைக்காக தன்னை அற்பணித்துக் கொண்டவர், அவரைப் போல நானும் மக்களுக்கு உழைப்பதில் என்னை அற்பணித்துக் கொள்ளப் போகிறேன் என்றால் அது சரி, ஆனால் அப்பன் அரசியல் மூலம் கொள்ளையடிப்பதையே   தொழிலாகக் கொண்டவர், அவர் அடித்த கொள்ளையை நானும் தொடரப் போகிறேன் அதற்காக என்னை தலைவனாக விடுங்கள் என்றால் அது தவறு.

அப்பனுக்கப்புறம் கட்சியில் தலைமைப் பொறுப்பேற்க கட்சியின் மற்ற அனைத்து உறுப்பினர்களையும் விட நான் அதிகத் தகுதியைப் பெற்றுள்ளேன் ஆகையால் அடுத்த தலைவர் நானே என்றால் அது சரி,  அதைவிடுத்து தற்போதைய தலைவர் என் அப்பன் ஆகையால் இதை மட்டுமே தகுதியாக கொண்டு, மற்ற தகுதியுடைய தலைவர்களை எல்லாம் அமுக்கிவிட்டு அல்லது கட்சியிலிருந்து விரட்டிவிட்டு என்னை அடுத்த தலைவராக்குங்கள்  என்றால் அது தவறு. 

நடிகன் மகன் நடிகனானாலும் அவன் படங்கள் ஓடி வசூலித்தால் மட்டுமே மார்கெட்டில் நிற்க முடியும்,  தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இங்கே இருக்கிறது, இது எல்லா தொழில்களுக்கும் பொருந்தும்.  ஆனால், வாரிசு அரசியலில் சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் வித்தியாசம் தெரியாவிட்டாலும் கூட ஒருவர் கட்சித் தலைவராக இருக்க முடியும், ஜே ....... போட அதற்கு முன்னர் சேர்க்கப் பட்ட கூட்டம் தயாராக இருக்கும். 

அப்பனுக்கப்புறம் வாரிசு அரியாசனம் ஏறுவதற்கு மக்களாட்சி எதற்கு, மன்னராட்சியே இருந்திருக்கலாமே?  அரசியலை சேவையாக நினைக்காமல் தொழிலாக நினைப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்  கொண்டிருக்கலாம், அது அவர்கள்  சுதந்திரம், அவர்களை புறந்தள்ளி மக்கள் சேவை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட தகுதியான நபரைத் தேர்ந்தெடுப்பது வாக்களிப்பவரின் கைகளிலேயே இருக்கிறது. அது தான் மக்களாட்சி.


13 comments:

  1. அப்ப கொள்ளை அடிப்பதிலும் ஒரு ஜனநாயகம் வேணும்னு சொல்லுரிங்க.

    ReplyDelete
    Replies
    1. ஜனநாயகம் என்று ஆரம்பிக்கப் பட்டது இப்போது கொள்ளையடிப்பது என்றாகிவிட்டது !! ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம் நாடு எல்லா நிலையிலும் வாரிசுகள், கொள்ளை..... கொள்ளை............ இதில அதிசயம் என்னன்னா எல்லோருக்குமே இந்த உண்மை தெரியும், ஆனாலும் யாருமே இதைப் பெரிசா எடுத்துக் கொள்வதில்லை!!

      Delete
  2. ஏங்க? வாரிசு அரசியலுக்கும், பதவிக்கும் வரலன்னா கொள்ளையடிச்ச சொத்தெல்லாம் எப்படிங்க காப்பாத்தறது? அதுக்கு ஒரு லீகல் ப்ரொடெக்ஷன் வேணாமா?

    ReplyDelete
  3. படித்தோ படிக்காமலோ அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து - இன்றைக்கு உழவர்களின் வாரிசுகள் உழவுத் தொழிலை தொடர வேண்டுவது தான் முதலில் முக்கியம்... அதே போல் நெசவுத் தொழில்... சாக்கடைகளை சுத்தம் செய்வது அப்புறம்...

    ReplyDelete
  4. பழைய காலத்தில் குழந்தைகள் ஸ்கூல்-க்கு போயிருக்க மாட்டார்கள். அதனால் தாய் தகப்பன் கூடவே இருந்து அவர்கள் செய்யும் தொழிலை கற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தது. இந்த காலத்தில் 3 வயதிலிருந்து 21 வயது வரை எல்லோரும் ஸ்கூல்-க்கு போய் விடுகிறார்கள். அதனால் தந்தை தொழிலைப்பற்றிய அறிவு இப்போதுள்ள குழந்தைக்கு இருக்காது. இவ்வளவு ஏன் போறீங்க. இப்போதுள்ள எந்த பெண் குழந்தைக்கும் 21 வயது தாய் கூட இருந்தாலும் சமையல் தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. @ Alien

      சமைப்பது மட்டும் தான் தொழில் என்று பார்ப்பீர் போலிருக்கிறது!! பெற்றோரின் occupation குழந்தைகள் மீது influence செய்வதை பல குடும்பங்களில் பார்க்க முடியும். நான் பார்த்த குடும்பங்கள உங்களுக்குத் தெரியாது, எனவே உங்களுக்கே தெரிந்த சில உதாரணங்களை இங்கே தர விரும்புகிறேன்.


      சிவாஜி [பிரபு] , சிவகுமார் [சூர்யா, கார்த்தி] , டி இராஜேந்தர்[சிம்பு] , கமலஹாசன் [மகள் சுருதி], நடிகை ராதா மகள் , ஆந்திராவில் என் .டி .ஆர். [மகன்], சிரஞ்சீவி [மகன்], கன்னட நடிகர் ராஜ் குமார் [மூன்று புதல்வர்கள்] என எண்ணற்ற உதாரணங் களைத் தரலாம், இவர்கள் நடிக்க வந்தது.

      இளையராஜாவின் வாரிசுகள் மூவரும் இசைத்துறையின் பிரகாசிப்பது.

      வைரமுத்துவின் மகன் கவிஞரானது.

      கவாஸ்கர், டெண்டுல்கர் மகன்கள் கிரிக்கெட் ஆட வந்தது.

      எலக்டிரானை கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கிய JJ தாம்சனின் மகன், அதே
      எலக்டிரான் wave மாதிரி நடந்துகொள்ளும் என்று காண்பித்து நோபல் பரிசு வாங்கியது.

      மேற்கண்ட அத்தனையிலும் பெற்றோர் செய்யும் வேலையின் தாக்கம் பிள்ளைகளுக்கு இருக்கும் என்ற காரணத்தால் தான் என்பது எனது கருத்து.

      Delete
  5. அட்வைஸ் அரசியல் வாதிகளுக்கா நோக்கர்களுக்கா...அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற அசரீரி ஒலிக்கிறது

    ReplyDelete
  6. இப்போது அரசியலையும் ஒரு தொழிலாகத்தான் பாவிக்கிறார்கள்!

    ReplyDelete
  7. ஆட்சி அதிகாரத்தில் கொஞ்சநாட்கள் இருந்துவிட்டாலேயே 'இது நமக்கு மட்டும்தான், நம்மைத் தொடர்ந்து நம் குடும்பத்திற்கு மட்டும்தான்' என்ற மனப்பான்மை வந்துவிடுகிறது என்பதுதான் அவ்வளவு சிக்கல்களுக்கும் காரணம்.

    அதனால்தான் பிள்ளைகள் இருப்பவர்கள் அவசர அவசரமாகத் தங்கள் பிள்ளைகளை அறிமுகப்படுத்திவிடுகிறார்கள். எம்ஜிஆர் போன்றவர்கள்கூடத் தங்கள் வாரிசு என்று ஒருவரைஅறிமுகப்படுத்திவிட்டுத்தான் போகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. \\எம்ஜிஆர் போன்றவர்கள்கூடத் தங்கள் வாரிசு என்று ஒருவரைஅறிமுகப்படுத்திவிட்டுத்தான் போகிறார்கள்.\\நான் இக்கருத்திலிருந்து மாறுபடுகிறேன். எம்ஜிஆர் அமைச்சரவையில் இரண்டாமிடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன் மிகப் பெரிய திறமைசாலி, அடுத்து ஆர் எம் வீரப்பன், பண்ருட்டி இராமச் சந்திரன் போன்றோர் வல்லவர்கள், எம்ஜிஆர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், அவரிடம் மிகப் பெரிய இன்புளுயன்ஸ் கொண்டவர்கள். ஆனால் ஆளுமை [Charisma] இவர்கள் யாரிடத்திலும் இல்லை. எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு எந்த முக்கிய பொறுப்போ, ஏன் ஒரு எம் எல் ஏ வாகவோ கூட ஆக்கவில்லை. உப்பு பொறாத கொள்கை பரப்பு செயலாளர் பதவி மட்டுமே. சினிமா உலகில், தன்னுடைய பாணிக்கு சம்பந்தமேயில்லாத பாக்கியராஜை தனது வாரிசாக அறிவித்த போதிலும் அரசியலில் எனக்குப் பின்னர் கட்சியை வழிநடத்த இவர்தான் தலைவர் என்று யாரையும் எம்ஜிஆர் அறிவிக்க வில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அடுத்து கட்சியை வழிநடத்துவது என்பதில் நடந்த களேபரத்தில் நிலைத்து நின்று தொண்டர்களை ஒன்று படுத்தி, தனது ஆளுமையின் வாயிலாக தான் தான் அடுத்த தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவர் என்று நிரூபித்தவர் ஜெயலலிதா ஆவார். அதே சமயம் அண்ணா காலத்தில் இருந்து கருணாநிதி, எம்ஜிஆர்என அனைவரது மந்திரி சபையிலும் இரண்டாம் இடத்தை வகித்து வந்த நெடுஞ்செழியன் தனித்து போட்டியிட்டு, அவருடன் போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் இவரைக் காட்டிலும் அதிக ஓட்டுகள் வாங்கி டெபாசிட்டை தக்க வைத்துக் கொள்ள இவர் அதை இழந்தார். அதே சமயம் பண்ருட்டி ஒரு தொகுதி சீட்டை தக்க வைத்துக் கொண்டாலும் பெரிய தலைவராக முடியவில்லை, வீரப்பன் காணாமலேயே போனார். எனவே ஜெயலலிதா தலைவரானது தனது ஆளுமையினால் தானே தவிர நியமிக்கப் பட்டதனால் அல்ல என்பது எனது கருத்து.

      Delete
  8. அடாடா, ரொம்பவும் வரிந்துகட்டிக்கொண்டு பதில் சொல்லியிருக்கிறீர்கள் ஜெயதேவ். ஜெயலலிதாவின் அதிமுக வருகையை ஒரு மூன்றாம் மனிதராக, கட்சியின் தொண்டராக, அல்லது பத்திரிகைகள் மூலம் மட்டுமே ஒரு நிகழ்வு பற்றி அறிகிறவராக, வெளியிலிருந்து பார்க்கிறபோது என்ன தெரிகிறதோ.....அல்லது என்ன தெரியவேண்டுமென்று நினைத்து அவர்கள் அதற்கான மேடையையும் காட்சியையும் ஏற்படுத்துகிறார்களோ அது மட்டுமே உங்களுக்குத் தெரிந்து அதனைக் காரசாரமான வாதமாக வைத்திருக்கிறீர்கள்.

    சில நிகழ்வுகளில் பல முக்கியமான 'ராஜதந்திர மூவ்கள்' யாருக்கும் தெரியாமல் அண்டர்கிரவுண்டிலேயே நடந்துகொண்டிருக்கும். எல்லாமே கைகூடி கால நேரம் வரும்போது சம்பந்தப்பட்ட நிகழ்வு தூக்கிநிறுத்தப்படும். அதனை யார் எப்படிச் செய்யவேண்டும் என்பதுவரை ஏற்கெனவே நிர்மாணம் செய்யப்பட்டிருக்கும்.

    இப்போது இங்கே இவ்வளவுதான் சொல்லமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லும் "'ராஜதந்திர மூவ்கள்", "யாருக்கும் தெரியாமல் அண்டர்கிரவுண்டிலேயே" செய்யும் வேலைகளை எல்லா பயல்களும் செய்து கொண்டிருப்பான். ராஜதந்திர மூவ்கள், அண்டர்கிரவுண்ட் வேலைகளை வைத்தே ஒருத்தர் ஒரு ஆட்சியை பிடிக்க முடியும் என்றால் இதிலெல்லாம் கை தேர்ந்தவரான தில்லு முள்ளு கழகத் தலைவரே நிரந்தர முதல்வராக இருந்திருப்பாரே?!! அல்லது ஜெ வே தொடர்ந்து ஆட்சியில் இருக்கலாமே? அவ்வளவு ஏன் ஆர் எம் வீரப்பன், பண்ருட்டி நெடுஞ்செழியன் இவர்கள் எல்லாம் கூட முதலமைச்சர்கள் ஆகியிருக்கலாமே? இவர்களிடத்தில் என்ன இல்லாமல் போனது? அம்மாவை அரசியலில் தலைவராக்க வேண்டும் என முடிவு செய்து "'ராஜதந்திர மூவ்கள்", "யாருக்கும் தெரியாமல் அண்டர்கிரவுண்ட்" வேலை செய்தவர்கள் அதே வேலைகளைச் செய்து தாங்களே அரியணை ஏற முயற்சி செய்யவில்லை?

      ஆக நீங்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம், ஆனாலும் ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியின் தலைவராகி ஆட்சியைப் பிடிப்பது என்பது அதற்கேற்ற ஆளுமை தலைமைப் பண்புகள் கொண்டவரால் தான் முடியும். "'ராஜதந்திர மூவ்கள்", "அண்டர்கிரவுண்ட்" வேலைகள் நிச்சயம் காரணிகள், ஆனால் அவை ஒரு தலைவரை உருவாக்கும் அளவுக்கு முக்கிய காரணிகளாக இருக்க இயலாது என்பது எனது கருத்து!!

      அமுதவன் சார், நான் நீங்க சொல்வதை தவறு என்று சொல்கிறேன் என நினைக்கக் கூடாது. நான் பதிவு செய்வது என்னுடைய சொந்தக் கருத்து, அது எந்த அளவுக்கு ஏற்கத் தக்கது என்பது கேள்விக் குறியே, சரியாகவும் இருக்கலாம், கொஞ்சம் தவறாகவும் இருக்கலாம் அல்லது முற்றிலும் தவறாகவும் கூட இருக்கலாம், ஆனாலும் என் கருத்தை பதிவு செய்கிறேன் அவ்வளவுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி......!!

      Delete
    2. உங்கள் இரண்டு கருத்தும் எனக்கு உடன்படானதே.

      Delete