வணக்கம் மக்கள்ஸ்!!
சமீபத்தில் ஒரு நண்பர், தனிப்பட்ட முறையில் மிக நல்ல மனிதர், தனது கல்லூரிக் கால காதல் வாழ்க்கையைப் பற்றிய அவரது பேட்டியை ஒரு வார இதழில் வெளியானது குறித்து பதிவிட்டிருந்தார். காதலிச்சு திருமணம் செய்திருக்கிறார். வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். அதுக்கு மேல அது பத்தி நாம் ஒன்னும் சொல்லப் போவதில்லை. அவர் அத்தோட நிறுத்தியிருக்கலாம், ஆனா தான் எப்படி மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழித்து அவங்க அறிவுக் கண்களை திறக்கிறேன் என்பதையும் அதனுடன் கலந்துவிட்டிருக்கிறார். அங்கதான் நமக்கு இடிக்குது.
அவர் சொல்ல வருவது, "என் திருமணதிற்கு நல்ல நாள், கெட்ட நாள் எதுவும் பார்க்கவில்லை, ஏனெனில் பகுத்தறிவுப் படி அப்படியொரு நாள் இல்லை". ஆஹா..... அருமை........ விஞ்ஞான ரீதியா பார்த்தா இது சரிதான். நாம் இதையும் கேள்வி கேட்கப் போவதில்லை. அதையடுத்து ஒரு பாயிண்டைத் தூக்கி போடுகிறார். நான் பெரியார் பிறந்தநாளில் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், அது நடக்க வில்லை, பின்னர் காத்திருந்து அண்ணா திருமண நாளில் மணமுடித்தேன். இங்க தான் இடிக்குது. ஒரு தலைவர் 120 அல்லது 130 வருஷத்துக்கு முன்னாடி ஒருநாளில் பிறக்கிறார், ரைட்டு, அவர் பிறந்ததால் அந்த நாள் விஞ்ஞான ரீதியாக, பகுத்தறிவு ரீதியாக ஏதாவது ஒரு சிறப்புத் தன்மையைப் பெறுகிறதா? அந்த நாளில் திருமணம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் கொள்கையில் வெற்றியடைவீர்கள் என்று அர்த்தமா? தலைவர் பிறந்த நாளை மட்டும்தானா தேர்ந்தெடுக்க வேண்டும் பிறந்த நேரத்தையும் கண்டுபிடித்து அதே நேரத்தில் தாலி கட்டலாம். அதை ஏன் விட்டீர்கள்?
ஒரு தலைவர் பிறந்த நாள் செப்டம்பர் 15 என்றால், அடுத்தடுத்த மாதங்களிலும் 15 தேதி வரும், அதற்க்கெல்லாம் சிறப்பு எதுவும் கிடையாதா? அல்லது புதன் கிழமை பிறந்தார் என வைத்துக் கொள்வோம், ஒவ்வொரு புதன் கிழமைக்கும் ஏதாவது சிறப்பு இருக்காதா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றால், தலைவர் பிறந்த நாளில் இருந்து 365-தே கால் நாட்கள் இடைவெளியில் வரும் நாளுக்கு மட்டும் விஞ்ஞான ரீதியாக சிறப்பு வந்து விடுமா?
அதுசரி இன்னொரு தலைவர் பிறந்த நாளில் மணமுடித்தீர்கள், அந்த தலைவர் கொள்கை ரீதியாகவாவது உங்க தலைவரோடு ஒத்துப் போனவரா? கடவுள் என்று எதுவும் இல்லை, அதை கற்பித்தவன் முட்டாள், வணங்குபவன் காட்டுமிராண்டி, இதுதானே ஐயா உங்க தலைவரோட கொள்கை? ஆனா, அண்ணாவோட திருத்தப் பட்ட கொள்கை என்ன? "ஒன்றே குலம், [பரவாயில்லை தப்பில்லை விட்டுடடலாம்], ஒருவனே தேவன்!!" அதாவது கடவுள் ஒருத்தன்- இது தான் உங்க தலைவர் கொள்கையா? எப்படிப் பார்த்தாலும் இடிக்குதே ஐயா?
இப்படி ஒருத்தர் என்றால், இன்னொருத்தர் இருக்காரு. அவரோட பேரிலும் ஒரு மதி இருக்கு. அவர் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி உங்க கண்ணை திறந்து விடுபவர்.
ஒருத்தர் கேட்கிறார்,
"பெரியாருக்கு சிலை வக்கிறீங்களே, இது பகுத்தறிவா?"
அதற்க்கு பதில் இப்படி தருகிறார்:
"வாழ்ந்து மறைந்த தலைவர் தானே அவர், ஆகையால் அவருக்கு சிலை வைக்கலாம், அதற்க்கு மாலை போடலாம், மரியாதை செய்யலாம், தப்பேயில்லை.".
எனக்கு இங்க என்ன புரியலைன்னா, ஏன் மாலையோட மட்டும் நிறுத்தனும், தினமும் தேங்காய், பழம் வைத்து ஆரத்தி காட்டலாம், நல்லா பகுத்தறிவை பரப்புவதற்கு அருள் புரிக என்று வேண்டுதல்களை வைக்கலாம். என்ன தப்பு? நீங்க போட்ட ரோஜாப்பூ மாலையை ஏற்றுக் கொண்டு அதை நுகர்ந்து பார்த்து, "ஆஹா அருமையான வாசனை" என்று சொல்லத் தெரிந்த சிலைக்கு, நீங்க வைக்கும் தேங்காய், பழங்களையும் ஏற்றுக் கொள்ளத் தெரியாதா? [இதையும் சிலர் செய்யக்கூடும், யார் கண்டது!!] உங்க ஆசைகளையும் நிறைவேத்தி வைக்க முடியாதா? சிலைகள் கல்லு, அதை வணங்குவது மூடநம்பிக்கை என்றால் எந்த சிலைக்கும் அது பொருந்தும் தானே? அதென்ன கணக்கு, வாழ்ந்து மறைந்தவர் சிலைக்கு மட்டும் உசிர் வந்திடும் என்பது? உங்க தலைவர் சிலை கல்லோ, உலோகமோ அல்லது சிமாண்டோ தானே? அதெப்படி உங்க தலைவராக முடியும்? அவ்வாறு நினைப்பது முட்டாள் தனம் என்பது தானே உங்க கொள்கை, திரும்ப நீங்களும் அதையே செய்கிறீர்களே, இது தான் பகுத்து அறிந்ததா?
பகுத்தறிவுவாதிகளே, நீங்க உங்க அறிவை என்னைக்கும் உபயோகப் படித்தியதாகத் தெரியவில்லை. உங்க தலைவர் எனக்கு சிலையை வையுங்கடா என்றார், நீங்களும் பூம்........பூம்........ மாடு மாதிரி தலையாட்டி விட்டு செய்து வருகிறீர்கள் செம்மறி ஆடுகள் போல கேள்வியே கேட்காமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நான் பகுத்தறிந்தவன், சுயமாக சிந்திக்கக் கூடியவன், விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து எனக்கு உண்மை என்று பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன்......... இப்படியெல்லாம் டமாரம் அடிக்கும் நீங்கள் உங்கள் மதியை எந்த அளவுக்கு சிந்திக்கப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்? நீங்கள் என்றைக்காவது உட்கார்ந்து சிந்தித்திருந்தால் இந்த மாதிரி பகுத்தறிவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் பகுத்தறிவு வாதிகள் இல்லை, பகுத்தறியா வாதிகள்.
வணக்கம் மக்கள்ஸ்.........!!