Saturday, December 26, 2015

பீப்........ வந்தது வெள்ளச் சேதம் போச்சு.......டும்......டும்......டும்......


நம்ம வீட்டு சுவற்றில் திரியும் பல்லிகளின் வாலுக்கு ஒரு சிறப்பு குணம் உண்டு.  வேணும் போது பல்லியே கட் பண்ணி போட்டுடும், கொஞ்ச நாளில் திரும்பவும் அது வளர்ந்திடும்!!


அது சரி,  அந்த மாதிரி கட் பண்ணி போடும்அவசியம் பல்லிக்கு எப்போது வரும்?  பூனை மாதிரி அதை பிடிச்சு சாப்பிடும் பிராணிகள் மூலமா வரும்.  




பூனைகள் அவற்றை துரத்தினால், அந்த நேரத்தில தன்னோட வாலை  பல்லி கட் பண்ணி போட்டுட்டு ஓடிடும்.  அந்த வால் கொஞ்ச நேரம் துள்ளிக்கிட்டு கிடக்கும்.  அங்க வரும் பூனை அந்த வாலை காலால் சீண்டி விளையாடிப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பல்லி எஸ்கேப்!!



இந்த பதிவுக்கும்,  ஊடகங்களும், மக்களும்  மழையால் வந்த பிரச்சினைகள் அத்தனையும் மறந்துவிட்டு பீப் சாங் பற்றியே பேசிக் கொண்டிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!  ஜெயலலிதா பல்லி என்றும், பீப் சாங் பல்லி வால் என்றும்,  அரசு மழைப் பிரச்சினையை கையாண்ட விதத்தால் மக்களின் கோபம் பூனை என்றும் சம்பந்தப் படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.







Wednesday, December 23, 2015

அப்ப‬ 15 வயசுல பண்ணா தப்பு இல்லயா...................??

\\சிறார்களின் தண்டனை வயது 18 வயதிலிருந்து 16 வயதாக குறைப்பு
‪#‎அப்ப‬ 15 வயசுல பண்ணா தப்பு இல்லயா....\\ ன்னு நண்பர்கள் கேட்கிறார்கள்.
தப்பு செய்பவர்கள் ஒருபுறம், மறுபுறம் குற்றம் சுமத்துபவர்கள்.  டெல்லியில் அந்த பெண்ணை கொலை செய்தவனை நினைத்தால் இன்னமும் வயதை குறைத்து விடலாம் என்று தோன்றினாலும் நம்ம போலீஸை நினைத்தால் கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கிறது.  ஐந்து வயது குழந்தை மீது கஞ்சா வழக்கு பதிந்தனராம்.  இன்னொரு வழக்கில் ஒரு வயது குழந்தை மீது ஏதோ குற்றச் சாட்டு, கைது செய்து வழக்கு பதிவு செய்ததாக செய்தித் தாட்களில் படித்தேன்.  இந்த மாதிரி செய்திகளைப் படித்த போது பல நாட்கள் மன நிம்மதியின்றி தவித்தேன்.  ஒரு வயது, ஐந்து வயது குழந்தைகளுக்கெல்லாம்  என்ன தெரியும், அவர்களை அவ்வாறு செய்ய  ஒருத்தருக்கு எப்படிப் பட்ட கல் நெஞ்சமாக இருக்கும்? 

எனவே எதற்கும் ஒரு எல்லை கோடு அல்லது வரையறை உண்டு.  அவ்வாறு வரையறுத்த பின்னர் அதை மீற முடியாது, அது தான் சட்டம்.  மன்னர்கள் காலத்தில் சட்டங்கள் இருந்தாலும் ஒவ்வொரு வழக்கையும் மன்னனே விசாரித்து காலம், இடம், குற்றவாளி என பல கோணங்களில் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கினான்.  தற்போது அது சாத்தியமில்லை.  16 வயதுக்கு ஒரு நாள் முன்னாடி அவன் கற்பழித்தாலும் தையல் மெஷீனும், 10 000 ரூபாயும் கிடைக்கும்!!