Saturday, November 3, 2012

நான், எனது என்று நினைப்பதே குற்றமா? ஆன்மீகத்தில் அ.....ஆ........

நான், எனது -இந்த இரண்டு வார்த்தைகளும் அகந்தையைக் குறிப்பதாகவும், ஆன்மீகத்தில் முன்னேற நினைப்பவர்களுக்கு இது தடைகள் எனவும் ரொம்ப நாளாக பல இடங்களில் படித்து வந்துள்ளேன்.  தற்போதும் இது குறித்து நம்மாளுங்க எழுதிக்கிட்டுத்தான் இருக்காங்க  அவங்க ஒரு கதையை உதாரணமா குடுக்குறாங்க.

ஒரு மன்னன் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்குப் போனாராம், உள்ளே நுழைந்ததும்,

"யார் வந்திருப்பது?" என முனிவர் கேட்டாராம், அதற்க்கு,

"நான் மன்னன் வந்திருக்கிறேன்" என்று அரசன் சொன்னான்னாம்.

"நான் செத்த பின்பு வந்து பார்" என்று முனிவர் பதிலளித்தாராம்.  மன்னனுக்கு இது பெரிய குழப்பம், அதெப்படி முனிவர் செத்த பின்னர் அவரைச் சந்திக்க முடியும் என்று.  உடனே அவரது மதிநிறைந்த அமைச்சர்கள் விளக்கம் குடுத்தார்களாம், நான் செத்த பின்பு என்றால் தங்களிடம் உள்ள நான் என்ற அகந்தை மன்னா, அதை விட்டொழித்து போய்ச் சந்திக்க வேண்டும்.  அதைக் கேட்ட மன்னன் திரும்ப சென்று

"அடியேன் வந்திருக்கிறேன் " என்றானாம், உடனே முனிவர் சந்தித்தாராம்.  [அகந்தையை  ரொம்ப சீக்கிரமா விடுறதுக்கு இப்படியெல்லாம் வழி இருக்கு போல!!].

இது ஒரு கதை.  அடுத்து எனது என்ற வார்த்தையை மட்டும் நம்மாளுங்க சும்மா விடுவார்களா!!  அதற்க்கு அர்த்தம் கற்ப்பிக்கிறார்கள்.   இங்க உலகில் உள்ளது எதுவுமே நமக்குச் சொந்தம் இல்லையாம், எழுத வச்சிருக்கும் பேனாவைக் கூட என்னதுன்னு சொல்லக் கூடாதாம், சொன்னால் அகந்தை வந்துடுமாம்.  இத்தனையும் சொல்ற பயலுக உண்மையில் எதையாச்சும் விட்டுடுவாங்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை.  வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதிச்சிருக்கே, அதில் என்னதில்லைன்னு எவ்வளவு நீ விட்டுட்டு இருக்கே என்று கேட்டால், "எதுவுமே என்னதில்லை, எல்லாம் என்னோட பெண்டாட்டிக்கும் பிள்ளை குட்டிங்களுக்கும் விட்டு கொடுத்திட்டேன்னு சொல்லுவானுங்க!! வியாக்கியானம் மட்டும் வண்டி வண்டியா ஏகத்துக்கும் அவிழ்த்து விட்டுகிட்டு இருப்பானுவ.

நல்ல ஆசிரியராக இருக்க வேண்டுமானால் முதலில் நல்ல மாணவனாக இருந்து கசடறக் கற்க வேண்டும், கற்ற பின்னர் அதற்க்கு தக நிற்க வேண்டும், பின்னர் தான் போதிக்க முடியும்.  ஆனால், நம்மில் எவருமே  மாணவனாக இருப்பதில்லை நேரா வாத்தியாராகி விடுகிறார்கள்.  அடிப்படைத் தகுதியோ, ஆசிரியரோ தேவையே இல்லை.  நேரடியா போதனைதான்.  இவன் மாணவனாக இருக்க மாட்டான், ஆனால் இவனுக்கு சிஷ்யர்கள் வேண்டும், அதுவும் ஆயிரக் கணக்கில் வேண்டும்.  ஆன்மீகத்தைப் போதிக்க ஆசிரியரே தேவை இல்லை என்று இவன் போதித்துக் கொண்டிருப்பதுதான் விந்தையிலும் விந்தை.  எல்லாம் உனக்குள்ளே இருக்கிறது என்றால், அவனவனுக்கே தெரிந்து விடுமே அப்புறம் உன்னோட போதனைகள் எதற்கு?  இந்த மாதிரி ஓட்டை தத்துவங்களில் உள்ள கூமுட்டைத் தனம் ஒருவருக்கும் புரிவதில்லை!!

சரி இப்போது விஷயத்திற்கு வரும்.  நான், எனது என்பதற்கு அர்த்தம் தான் என்ன?  அதை ஏன் விட்டொழிக்க வேண்டும்?

பொதுவாக நீங்கள் யார் என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம்?

"நான் ஜெயதேவ்"- யோவ்  உன் பேரு என்னன்னு நான் கேட்கவில்லை, நீ யாருன்னு தான் கேட்டேன்.

"நான் ஜெயதேவ், பச்சைத் தமிழன்" -யோவ் நீ எங்கே பிறந்தேன்னு கேட்கவில்லை, நீ யாருன்னுதான் கேட்டேன்.

"நான் கந்தசாமியின் மகன்"  யோவ் உங்கப்பன் பேரு என்னன்னா கேட்டேன்?  நீ யாருன்னுதான் கேட்டேன்.

"நான் மன்னார் & கோ வில்  ஆணி பிடுங்கறேன்"  -அது உன் தொழிலு, நீ யாருன்னு இன்னமும் சொல்லவில்லை.

"பாருங்க இந்த கையீ, காலு, தலை எல்லாம் சேர்ந்த இந்த உடம்புதான் நானு "- சொல்லும் போதே என்னோட கை, என்னோட தலைன்னு சொல்றே, என்னோட காரு, என்னோட பைக்கு என்பது போல, காரோ, பைக்கோ நீ இல்லை.  அப்படின்னா அதெல்லாம் உன்கிட்ட இருக்கு,  அதே மாதிரி இந்த உடம்பும் என்னோடதுன்னு சொல்றே, அதனால இந்த உடம்பு உன்கிட்ட இருக்கு.  அப்ப நீ இந்த உடம்பும் இல்லை, நீ யாரு?

"ஐயா சாமி, ஆளை விடுங்க!!"

ஆன்மீகத்தின் அரிச்சுவடி "நான் யார்" என்பதில் தான் ஆரம்பிக்கிறது, கண்ணனும் அர்ஜுனனுக்கு இந்த போதனையில் தான் கீதையை ஆரம்பிக்கிறார்.

குழந்தைப் பருவம், வாலிப வயது வழியாக வயதான தோற்றம் வரை ஆன்மா வெவ்வேறு உடல்களை இப்பிறவியில் எடுப்பது போல இந்த உடல் முற்றிலும் பயனற்று போகும் போது இறப்பு ஏற்ப்பட்டு வேறு உடலுக்குச் செல்கிறது.  தன்னை உணர்ந்த ஆன்மா இத்தகைய மாற்றங்களைப் பார்த்து குழம்பிப் போவதில்லை. [ப.கீ.-2.13]
இந்த தேகம் ஒரு எந்திரத்தைப் போல [யந்த்ரா ருதானி மாயயா  -ப.கீ.-18.61], அதனுள் நாம் உட்காரவைக்கப் பட்டிருக்கிறோம்.  இந்த யந்திரம் இரண்டு பிரிவுகளாக ஆக்கப் பட்டிருக்கிறது.  ஒன்று நம் புலன்களுக்கு அறியும் வகையிலான ஸ்தூல சரீரம், இது நீர், நெருப்பு, வாயு, நிலம் ஆகாயம் [இடத்தை அடைத்துக் கொள்ளும் பண்பு] ஆகியவற்றால் ஆனது.  இன்னொன்று மனம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றால் ஆனா சூட்சும சரீரம் இது நம் ஐம்புலன்களுக்கும் புலப்படாது [பார்த்தல், நுகர்தல் ,கேட்டல், சுவைத்தல், தொடுதல்].  உணர மட்டுமே முடியும்.  எல்லோருக்கும் புத்தி இருக்கிறது என்று தெரியும், ஆனால் அது கருப்பா சிவப்பா என்று தெரியாது, இனிக்குமா புளிக்குமா என்று தெரியாது.  எல்லோருக்கும் மனம் இருகிற தென்றும் தெரியும், ஆனால் சொரசொரப்பாக இருக்குமா, மென்மையாக இருக்குமா என்று யாருக்கும் தெரியாது.  எனவே இவை சூட்சும சரீரம் என்று பெயர்.  இவற்றுக்கும் உள்ளே உட்கார்ந்திருப்பது தான் ஆன்மா, அது தான் உண்மையில் நாம் என்பதாகும்.  ஆனால், இந்த ஸ்தூல, சூட்சும சரீரங்களை நாம் என்று நினைக்க வைப்பது ஒன்று இருக்கிறது.  அது தான் அகங்காரம்.

நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் [வெற்றிடம்], மனம், புத்தி அகங்காரம் இந்த எட்டும் என்னுடைய பிரிக்கப் பட்ட ஆற்றலே.  [ப.கீ. 7.4]

 எனவே, நான் என்று நினைப்பதே தவறல்ல, ஆனால் நான் இந்த தேகம் தான் என்று நினைக்கிறோம் அல்லவா, அது தான் மாயை, அந்த மாயையில் இருந்து தான் வெளியே வர வேண்டும். அந்த நான் என்பதைத்தான் விட்டொழிக்க வேண்டும்.  அதே சமயம், நான் ஆன்மா, இறைவனின் பிரிக்க முடியாத அங்கம் என்ற நிஜ ஈகோ வளர வேண்டும்.

அடுத்து எனது என்பதன் பொருள், இந்த தேகத்திற்க்குச் சொந்தமானதெல்லாம், என்னுடையது என்று நினைக்கிறோம் அல்லவா அந்த எண்ணம்.  நான் தமிழன், இந்தியன், ஆண், பெண், கருப்பானாவன், சிவப்பானவன், இன்ன சாதியைச் சார்ந்தவன், இன்னாருடைய புருஷன், இன்னாருக்கு தகப்பன், நான் அறிவாளி, நான் முட்டாள்  போன்ற அத்தனையும் நான் இந்த தேகம் என்ற எண்ணத்தால் வருவதே.  இந்த தேகமே நாம் இல்லை என்பதால் இந்த தேகத்தால் வரும் எதுவுமே நாம் இல்லை.

உண்மையில் நாம் ஆன்மா, இறைவனின் நிரந்தர ஊழியர்கள், இந்த நிஜ ஈகோ நமக்குள் வளர வேண்டும், அது வளர கலி யுகத்தில் இறைவனின் திருநாமங்களை பாடி வர வேண்டும்!!
  

8 comments:


  1. நல்ல பதிவு
    நான் யார் என்ற கேள்வியே ஆன்மீகத்தின் முதல் கேள்வியும் கடைசி விடையும்.
    கீதை விளக்கங்கள் அருமை...இது உங்களுடையதா? வேறு இடத்தில் இருந்து எடுத்திருந்தால் அது பற்றி சுட்டி கொடுங்கள்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. http://www.asitis.com/
      http://ebooks.iskcondesiretree.info/index.php?q=f&f=/pdf/Spiritual_Scientist
      http://ebooks.iskcondesiretree.info/index.php?q=f&f=%2Fpdf%2F00_-_Srila_Prabhupada

      Delete
    2. வருகைக்கு நன்றி புரட்சிமணி. ஆன்மிகம் குறித்து சொந்தமாக எழுதும் தகுதி எதுவும் எனக்கு இன்னமும் வந்துவிடவில்லை சுட்டிகள் கொடுத்துள்ளேன், இனி உங்களுக்கு வானமே எல்லை!!

      Delete

    3. சுட்டிகளுக்கு மிக்க நன்றி.
      //ஆன்மிகம் குறித்து சொந்தமாக எழுதும் தகுதி எதுவும் எனக்கு இன்னமும் வந்துவிடவில்லை //
      தியானம் செய்யுங்கள் எல்லாம் அருவி மாதிரி தானா கொட்டும் :)

      Delete
    4. \\தியானம் செய்யுங்கள் எல்லாம் அருவி மாதிரி தானா கொட்டும் :)\\ இப்படி தியானம் பண்ணி கொட்டியதைத்தான் ஊர் முச்சூடும் கடை போட்டு வித்துகிட்டு இருக்கானுவளே, நான் வேறயா.........!!

      Delete
  2. நான் என்று மனிதன் உடலையும் உடல் சார்ந்த விசயங்களையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்! ஆனால் நான் என்பது ஒரு அடையாளம் என்று தெரிவதில்லை! எல்லாத் தகவல்களுமேஅருமை! நன்றி!

    ReplyDelete
  3. செத்துப் பிழைத்தவனுக்கு மிகச் சாதாரண வார்த்தைகள்...

    இந்த கலியுகத்தில் பல பேருக்கு கடைசி காலத்தில் புரியும் இரண்டு வார்த்தைகள்...

    நன்றி...

    ReplyDelete
  4. ஆஹா, கடைசில நான் யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்க!

    ReplyDelete